PUBLISHED ON : ஆக 15, 2020

நாட்டின் ஒற்றுமை பண்பை உயர்த்த, வணங்கி பாடுவது தேசியகீதம். தமிழில் நாட்டுப்பண் என்கிறோம். ஐரோப்பாவில், 19ம் நுாற்றாண்டில், இந்த வகை பாடல்கள் தோன்றின.
நம் நாட்டுப்பண், 'ஜன... கண... மன...' என, துவங்குகிறது. இதை, நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூர், வங்க மொழியில் இயற்றினார். நாட்டின் மீது அன்பும், பற்றுணர்வும் மிகும் வகையில் உள்ளது. பாடும்போது, அனைத்து மாநில மக்களின் பழக்க வழக்கம், வரலாறு, உயர்ந்த கொள்கை மற்றும் நாட்டுப்பற்று நெஞ்சில் நிழலாடி ஒற்றுமையை வலியுறுத்தும்.
நம் தேசியகீதம்...
* கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது
* இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு டிச., 27, 1911ல் கோல்கட்டாவில் நடந்தது. இதில், சரளாதேவி சவுதுராணி என்பவருடன் இணைந்து முதன்முதலாக பாடினார் தாகூர்
* தத்துவபோதினி இதழில், 'பாரதவிதாதா' என்ற தலைப்பில், 1912ல் பிரசுரமானது
* ஆங்கிலத்தில், 'மார்னிங் சாங் ஆப் இந்தியா' என்ற தலைப்பில், 1919ல் மொழியாக்கம் செய்தார் தாகூர். அந்த கையெழுத்து பிரதி, ஆந்திர மாநிலம், சித்துார், மதனப்பள்ளி, தியசபிகல் கல்லுாரி நுாலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
அந்த கல்லுாரி முதல்வராக இருந்த ஜேம்ஸ் ஹெச் கசின்ஸ், தாகூரின் நெருங்கிய நண்பர். அவரது மனைவி மார்கரெட் கசின்ஸ், மேற்கத்திய இசையில் வல்லுநர். இவர்தான், தேசியகீதத்துக்கு, 1911ல் மெட்டமைத்தார். அதே மெட்டில் தான் இன்றும் இசைக்கிறோம்
* இந்திய தேசிய ராணுவத்தின் கீதமாக இருந்தது. அதற்காக இசை அமைத்த கேப்டன் ராம்சிங்கை, தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தார் நேதாஜி
* நாட்டுப்பண் இசைக்கும், 100 ஆண்டு வரலாற்றை போற்றும் வகையில்
டிச., 27, 2011ல் நாடு முழுவதும், வண்ணமிகு கொண்டாட்டம் நடந்தது. அன்று ஆந்திரமாநிலம், மதனப்பள்ளியில், 1 லட்சம் குழந்தைகள் பங்கேற்று சேர்ந்திசையாக நாட்டுப்பண் இசைத்தனர்.
- ஏற்காடு இளங்கோ
