தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கோட்டை மதிலில் வியத்தகு தொழில் நுட்பம்!

கோட்டை மதிலில் வியத்தகு தொழில் நுட்பம்!

கோட்டை மதிலில் வியத்தகு தொழில் நுட்பம்!


PUBLISHED ON : மார் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறப்பான நீர்வளம், மலைவளம், தேவையான மழைவளம், எதிரிகளிடம் இருந்து காக்கும் படைபலம் மற்றும் கோட்டை அமைப்புகளை கொண்டது தான், வளமிக்க நாடு என்று திருக்குறள் சொல்கிறது. இதில், எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் அரண் மிக முக்கியமானது. அதில் ஒன்று, நாட்டை சுற்றி அமையும் கோட்டை.

அதன் அமைப்பு பற்றி, பழந்தமிழ் இலக்கியமான புறநானுாற்றிலும், அதற்குரிய இலக்கணம் பற்றி, புறப்பொருள் வெண்பா மாலையிலும் விரிவான தகவல்கள் உள்ளன.

கோட்டை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ஆங்காங்கே சிறிய அமைப்புகளை உருவாக்கி, அதற்குள் அமர்ந்து, பணிகளை கவனித்து வந்தனர், பழந்தமிழ் வீரர்கள்.

மதிலை பாதுகாக்க முடக்கறை, ஞாயில், தோணி, இயந்திரம், மேவறை, விதப்பு, பதப்பாடு, கோசம் என்ற சிறு அமைப்புகளை உருவாக்கியிருந்தனர். இவை, பகைவர் நடமாட்டத்தை கண்காணித்து, தீவிர தாக்குதல் நடத்த வீரர்களுக்கு உதவின.

நாட்டு பாதுகாப்பில் பழந்தமிழர் உருவாக்கியிருந்த கட்டுமான அமைப்புகள் பற்றி பார்ப்போம்...

அலங்கம்: மதில், அகழி, மதில் மேல் மேடை மூன்றும், அகப்பா எனப்பட்டது. கோட்டை மதிலில் அமைந்த பாதுகாப்பு அமைப்பு, அலங்கம் எனப்பட்டது. இதை, கிளிக்கூண்டு அலங்கம் என்றும் கூறுவர். இதற்குள் ஒரு வீரர் நிற்கும் அளவு வசதி செய்யப்பட்டிருக்கும்.

உள்ளே இருப்பவரை, காண முடியாது. சிறிய துளைகளுடன் அமைந்து இருக்கும். இது போன்ற அலங்க அமைப்பு, செஞ்சி, திண்டுக்கல் கோட்டை மதில்களில் இன்றும் சிதைவடையாமல் உள்ளது.

அகழி: நாட்டு பாதுகாப்புக்காக, அரண்மனை மதில் அல்லது கோட்டையை சுற்றி அகழி அமைக்கப்பட்டிருக்கும். இது, நீர் நிரம்பிய கொடும் பள்ளம்; கிடங்கு என்றும் குறிப்பர். பழந் தமிழகத்தில், இருவகை நீர் அரண்கள் இருந்ததாக, தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஒன்று, நகரை பாதுகாக்கும் மதிலுக்கு வெளியே அமைந்த அகழி; மற்றொன்று மன்னனின் அரண்மனையை சுற்றி அமைந்த அகழி.

ஏவறை: எதிரிகள் மீது ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்த, கோட்டை மதிலில் அமைக்கப்பட்ட அறை போன்ற அமைப்பு. இது, கட்டுப்பாட்டு அறை போன்று செயல்படும். இதற்குள் அமர்ந்து கோட்டை மதில் மீது அமைக்கப்பட்டிருக்கும் பொறிகளை இயக்கி, எதிரிகளை விரட்டுவர் வீரர்கள்.

ஏப்புழை: கூரிய அம்புகளை எய்ய வசதியாக, மதிலில் அமைக்கப்பட்டிருக்கும் துவாரத்தை ஏப்புழை என்பர். இது பற்றி, பழந்தமிழ் இலக்கியமான சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டது.

ஐயவித்துலாம்: கோட்டை வாசலையும், அகழியையும் இணைக்கும் துாக்கு பாலத்தை, ஐயவித்துலாம் என அழைத்தனர். துாக்குபாலம் போல் செயல்படும். தமிழரின் தொழில்நுட்ப அறிவை பறைசாற்றுகிறது.

எழுவுஞ் சீப்பு: சிறைக்கதவு போன்று, இரும்பாலான ஒரு வாயில் கதவு அமைப்பு இது. எளிதாக, இடித்து உடைக்க முடியாது. ஐயவித்துலாம் என்ற துாக்குபாலத்தை இறக்கினால், இந்த அமைப்பு மேலே எழும்பும். ஐயவித்துலாம் அமைப்பை ஏற்றினால், இது இறங்கும் வகையில் தொழில்நுட்ப அறிவுடன் உருவாக்கப்பட்டிருந்தது.

