தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பயம்!

பயம்!

பயம்!


PUBLISHED ON : ஆக 01, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காட்டில் ஆண்சிங்கமும், பெண் சிங்கமும் குடும்பமாக வாழ்ந்தன. ஒருநாள் பெண்சிங்கம் இரண்டு குட்டிகள் ஈன்றது. தினமும் ஆண் சிங்கம் காட்டிலே வேட்டையாடி பெண் சிங்கத்துக்கு உணவு கொண்டு வந்தது.

ஒருநாள் உணவு எதுவும் கிடைக்காமல், ஆண் சிங்கம் குகைக்குத் திரும்பியது. வழியில் ஒரு நரிக்குட்டி அகப்பட்டது. குட்டியாக இருந்ததால் அதன்மீது இரக்கப் பட்டு அதைக் கொல்லாமல் கவ்விக் கொண்டு வந்தது. அதைப் பெண் சிங்கத்திடம் கொடுத்தது.

''இது குட்டி என்பதால் இதைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. இன்று காடு முழுவதும் மாலை வரை அலைந்து திரிந்தும் எந்த உணவும் கிடைக்கவில்லை. நீ பசியோடு இருப்பாய். உனக்கு எந்த உணவும் என்னால் கொண்டு வர முடியவில்லை.

''குழந்தை, பெண், துறவி, அந்தணன் ஆகியோரை கொல்லக்கூடாது என்பது தர்மம். இருந்தாலும் நீ பசி தாங்க மாட்டாய். இந்தக் குட்டியைக் கொன்று உன் பசியைத் தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை,'' என்று கூறியது ஆண் சிங்கம்.

ஆண் சிங்கம் கூறியதைக் கேட்ட பெண்சிங்கம், ''அன்பானவரே... இதைக் குட்டி என்று நீங்கள் இரக்கம் கொள்ளும் போது, நான் மட்டும் இரக்கம் கொள்ளாமல் என் வயிற்றுப் பசிக்காக கொன்று தின்ன முடியுமா?

''உயிர் போகும் துன்பநிலை ஏற்பட்டாலும், அறத்திற்குப் புறம்பானவற்றைச் செய்யக்கூடாது. நன்மையான வற்றையும் செய்யாமல் விட்டு விடக்கூடாது. நான் இந்த நரிக்குட்டியின் மீது அன்பு செலுத்துகிறேன். அதை என் குட்டி போல் நினைக்கிறேன். நமது இரண்டு சிங்கக் குட்டிகளோடு இந்த நரிக்குட்டியையும் சேர்த்து வளர்க்கப் போகிறேன்,'' என்றது பெண்சிங்கம்.

சிங்கக் குட்டிகளும், நரிக்குட்டியும் சேர்ந்து வளர்ந்தன. தன் குட்டி என்றும், நரிக்குட்டி என்றும் பேதம் பார்க்காமல் மூன்று குட்டிகளிடமும் சம அன்பு கொண்டு பாலூட்டி சீராட்டி வளர்த்தது பெண் சிங்கம்.

ஒருநாள் சிங்கக் குட்டிகளும், நரிக்குட்டியும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது அங்கே ஒரு காட்டு யானை வந்தது. யானையைப் பார்த்ததும் சிங்கக் குட்டிகளுக்குக் கோபம் வந்தது. அந்த யானையைத் தாக்கிக் கொல்ல எண்ணின. யானையை நோக்கிப் பாய்ந்து சென்றன.

சிங்கக் குட்டிகள் பாய்ந்து செல்வதைப் பார்த்த நரிக்குட்டி பயந்து நடுங்கியது.

''சகோதரர்களே ஏன் ஆத்திரம் கொள்கிறீர்கள்? ஆத்திரம் ஆபத்தில் சேர்த்துவிடும். யானையுடன் போரிட்டு வெற்றி பெறமுடியாது. அது பெரிய மிருகம். நீங்கள் சிறிய உருவம் கொண்ட சிங்கக் குட்டிகள். யானைக்கும், சிங்கத் துக்கும் பிறவியிலேயே பகை உள்ளது. அதனால் பகைவனிடம் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள்!'' என்று சிங்கக்குட்டி களைத் தடுத்து நிறுத்தியது.

பிறகு சிங்கக்குட்டிகளை அழைக் காமல் யானைக்கு அஞ்சி அவை வசிக்கும் குகை நோக்கி ஓடி வந்தது நரி.

சிங்கக்குட்டிகளை விட மூத்தது நரிக்குட்டி. நரி அண்ணன் ஓடுகிறானே என்று சிங்கக்குட்டிகளும் பயந்து அதன் பின்னே ஓடி குகைக்கு வந்து சேர்ந்தன.

