
பஞ்சன்துருத்தி கிராமத்தில் வசித்தார் சுக்ரன். அந்த ஊரில் நடந்த செல்வந்தன் குடும்ப திருமணத்திற்குச் சென்றிருந்தார். பணக்கார வீட்டு திருமணம் ஆச்சே... ஆசை பொங்க முதல் பந்தியில் அமர்ந்தார்.
விருந்தில் வித விதமாக, கார, இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன. வாயில் எச்சில் ஊறியது. வயிறு முட்டச் சாப்பிட்டவர் திணறியபடி எழுந்தார்; தள்ளாடியபடி வீட்டை அடைந்து, படுக்கையில் விழுந்தார்.
அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால், மூச்சு விட முடியவில்லை. சிறிது நேரத்தில், 'ஐயோ... வயிறு வலிக்கிறதே...' என அலறியபடி புரண்டார்.
பக்கத்து வீட்டு நண்பர் ஓடி வந்தார்.
வயிறுமுட்ட விருந்து சாப்பிட்டதால் தான் துடிக்கிறார் என புரிந்து, 'கவலைப்படாதே... இரண்டு விரல்களை தொண்டைக்குள் விடு... வாந்தி எடுத்து விட்டால், வயிற்று வலி போய் விடும்...' என்று அறிவுரைத்தார்.
அதற்கு, 'நண்பனே... நல்ல வழிமுறை தான் சொல்கிறாய்... நடக்க கூடிய காரியமா இது... தொண்டைக்குள், இரண்டு விரல்கள் விடும் அளவு இடம் இருந்தால், விருந்தில் பரிமாறிய வாழைப் பழங்களை சாப்பிடாமல் வந்திருப்பேனா...' என்றார்.
மனதில் சிரித்தபடி, 'அடப்பாவி, கிடைக்குதே என்பதற்காக வாரி, வழிச்சு சாப்பிடக் கூடாது; வாந்தி எடுக்க முயற்சி செய்...' என, சற்றுக் கடுமையாக சொன்னார் நண்பர்.
மிகவும் கஷ்டப்பட்டு, வாந்தி எடுத்தார் சுக்ரன். வயிற்றுவலி, நெஞ்சு எரிச்சல் எல்லாம் பறந்தன. ஆர்வமாக சாப்பிட்ட உணவு எல்லாம் வாந்தியாக வெளியே விழுந்தது. இது கண்டு மிகவும் நொந்து போனார். அளவுடன் சாப்பிட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தார்.
குழந்தைகளே... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அளவுடன் உண்டு நலமுடன் வாழுங்கள்.

