தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கழுகு, பருந்து, குயில்!

கழுகு, பருந்து, குயில்!

கழுகு, பருந்து, குயில்!


PUBLISHED ON : ஜூன் 19, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகேந்திரவர்மன் ஒரு பெரிய நாட்டின் அரசன். அவன் ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் இருந்தன. அவற்றை எல்லாம் அவன் தன் வீரத்தால் சேர்த்தான். அவனுக்கு மூன்று ஆண்மக்கள் இருந்தனர். மூவரும் மூன்று விதமானவர்கள். அவர்கள் நோக்கையும், போக்கையும் பார்த்து மகேந்திரவர்மன் மிகுந்த கவலை கொண்டான்.

'தான் அரும்பாடுபட்டு விஸ்தரித்து வைத்திருக்கும் இந்த நாடு, தனக்குப்பின் என்னவாகும்? இவர்கள் அதைத் திறமையாக நிர்வாகம் செய்வார்களா அல்லது பகைவர் கொண்டு போக விட்டு விடுவார்களா?'

மகேந்திரவர்மன் மிகுந்த கவலையோடு, இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனது நண்பர் ஒருவர் அங்கு அவனைக் காணவந்தார். அவருக்கு அரசனை அந்த நிலையில் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

''மகேந்திரவர்மனே! என்ன நடந்தது. ஏன் இப்படி இடி விழுந்தது போல் அமர்ந்திருக்கிறீர். எதுவானாலும் என்னிடம் சொல்லுங்கள். நாம் யோசித்து ஒரு தீர்வு கண்டுபிடிப்போம்,'' என்று ஆறுதலாகக் கூறினார்.

''என் யோசனை எல்லாம் எனக்குப் பிறகு இந்தப் பிள்ளைகள் எப்படி இந்த அரசைக் கட்டி ஆளப்போகின்றனர் என்பதே! இவர்கள் வலிமையாகவும், புத்திசாலிகளாகவும் இல்லாவிட்டால், இந்த நாட்டைப் பகையரசர்கள் படையெடுத்து அழித்துவிடுவார்களே! இவர்களில் யார் இந்த நாட்டின் அரசனாக வந்தால் இந்த அரசு காப்பாற்றப்படும்?'' என்று யோசனையோடு கூறினான்.

அரசனின் நண்பனும் புத்திசாலியுமான அவர், ''அரசே, கவலைப்பட வேண்டாம். உங்கள் பிள்ளைகளை ஒவ்வொருவராக அழையுங்கள். அவர்களிடம் சாமர்த்தியமாகச் சில கேள்விகளைக் கேட்கிறேன். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களில் யாரை அரசனாக்கினால் நாடு முன்னேறும் என்பதைத் தீர்மானிக்கிறேன். அதற்கு எனக்குத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்,'' என்று கேட்டார்.

அரசரும் அவருக்கு அனுமதி வழங்கினார். அவர் உடனே அரசனின் மூத்த மகனை அழைத்தார். அவன் மிக உயரமானவனாகவும், திடமானவனாகவும் விளங்கினான். ஆனால், அவன் நடையிலும், பார்வையிலும் ஒரு தேவையில்லாத அலட்சியம் தெரிந்தது. அவனிடம் மன்னனின் நண்பர்,''இளவரசே, உங்களைப் பார்த்தால் பெரும்வீரர் என்று தோன்றுகிறது. இருப்பினும் நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் இறைவனின் ஆணைப்படி உங்களை ஒரு பறவையாக மாற்ற விரும்பினால், என்ன பறவையாக மாற விரும்புவீர்கள்?'' என்று கேட்டான்.

மூத்த இளவரசன் ஒரு நிமிடம் யோசித்தான். அடுத்த வினாடி, ''நான் ஒரு கழுகாகப் மாற விரும்புவேன். ஏனென்றால், அதைப் பார்த்துதான் மற்றப் பறவைகள் பயப்படும். அருகில் நெருங்கியே வராது,'' என்றான்.

''அறிவாளி!'' என்று அவனை அனுப்பி விட்டு, இரண்டாவது இளவரசனை அழைத்தார். அவனும் நல்ல உயரமானவன். அவன் பார்வையிலேயே பராக்கிராமம் தெரிந்தது. அவன் கைகளை வீசி வேகமாக வந்து அவர்கள் எதிரே நின்றான். அவனிடமும், ''அறிவாளி இளவரசே, இறைவன் உங்களை இப்போது பறவையாக மாற்ற விரும்பினால் நீங்கள் என்ன பறவையாக மாற விரும்புவீர்கள்?'' என்று கேட்டான்.

