PUBLISHED ON : ஜூலை 01, 2011

˜சோழநாட்டை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றுள் ஒரு பகுதியை நலங்கிள்ளி என்பவனும், மற்றொரு பகுதியை நெடுங்கிள்ளி என்பவனும் அரசாண்டு வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர் அவ்விருவருக்கும் பகைமை உண்டாயிற்று. அந்தப் பகைமை நாளுக்குநாள் வளர்ந்து வந்தது.
அப்போது இளந்தத்தர் என்னும் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், மிகவும் ஏழை. ஆகையால் நேரில் சென்று நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் கண்டு, பாடிப்பரிசில் பெறலாம் என்று எண்ணினார்.
அவ்வாறு எண்ணிய அப்புலவர் இளந்தத்தர், முதலில் சென்று நலங்கிள்ளியைக் கண்டார். அவன் மீது ஒரு பாடல் பாடினார். நலங்கிள்ளி அப்பாடலைப் பாராட்டினான்; புலவருக்குப் பொருள் உதவி செய்தான். இளந்தத்தர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நலங்கிள்ளியிடம் விடை பெற்று, நெடுங்கிள்ளியைக் கண்டு அவன் மீது ஒரு பாடலைப் பாடினார்.
அப்போது அங்கே இருந்த ஓர் அமைச்சர் நெடுங்கிள்ளியிடம், ''இவர் நலங்கிள்ளியைப் பார்த்துவிட்டு வருகிறார். ஆகையால் இவர் நளங்கிள்ளியிடமிருந்து வரும் ஒற்றராக இருக்கலாம்!'' என்று கூறினான்.
அதைக் கேட்ட நெடுங்கிள்ளி சினம் கொண்டான். அவனுடைய கண்கள் சிவந்தன; மீசை துடித்தது. அந்தப் பெயரை கேட்டவுடனே சினந்தான். ''இவனைச் சிறையில் அடையுங்கள்! இவனைக் கொல்வதே முறை!'' என்று உறுமினான்.
பாவம்! பாடிப் பரிசு பெறச் சென்ற இளந்தத்தர் சிறையில் அடைக்கப்பட்டார். 'நாம் எப்போது கொல்லப்படுவோமோ?' என்று எண்ணி நடுங்கினார்.
நெடுங்கிள்ளியின் நாட்டில் கோவூர் கிழார் என்னும் பெரும் புலவர் இருந்தார். அவர் இளந்தத்தர் சிறைப்பட்டதைக் கேட்டறிந்தார். அவரைக் காப்பாற்ற எண்ணினார். உடனே விரைந்து சென்று நெடுங்கிள்ளியைக் கண்டார்.
நெடுங்கிள்ளியைக் கண்ட கோவூர் கிழார், ''அருள் உள்ளம் படைத்த சோழர் மரபில் பிறந்த அரசே! நீ வாழ்வாயாக! புலவர்கள் வறுமையில் வாழ்பவர்கள். அவர்கள் உன்னைப் போன்ற மன்னர்களிடம் சென்று பாடி, உதவி பெற்று வாழ்கின்றவர்கள். அத்தகைய புலவர்களுள் ஒருவரே இளந்தத்தர். உன்னைப் பற்றி பாடிப் பொருளுதவி பெருவதற்காக வந்தவர். நான் சொல்ல விரும்பியதைச் சொல்லி விட்டேன். நீர் விரும்பியதைச் செய்க!'' என்று கூறினார்.
அவருடைய பேச்சு நெடுங்கிள்ளியின் உள்ளத்தைக் கவர்ந்ததோடன்றி, மாற்றியும் அமைத்து விட்டது. உடனே அவன் இளந்தத்தரை விடுதலை செய்தான். அவருக்கு பொருள் கொடுத்து வழி அனுப்பி வைத்தான்.
***
