PUBLISHED ON : ஜூன் 06, 2020

வெட்டான்குளம் அழகிய கிராமம். அங்குள்ள பள்ளியில், 6ம் வகுப்பு மாணவர்கள் படிப்பில் ஆழ்ந்திருந்தனர். பாடவேளை முடிந்ததும், 'அடுத்த மாதம், பாரதியார் நினைவு தினம் வருது; நம்ம பள்ளியில் பேச்சுப் போட்டி நடக்குது... யாரெல்லாம் பேச போறீங்க...' என்றார் ஆசிரியர் முத்தையா.
'மகேஷ்... மகேஷ்...' என்று கத்தினர் மாணவர்கள். பேச்சுப் போட்டிகளில் எல்லாம் முதல் பரிசு வென்றவன் அவன். எனவேதான் அவன் பெயரை பரிந்துரைத்தனர் சக மாணவர்கள்.
ஒரு குறும்புக்காரன் எழுந்து, 'ஐயா, விக்ரம் நல்லா பேசுவான்...' என்றான்.
மாணவர்கள், 'குபீர்' என சிரித்தனர்.
திக்கி திணறிப் பேசுவான் விக்ரம்; சாதாரணமாக முயலும் போதே வாய் குளறும். மாணவர்கள் கேலி சிரிப்புக்கு இடையே சுருங்கிய முகத்துடன், 'எனக்கு... சரி... யா... பேச்... சு... வரா... து...' என்று திக்கினான்.
'நீ மேடையில் பேசினால், சிறப்பாக இருக்கும்; உன் பெயரையும் போட்டியில் சேர்த்துக்கிறேன்... முயற்சி செய்...' என்றார் ஆசிரியர்.
அன்று மாலை -
வீட்டில் அழுதுகொண்டிருந்தான் விக்ரம்; காரணம் கேட்டார் அப்பா. போட்டியில் பங்கேற்க வேண்டியது பற்றி கூறினான்.
'கவலைப்படாதே... நுாலகத்தில் புத்தகங்களை படித்து, பாரதியாரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள். அவரது எழுத்து வாழ்க்கையின் முக்கிய தகவல்களை குறிப்பெடுத்து, ஒரு உரையை உருவாக்கு... அதை தினமும் பேசிப் பழகு...' என்று ஊக்கம் கொடுத்தார் அப்பா.
விக்ரமுக்கு தைரியம் வந்தது; தினமும், அதிகாலை எழுந்து குறிப்பெடுத்தான். மிகவும் முயன்று தயாரித்த உரையை, சத்தமாக வாசித்துப் பழகினான். வாய் திக்கிய போதிலும் நிறுத்தாமல் தொடர்ந்தான்.
போட்டி நாள் வந்தது.
முதல் போட்டியாளராக மகேஷ் பேசினான். 'பாரதியார் கண்ட கனவு' என்ற தலைப்பில் அருமையாகப் பேசினான். அனைவரும் அசந்து போயினர்.
கை தட்டலில் மேடையே அதிர்ந்தது.
அடுத்தடுத்து மாணவர்கள் பேச, கடைசியாக மேடையேறினான் விக்ரம். எல்லாரும் கேலியாகப் பார்க்க, தகவல்களை சிறப்பாக தொகுத்திருந்தான். அடுக்கு முறைப்படி பேச முயன்றான். வாய் திக்கியதால் தொடர்பு அறுந்தது. ஆனாலும் முயற்சி செய்தான். சிலர் ஏளனம் செய்து சிரித்தனர். அவன் உடைந்து போய்விடவில்லை.
போட்டி முடிவை அறிவித்தார் நடுவர்.
வழக்கம் போல, முதல் பரிசு பெற்றான் மகேஷ். தொடர்ந்த நடுவர், 'திக்கிப் பேசுனாலும், அருமையான கருத்துக்களை மிகவும் அழகாக தொகுத்து கூறினான் விக்ரம். அவன் முயற்சியைப் பாராட்டுகிறேன்...' என்று முடித்தார்.
'ஏன் இப்படி மேடையேறி அவமானப்பட வேண்டும்' என்று பலர் கேலி செய்ய, எதையும் பொருட்படுத்தாமல், வீடு திரும்பினான் விக்ரம்.
அடுத்த நாள் -
விக்ரம் வீட்டுக்குச் சென்றார் ஆசிரியர். அவன் அப்பாவை சந்தித்து மிகவும் வருத்தத்துடன், 'நான் தான் விக்ரமை போட்டியில் பங்கேற்க சொல்லி, அவமானப்படுத்தி விட்டேன்... என்னை மன்னியுங்கள்...' என்றார்.
'இல்லை ஐயா... நீங்க நல்லது தான் செய்திருக்கீங்க... இது தோல்வி அல்ல; விக்ரமுக்கு நல்ல அனுபவம் கிடைச்சிருக்கு... அந்த கட்டுரை தயாரிக்க, விவரங்கள் தேடி, கடுமையாக முயற்சி செய்தான். நுாலகத்தை பயன்படுத்துவது பற்றி கற்றுக்கொண்டான்
'அதனால தன்னம்பிக்கை வளர்ந்திருக்கு... கூச்சமின்றி மேடையேறி பேசியிருக்கான்; தைரியம் கிடைச்சுருக்கு. இந்த போட்டியில் பரிசு கிடைக்காமல் இருக்கலாம். எதிர் காலத்தில் சாதிக்கறதுக்கு இந்த அனுபவம் வழிகாட்டியா இருக்கும்...' என்றார் தந்தை.
விக்ரமின் கைகைளைப் பற்றி குலுக்கி, 'நீ நல்லா வருவேடா...' என்று வாழ்த்தி புறப்பட்டார் ஆசிரியர். அவன் மனதில் தன்னம்பிக்கை ஒளி வீசியது.
குழந்தைகளே... தோல்விக்குப் பயந்து, எதிலும் முயற்சிக்காமல் இருக்க கூடாது; முயற்சியில் கிடைக்கும் அனுபவமும், பாடமும் விலை மதிப்பில்லாத பொக்கிஷம்!
என்.விஜயலட்சுமி