தனது பெற்றோரிடம் உண்மையைக் கூறின சிங்கக் குட்டிகள்.

''நரி அண்ணன் மிகவும் கோழையாக இருக்கிறான். நாங்கள் யானையைத் தாக்கச் செல்வதைத் தடுத்து விட்டான். ஆவேசமாக அந்த யானையைத் தாக்கச் சென்ற எங்கள் வேகத்தை கட்டுப்படுத்தி, அச்ச உணர்வை ஊட்டிவிட்டான். அதனால் அந்த யானையைத் தாக்காமல் நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்!'' என்று கூறின.

சிங்கக் குட்டிகள் கூறியதைக் கேட்டதும் நரிக்குட்டிக்குக் கோபம் வந்து கண்கள் சிவந்தன.

''நான் ஒன்றும் கோழை அல்ல. உங்களை விட அறிவில் நான் குறைந்த வனல்ல...'' என்று கோபப்பட்டு சிங்கக் குட்டிகளைத் தாக்க முற்பட்டது.

அதைப் பார்த்த பெண்சிங்கம் நரிக்குட்டியைத் தடுத்து நிறுத்தியது.

''மகனே நீ கோபம் கொள்வதில் அர்த்தமில்லை. உன்னிடம் ஆற்றல், அழகு, அறிவு எல்லாம் இருக்கிறது. ஆனால், வீரத்திற்குத் தடை போட்டால் ஊக்கம் இழந்து விடுவார்கள். ஊக்கம் இழந்தால் உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்படாது. மனம் தளர்ந்து சோர்ந்து விடுவார்கள்.

''சிங்கக்குட்டிகளின் வேகத்தை நீ கட்டுப்படுத்தி விட்டதால், அவை பயந்து உன்னுடன் வந்துவிட்டன. இப்படிப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டால் காட்டில் வாழ்கிற மற்ற மிருகங்கள் நம்மை ஏளனம் செய்து எள்ளி நகையாடும். அவை நம்மை எளிதில் தாக்கி வெற்றி பெற்றுவிடும். பிறகு சிங்க இனம் வீர இனம் என்று சொல்லும் சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

''நீ நரி இனத்தில் பிறந்தவன். உன் மீது இரக்கம் கொண்டு உன்னையும் என் மகன் போல் எடுத்து அன்பு செலுத்தி வளர்த்தேன். இப்போது நீ பெரியவனாகி விட்டாய். உன் போக்கும் சிங்கக்குட்டிகளின் போக்கும் வேறுபடுகின்றன. இதனால் உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளும் நிலை நேரும். இதனால் நீ உன் உயிரை இழந்தால் என்னால் தாங்க முடியாது. போர்ப்படையின் தலைவன் வீரர்களை முன்னே செலுத்த வேண்டும். அவனே பயந்து பின் தங்கினால் தோல்விதான் வரும்.

''நீ உன் சகோதரர்களுக்கு மூத்தவன். நீ முன்னணியில் நின்று செயல்பட்டால் தான் இளையவர்கள் உன் வழியில் வருவார்கள். உனக்கு அச்ச உணர்வு உள்ளது. அதனால் உன்னால் முன்னணியில் நின்று செயல்பட முடியாமல் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்துவிடுவாய். உனக்கும், சிங்கக் குட்டிகளுக்கும் ஒத்து வராது. உன் பெற்றோரிடம் உள்ள இன அச்ச உணர்வு உன்னிடம் குடிகொண்டிருக்கிறது. இது உன் குற்றம் அல்ல. உன் பிறவித்தன்மை தான்.

''இனி நீ இங்கு இருந்தால் சரிவராது. உனக்கு அடிக்கடி கோபமும், ரோஷமும் ஏற்படுகிறது. இதனால் ஒற்றுமைக் குலைவு தான் ஏற்படும். சண்டை போட்டுப் பிரிந்து போவதை விட அல்லது உயிரிழப்பதை விட நீ இப்போதே பிரிந்து செல்வது நல்லது,'' என்றது பெண் சிங்கம்.

நரிக்குட்டி பெண் சிங்கத்தின் பேச்சைக் கேட்டுப் பிரிந்து சென்று, தன் இனத்துடன் சேர்ந்து கொண்டது.

இதற்குத்தான் இனம் இனத்துடன் சேர வேண்டும் என்று சொல்வர். புரிந்ததா? நீங்கள் யாருடன் நட்பு கொள்கிறீர்களோ அவர்களது குணம்தான் உங்களுக்கு வரும். அதுக்குத்தான் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us