அதற்கு அவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, ''நான் பருந்தாகத்தான் பிறப்பேன். ஏனென்றால், அதுதான் பறவைகளின் அரசனாக இருக்கிறது. அதனால் அதற்கு நல்ல மரியாதை கிடைக்கிறது,'' என்றான்.

''அறிவாளி!'' என்று அவனையும் அனுப்பிவிட்டு, அடுத்து மூன்றாவது மகனை அழைத்து வரச் செய்தார். அவன் பெயர் ஜனார்தன். அவன் வரும்போதே உற்சாகத்துடனும், சிரித்த முகத்துடனும் வந்தான். வந்ததும் நண்பரின் குடும்பத்தினரின் நலனை விசாரித்தான். அவனிடமும், ''அறிவாளி இளவரசே, இப்போது இறைவன் உங்களை ஒரு பறவையாக மாற்ற விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் எந்த பறவையாக மாற விரும்புவீர்கள்?'' என்று கேட்டார்.

ஜனார்தன் சிறிது நேரம் யோசித்தான்.

''ஐயா, இறைவன் என் விருப்பப்படி என்னை மாற்றுவதாக இருந்தால், நான் ஒரு குயிலாகப் பிறக்க ஆசைப்படுகிறேன். அது தன்னை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளாது. ஆனால், தன் இசையால் அது எல்லாரையும் மகிழ்விக்கும். அதே சமயத்தில், அது சாதுவான பறவை. யார் வம்பு, தும்புக்கும் போகாது. ஆகையால் அதற்கு தீமைகளும் வராது,'' என்று பொறுமையாகக் கூறினான்.

மன்னனும், நண்பரும் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வையால் பார்த்துக் கொண்டனர். பின்பு ஜனார்தனை அனுப்பி விட்டு, அவர்கள் பேசத் தொடங்கினர்.

''உங்கள் மூத்தமகன் மிகவும் வீரம் உள்ளவன். துணிச்சலாக சில காரியம் செய்து தனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்திக் கொள்வார். இறுதியில் தங்கள் நண்பர்களாலேயே வெறுக்கப்பட்டு அவர்களாலேயே பழிவாங்கப்படுவார். அவர் தனது கடைசி நாட்களை சிறையில் அனுபவிக்க வேண்டி வரலாம்!''

''உங்கள் இரண்டாவது மகன் மிகவும் சாமர்த்தியசாலி. குடும்பப் பெருமையை, பாரம்பரிய நற்பெயரைக் காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். இருப்பினும், அவரது ராஜதந்திரமான செயல்களால் இறுதியில் அவர் பல விரோதிகளைச் சம்பாதித்துக் கொள்வார். நேர்மைக்கு அவரிடம் பஞ்சம் இருக்கும். அவர் செய்யும் மறைமுகமான செயல்களே அவர்களுக்கு விரோதிகளைத் தேடித் தந்துவிடும். அவரது இறுதி நாட்களும் கூடப் பரிதாபத்துக்கு உரிய நாட்களாகவே இருக்கும்!''

''உங்கள் மூன்றாவது மகன் தன்னலம் கருதாது எல்லாரையும் நேசிப்பவர். அவர் எல்லாராலும் நேசிக்கப்படுவார். அவர் யாரிடமும் சண்டைக்குப் போகமாட்டார். அவரை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அனைவரும் நேசிப்பர். ஒரு காலத்தில் தங்களைக் காட்டிலும் அவர் அதிக நாடுகளுக்கு அதிபதியாக இருப்பார். அவர் மறைவு மிக அமைதியாகவும், எல்லாராலும் துக்கப்படக்கூடியதாகவும் இருக்கும்,'' என்றார்.

அந்த விஷயம் அன்று அத்தோடு முடிந்து போனது.

மூன்று இளவரசர்களும் வாலிபர்களாக வளர்ந்து யாராலும் ஜெயிக்க முடியாத பராக்கிரமசாலிகளாக மாறினர்.

