PUBLISHED ON : ஜூன் 27, 2020

அடர்ந்த காட்டில் முயல் குட்டி ஒன்று அச்சமின்றி, குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. அதை கண்டதும், 'உனக்கு பயமே இல்லையா... இப்படி விளையாடுகிறாயே...' என்றது எறும்பு.
'காட்டு பூனையைப் பார்த்தால் பயப்படுவேன்...' என்றது.
காட்டு பூனையிடம், 'நீ யாரைக் கண்டால் பயப்படுவாய்...' என கேட்டது எறும்பு.
'நரியைப் பார்த்தால் பயம்...' என்றது.
நரியிடம், அதே கேள்வியைக் கேட்டதும், 'கரடியைப் பார்த்தால் பயம்...' என்றது.
கரடியிடம் வந்தது எறும்பு.
'நீண்ட கால்களோடு, வேகமாக ஓடும் ஒட்டகச் சிவிங்கியை நினைத்தாலே பயம்...' என்றது.
ஒட்டகச் சிவிங்கியோ, ஓநாய் பெயரைச் சொல்லி நடுங்கியது.
புலியைச் சொன்னது ஓநாய்.
'கோபமும், பாயும் சக்தியும் மிகுந்த சிங்கத்தை நினைத்தாலே பயம்...' என்றது புலி.
சிங்கமோ, 'பெரிய உருவமும், உதைக்கும் காலும், துாக்கி வீசும் துதிக்கையும் கொண்ட யானைக்கே பயப்படுவேன்...' என்றது.
யானையிடம் கேட்ட போது, 'காதுகளை எப்போதும் ஆட்டியபடியே இருக்கிறேனே... ஏன் தெரியுமா சிறு எறும்பே... நீ காதுக்குள் புகுந்தால் செத்தே போவேன்! எமனை விட, உனக்கு தான் பயப்படுறேன்...' என்று சிரித்தது.
நாணத்தோடு, நகர்ந்தது எறும்பு.
குழந்தைகளே... ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கு பயம் இருக்கலாம்; சிந்திக்கும் ஆற்றல் பெற்ற நீங்கள் அச்சமின்றி வாழ பழகுங்கள்.
