
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருவைக்காவூர் கிராமத்தில், 1965ல் பிறந்தேன். எங்கள் ஊரில் துவக்கப் பள்ளி இருந்தது. பள்ளிக்கு செல்லாமல், ஏழு வயது வரை, ஊர் சுற்றி வந்தேன்.
எங்கள் வீட்டு சாலை வழியாக தான் ஆசிரியர் ராமலிங்கம் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வார்.
ஒரு நாள், என் தாய், 'வாத்தியாரய்யா... இந்த பய வீணா ஊர் சுத்திக்கிட்டு இருக்கான். இவன பள்ளிக்கூடத்துல சேர்த்திடுங்க...' என கேட்டார்.
பள்ளி சென்றவர் பதிவேட்டுடன் திரும்பி வந்து, பிறந்த ஆண்டு, தேதி, பெயரை அம்மாவிடம் கேட்டு பதிவு செய்தார். டிராயர், சட்டை அணிவித்து, என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவர் முயற்சியால், 5ம் வகுப்பு வரை படித்தேன். பின், குடும்ப சூழ்நிலையால் விவசாய வேலைக்கு சென்றேன்.
வீட்டில் இருந்தே படித்து தனியாக தேர்வு எழுதி, பள்ளி இறுதி வகுப்பை முடித்தேன். தொடர்ந்து படித்து, அரசு பணியில் சேர்ந்தேன். சர்வதேச வானொலி நேயராகவும், பத்திரிகை துறையில் எழுத்தாளராகவும் உயர்ந்தேன்.
தற்போது என் வயது 56; பத்திரிகை துறையில், கதை, கட்டுரை, விமர்சனம் என எழுதி, பலரின் அன்பைப் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். நல் அறிவுரை கூறி வழிகாட்டிய அந்த ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.
- மா.முருகானந்தம், கும்பகோணம்.
தொடர்புக்கு: 73391 96767

