PUBLISHED ON : மே 02, 2014

குப்பை மேட்டில் குப்பையைக் கிளறியபடி மேய்ந்து கொண்டிருந்தது சேவல். அப்போது குப்பை மேட்டின் ஓரத்தில் ரொட்டித்துண்டு ஒன்று கிடப்பதைப் பார்த்தது. உடனே, அந்த ரொட்டித் துண்டைக் கொத்திச் சாப்பிட முடிவு செய்தது.
அந்த ரொட்டித் துண்டின் அருகே தன் அலகினைக் கொண்டு சென்றது சேவல். உடனே அந்த இடத்தில் வேகமாக நாய் ஒன்று வந்தது. அந்த நாயானது ரொட்டித் துண்டைப் பார்த்துவிட்டது.
''சேவலே, அந்த ரொட்டித் துண்டை என்னிடம் கொடுத்துவிடு. நான் ஏற்கனவே அந்த ரொட்டித்துண்டை சற்று நேரத்திற்கு முன்னரே பார்த்து விட்டேன். ஆகையினால் அந்த ரொட்டித் துண்டை நானே சாப்பிடுவேன்,'' என்றது நாய்.
திடீரென அந்த ரொட்டித்துண்டிற்கு நாய் பங்கு கேட்டு விடுமென்று சேவல் எதிர் பார்க்கவில்லை.
''நாயே, எதற்காக என்னிடம் வந்தாய்? அதற்குள் ரொட்டித் துண்டைப் பார்த்து விட்டேன். அது எனக்குத்தான் என்று இப்படி என்னிடம் பொய் கூறுகிறாய். இது எந்த வகையில் நியாயம்?'' என்று கேட்டது சேவல்.
''சேவலே, நான் பொய் கூறுகிறேனோ இல்லை உண்மையைக் கூறுகிறேனோ அதனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் இந்த ரொட்டித் துண்டைப் பார்த்து விட்டேன். அதனை உடனே சாப்பிட வேண்டும்,'' என்று கூறியது நாய்.
சேவலும், நாயும் அந்த ரொட்டித் துண்டிற்குப் போட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே ஒரு முரட்டுப் பன்றி வந்தது.
அந்தப் பன்றியும் ரொட்டித் துண்டைப் பார்த்துவிட்டது. அதனை சாப்பிட வேண்டும் என்று பன்றிக்கு ஆசை வந்து விட்டது. உடனே அது கண்கள் சிவக்கக் கோபத்துடன் கொர்... கொர்... என்று சத்தமிட்டபடியே சேவலையும், நாயையும் பார்த்தது.
''நண்பர்களே, நீங்கள் இருவரும் இந்த ரொட்டித் துண்டை விட்டுச் சென்று விடுங்கள். இதனை நான் சாப்பிட வேண்டும். அப்படியில்லையென்றால் நீங்கள் என்னுடைய பொல்லாத கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்,'' என்றது பன்றி.
அந்த முரட்டுப் பன்றியின் கோபத்தைப் பார்த்ததும் சேவலும், நாயும் பயத்தால் நடுங்கின.
இந்தப் பன்றியானது கோபத்தில் நம்மை ஏதாவது செய்துவிடும். அதனால் நாம் அதனிடமே ரொட்டித்துண்டை கொடுத்துவிட வேண்டியதுதானே என்று முடிவு செய்தன.
உடனே அவைகள் இரண்டும் அந்த ரொட்டித் துண்டை பன்றிக்கே கொடுத்து விட்டன.
உடனே பன்றி அந்த ரொட்டித் துண்டினை 'லபக்' என்று கவ்வி சாப்பிட்டது. சிறிது நேரத்தில் பொத்தென்று மயங்கிக் கீழே விழுந்தது.
நாயும், சேவலும் திடுக்கிட்டபடி பன்றியைப் பார்த்தன.
பன்றி எதற்காக மயங்கி விழுந்திருக்கிறது என்பதை ஓரளவுக்குப் புரிந்து கொண்டது நாய்.
உடனே அது சேவலைப் பார்த்து, ''சேவலே, நாம் இருவரும் அந்த ரொட்டித் துண்டினைச் சாப்பிடாமல் இருந்தது ஒரு வகையில் நல்லதுதான். நல்லவேளையாக நாம் இருவரும் பிழைத்துக் கொண்டோம்,'' என்றது நாய்.
''நாயே, நீ எதனால் அவ்வாறு சொல்கிறாய்?'' என்று கேட்டது சேவல்.
''சேவலே, குப்பையில் கிடந்த ரொட்டித் துண்டு நாள்பட்டது. அது காலாவதியாகிக் கெட்டுவிட்டது. அந்தக் கெட்டுப் போன ரொட்டித் துண்டைத்தான் குப்பையில் மனிதர்கள் யாரோ கொட்டிச் சென்றுள்ளனர். அதனைத்தான் நாம் சாப்பிட வேண்டி ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருந்தோம். நல்லவேளையாக நமக்கு முன்னரே இந்தப் பன்றியானது சாப்பிட்டு விட்டது. இல்லையென்றால் நாம் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கியிருப்போம்.''
அதனைக் கேட்டு ''அப்படியா!'' என்று வாயைப் பிளந்தது சேவல்.
***