குறும்பு: நாட்டின் எல்லைப்புறத்தை பாதுகாக்க, படையை நிறுத்தவும், படைக்கலங்களை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. சிறு கோட்டை போல் இருக்கும்.

குருவித்தலை: கோட்டை மதில் மேல், வில்வித்தை அறிந்த வீரர்கள் மறைந்திருந்து, அம்பு எய்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டது. குருவித்தலை போல காட்சி அளிக்கும். இது 'குற்றுழிஞை' என்றும் கூறப்படும்.

கொத்தளம்: இது கோட்டை மதில்சுவரின் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு. சுற்று மதில் மூலைகளிலும், மதிலின் நேரான பகுதியின் இடையிலும் கொத்தளம் அமைப்பது உண்டு. தாக்க வரும் எதிரிக்கு பதிலடி கொடுக்க வசதியாக அமைக்கப்பட்டிருந்தன.

ஞாயில்: மதிலின் மிகச்சிறந்த பகுதி இது. மறைந்திருந்து அம்பு எய்வதற்கு ஏற்ப வசதியாக உருவாக்கப்பட்டது. கோட்டை முற்றுகைக்குள்ளாகும் போது, எதிரிப்படையை விரட்ட வசதியாக இருக்கும். இதற்கு, ஏப்புழை என்ற பெயரும் உண்டு.

இரவு வானில் நட்சத்திரங்கள் எட்டி பார்ப்பது போல் கோட்டை சுவரில் சின்ன துவாரங்களுடன் துருத்தியபடியிருக்கும்.

தோட்டி: கோட்டை முன்புறம் அமைந்த காவற்காட்டில், பகைவர்களை தடுக்க நெருஞ்சி முள் போன்ற இரும்பு முட்கள் பரப்பப்பட்டு இருக்கும். கோட்டை மதிலில், பகைவர் ஏறமுடியாதபடி படர விடப்பட்டிருக்கும். தப்பி ஓடுபவர் காலில் மாட்டி இழுக்க வசதியாக, முளையடித்துக் கட்டிய இரும்புக் கொக்கியை, தோட்டி என்பர்.

பதணம்: கோட்டை மதிலுக்குள் வீரர்கள் மறைவாக நிற்க வசதியாக அமைக்கப்படும் மேடைகள், பதணம் என அழைக்கப்பட்டது.

தோணி: அம்புகள் வைக்கும் அறையை இந்த பெயரில் அழைப்பர்.

மதிலரும்புகள்: மதில் மேல் சிறிய அரும்புகள் போல காணப்படும் சிறிய சுவர் பகுதி. வீரர்கள் மறைந்திருந்து தாக்க வசதியாக வடிவமைக்கப்பட்டது. நெருங்கிவரும் எதிரிகள் மீது, வீரர்கள் மறைந்திருந்து தாக்குதல் நிகழ்த்துவர்.

மதில்மேல் சுவர்: மதிலில் சிறு சுவர் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். சிறு அரும்புகள் போலக் காணப்படும். இதன் பின்புறம் வீரர்கள் மறைந்திருந்து தாக்க வசதியாக வடிவமைக்கப்பட்டது. கோட்டையை நெருங்கி வரும் எதிரி மீது தாக்குதல் நடத்த ஏற்றவாறு அமைந்தது.

மதில் கதவு: நீண்டு வலிமையுடன் காணப்பட்டது. பொருத்தமான, தாழ்ப்பாளை கொண்டிருந்தது. யானைப்படை தாக்குதலையும் தாங்கக் கூடிய வகையில், கதவின் உட்புறம் மரச்சட்டங்களைப் பொருத்தி வடிவமைத்திருந்தனர். நிலைக்குமேல் கற்பலகையும் அதில் திருமகள் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

கோட்டை வாயில்: மன்னன் வலிமைக்கு அடையாளமாக திகழ்ந்தது. பகைவரை போரிட்டு வென்று, எதிரியின் பற்களை பிடுங்கி கோட்டை வாயிலில் பதித்ததாக, பழந்தமிழ் இலக்கியமான அகநானுாறு தெரிவிக்கிறது.



சுருங்கை
: இது நிலத்தடியில் அமைக்கப்பட்ட பாதையை குறிக்கும். எதிரிகள் யூகிக்க முடியாத இடத்திலேயே பெரும்பாலும், இதன் நுழைவு மற்றும் வெளியேறும் வாயிலை அமைப்பர். அதை, கற்பூழை என்று அழைப்பர். தற்போது, சுரங்கபாதை என அழைக்கப்படுகிறது.

இவ்வாறு, பழங்கால தமிழகத்தில் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பாதுகாப்பு அரண்கள் அமைந்திருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us