நாட்கள் உருண்டோடி மாதங்களாகி, அவையும் வருடங்களாக ஓடி மறைந்தன. மன்னன் மகேந்திரவர்மன் இப்போது மிக வயோதிகனாகி விட்டான். அவரை வியாதிகள் மொய்த்துக் கொண்டன. கடைசியாக அவர் படுத்த படுக்கையானார். அவர் இறுதிகாலம் வந்தபோது மீண்டும் தன் ராஜ்ஜியத்தை யாரிடம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற குழப்பம் உண்டானது. உடனே தனது புத்திசாலி நண்பன் பல ஆண்டுகளுக்கு முன் தன் பிள்ளைகளைப் பற்றி அறிந்து சொன்னது நினைவுக்கு வந்தது.

தன் மூன்று பிள்ளைகளையும் அழைத்து அவர்களிடம் தனது கருத்தைச் சொன்னார். மூத்த புதல்வனை அருகில் அழைத்து, ''அப்பா, உனக்கு நம் நாட்டிலிருந்து மிக தூரத்தில் நான் வென்று இதுவரை என் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் மிகப் பெரிய மாளவநாட்டை அளிக்கிறேன். அந்த நாட்டை ஆட்சி செய்து, நீ மேலும், மேலும் பேரும் புகழும் பெற வேண்டும்,'' என்றார்.

இரண்டாவது மைந்தனை அழைத்து, ''அப்பா, உனக்கு இப்போது நாம் ஆட்சி செய்துவரும் இந்த கூர்ஜர நாட்டை அளிக்கிறேன்; நீ மன்னனாக முடி சூட்டிக்கொண்டு, மக்களை நல்ல முறையில் ஆட்சி செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்,'' என்று வாழ்த்தினார்.

மூன்றாம் மகனும், கடைசிப் பிள்ளையுமான ஜனார்தனை இறுதியாக அழைத்தார்.

''அப்பனே, உனக்குக் கொடுக்க என்னிடம் நாடு எதுவும் இல்லை. ஆனால், என்னிடம் இருக்கும் சேமிப்பிலிருந்து ஒரு பெரிய பெட்டி நிறைய தங்கத்தைக் கொடுக்கிறேன். நீ அதை வைத்து சமர்த்தாகப் பிழைத்துக் கொள்!'' என்றார்.

ஜனார்தனும், ''அப்படியே ஆகட்டும் தந்தையே,'' என்று அவரை புன்சிரிப்போடு வணங்கினான்.

சில நாட்களில் மகேந்திரவர்மன் இறந்தார்.

மகேந்திரவர்மனின் அறிவாளி நண்பர் சொன்னது போலவே, நடந்தது.

முதல் மகன் ஆரம்பத்தில் அவனது எல்லையற்ற பராக்கிரமத்தால் எல்லாரையும் கவர்ந்தான். நாளாக, நாளாக அவன் பராக்கிரமத்தைக் கண்டு அஞ்சியவர்கள் சதி செய்து அவனைச் சிறையில் அடைத்தனர். அவன் அங்கேயே தன் இறுதி நாட்கள் வரை இருந்து ஒருவரும் அறியாமல் மாண்டு போனான்.

இரண்டாமவன் மிக சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக நினைத்து எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டு இருந்தான். தனது மந்திரிகளையும், தளபதிகளையும் சிறிதும் யோசனை இல்லாமல் ஒருவரிடம் ஒருவர் பகை கொள்ளும்படியாக ஏவிவிட்டான். உண்மை வெளிவந்ததும் அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்த்து ஆத்திரமடைந்து அவனைச் சித்திரவதை செய்து நாட்டை விட்டே விரட்டி விட்டனர். அவன் தங்க நாடில்லாமல் நாடோடியாகத் திரிந்து ஏதோ ஒரு வெளிநாட்டில் இறந்துபோனான்.

ஜனார்தன் தன் பொறுமையைக் கைவிடாமல் மெதுமெதுவாக தனது அண்ணனின் ஆதிக்கத்தில் இருந்த கூர்ஜர நாட்டைப் பிடித்தான். அடுத்து சிறிது சிறிதாக மாளவ நாடும் அவன் கைக்கு வந்தது. மற்ற நாட்டு மக்களும் அவன் ஆளுகைக்குக் கீழ் இருப்பதைப் பெரிதும் விரும்பினர். நாளடைவில் அவன் பெருமை வெகுவாகப் பரவியது. சிறிது காலத்தில் பல நாடுகளையும் கைப்பற்றி, நல்ல முறையில் ஆட்சி செய்தான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us