PUBLISHED ON : ஜூன் 13, 2014

சுரேஷும், ரவியும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தனர்.
சுரேஷுக்கு கணிதம் என்றால் வேப்பங்காய் போல் கசந்தது. மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். கணிதப் பாடத்தில் மட்டும் விருப்பம் இல்லை.
ரவிக்கு கணிதப்பாடம் தேனாய் இனித்தது. ஆனால், இலக்கணத்தில் அவன் மனம் ஈடுபாடு காட்டவில்லை.இலக்கணம் தவிர, மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான்.
ரவிக்கு, சுரேஷ் இலக்கணம் கற்றுக் கொடுத்தான். ஏனோ அது ரவிக்கு புரியவில்லை.
சுரேஷுக்கு, ரவி கணிதப் பாடம் கற்றுக் கொடுத்தான். ஏனோ கணிதம் அவனுக்குப் புரியவில்லை. இருவரும் சாதாரண மதிப் பெண்களைப் பெற்று பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சி அடைந்து வந்துவிட்டனர்.
இப்போதும் இருவரும் பத்தாம் வகுப்பில் அருகருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர். முதல் பாட வேளை ஆரம்பமானது.
கணித ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். அவர் கணிதப்பாடத்தின் சிறப்பைப் பற்றி பின்வருமாறு கூறினார்.
''கணித அறிவு ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் முக்கியமானது. கணித அறிவு இருப்பவன் எத்தகைய சிக்கலான விஷயத்தையும் எளிதில் தீர்த்துவிடும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். கணித அறிவு நிதித்துறையோடு தொடர்புடையது. கணித அறிவை முழுமையாகப் பெற்றிருப்பவனை எவராலும் ஏமாற்ற முடியாது,'' என்றார்.
கணித ஆசிரியர் பேசிய பேச்சை சுரேஷ் தெளிவாகப் புரிந்து கொண்டான்.
கணித ஆசிரியர் மேலும், ''நீங்களெல்லாம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேறினால்தான், மேனிலைக் கல்வியாண்டில் காலெடுத்து வைக்க முடியும். அதனால், எனக்கு இந்தப் பாடம் வரும், இந்தப் பாடம் வராது என எதையும் விருப்பு வெறுப்புடன் பார்க்காமல், அனைத்துப் பாடங்களையும் ஆர்வமுடன் படியுங்கள்,'' என்றார்.
அன்று முதல் சுரேஷ் கணிதப்பாடத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தினான். அனைத்துக் கணக்குகளையும் மிக எளிதில் போடுவதற்குத் தேர்ச்சி பெற்றான். பள்ளி முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்றனர்.
வழக்கம்போல, மறுநாள் காலையில் பள்ளி துவங்கியது. முதல் பாட வேளை. இலக்கண ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார். அவர் இலக்கணப் பாடத்தின் சிறப்பைப் பின் வருமாறு கூறினார்.
''மொழியே மக்களுக்கு விழி. அந்த மொழியை, அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களை அழியாமல் காப்பது இலக்கணம்தான். தமிழ் மொழி இன்றும் கூட நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் இலக்கணம்தான். எனவே, அனைத்து மாணவர்களும் இலக்கணப் பாடத்தை இனிமையாகப் படியுங்கள்,'' என்றார்.
இலக்கண ஆசிரியரின் அறிவுரையை ஏற்று ரவி இலக்கணப் பாடத்தில் மிகுந்த ஆர்வம் செலுத்தினான். தனக்கு இலக்கணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை தமிழ் ஆசிரியரை அணுகிக் கேட்டுத் தெளிவு பெற்றான்.
பத்தாம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வு வந்தது. மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதினர். சுரேஷ் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். ரவி தமிழ்ப் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தான். அவர்களுடைய ஆசிரியர்கள் சுரேஷையும், ரவியையும் பாராட்டினர்.
குட்டீஸ் எந்த பாடமும் எனக்கு வராது என்று நினைக்கக்கூடாது. விருப்பத்துடன் படித்தால் அதில் நீங்கள் சாதிக்கலாம்.
***
