PUBLISHED ON : ஜூன் 26, 2015

அந்த குருகுலத்தில் பல சீடர்கள் மகரிஷியிடம் பயின்று வந்தனர். அவரது ஆசிரமத்தில் இடம் கிடைப்பதையே பெரும்பேறாக நினைத்தனர் சீடர்கள்.
அன்று ஆசிரமத்தில் வைக்கப்பட்ட கத்தரிக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருந்தது. எனவே, சீடர்கள் சுவைத்துச் சாப்பிட்டனர்.
'நாளைக்கும் இதே கத்தரிக்காய் கறி கிடைத்தால், ஒரு வெட்டு வெட்டலாம்' என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
அப்போது குருவானவர் அங்கு வந்தார்.
''கடவுளுக்கு சித்தமானால் நாளைக்கும் கத்தரிக்காய் கறி கிடைத்தால், நம் சாப்பிடுவோம் என்று தான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அப்போது ஒரு சீடன், 'குருவே! இதில் கடவுள் சித்தம் என்ன இருக்கு. நீங்கள் மனது வைத்தால், நாளைக்கும் எங்களுக்கு இந்த சுவையான கத்தரிக்காய் கறி கிடைக்கும்,'' என்று கூறினான். அதற்கு குரு ஒரு குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார்.
'ஓர் ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு மோர்க்குழம்பு என்றால் கொள்ளை ஆசை. நாள்தோறும் அவன் மனைவி மோர்க் குழம்பே சமைப்பாள்.
'ஒவ்வொரு நாள் சாப்பிடும் போது அவன், 'நாளைக்கும் இதே போல் மோர் குழம்பு செய்து வை' என்பான்.
இப்படியே பல நாட்கள் சென்றன-
'ஒருநாள் அவன் அப்படிச் சொல்லும் போது, கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. இருவரும் சுற்றும், முற்றும் பார்த்தனர். எங்கிருந்து சிரிப்பொலி வந்தது என்று தெரியாமல் திகைத்தனர்.
'அன்றிரவே அவன் பாம்பு கடித்து இறந்தான். எல்லாரும் சேர்ந்து அந்தப் பாம்பை அடிக்க முயன்றனர். அந்தப் பாம்பு திடீரென மனிதனாக மாறி, அவர்களிடம் பேசியது.
'நான் எமதூதன். இவன் உயிரைக் கொண்டு செல்ல வந்தேன். ஆனால், இவனோ, 'நாளைக்கு நான் சாப்பிட மோர்க் குழம்பு செய்து வை' என்றான். இன்றே இறக்கப் போகும் இவன், நாளை சாப்பிடுவதைப் பற்றிப் பேசுகிறானே... என்று நினைத்துச் சிரித்தேன்?'' என்று சொல்லி விட்டு மறைந்தார்.
இதைக் கேட்டு எல்லாரும் திகைத்தனர்.
'நாளை உயிருடன் இருப்போம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. கடவுள் நாளை வரை நமக்கு உயிர் தந்தால், நாம் சாப்பிடலாம். அதனால்தான் சொன்னேன். நாம் எப்போதும் நாளையை பற்றி பேசும்போது கடவுளுக்குச் சித்தமானால் நாளைக்கு இதைச் செய்வோம் என்றுதான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அவர் கூறியதன் உண்மையை அறிந்து மெய்சிலிர்த்தனர் சீடர்கள்.
***
