தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடவுள் பங்கு!

கடவுள் பங்கு!

கடவுள் பங்கு!


PUBLISHED ON : பிப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொளத்தூர் என்னும் ஊரில் மூன்று கருமிகள் இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். அந்த மூவரும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவன், ''ஏனப்பா! உன் வீடு தேடி வந்தவர்களுக்கு ஒரு காபியோ, டீயோ கொடுத்து உபசரிக்கக் கூடாதா?'' என்றான்.

உடனே வீட்டுக்காரன் கருமி, ''டீ, காபியில் காபின் என்ற விஷச் சத்து இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்லியிருப்பதை நீ படிக்கவில்லையா? என் இனிய நண்பர்களுக்கு நச்சுப் பொருள் அடங்கிய பானங்களையெல்லாம் கொடுக்க நான் விரும்பவில்லை,'' என்றான்.

''அப்படியானால் பால் கொடுக்கலாமே,'' என்றான் இன்னொரு கஞ்சன்.

''கொடுக்கலாம் தான். ஆனால் இன்று பார்த்து எங்கள் வீட்டு மாடு பால் கறக்கவில்லை,'' என்றான் அந்த கருமி.

''சரி, ஒரு டம்ளர் தண்ணீராவது கொடு. குடித்து விட்டு கோவில் பக்கமாகப் போய் வரலாம். சுண்டல் கொடுப்பார்கள்,'' என்றான் இன்னொரு கருமி.

''முதலில் கோவிலுக்குப் போய் சுண்டல் பிரசாதம் கிடைத்தால் வாங்கிச் சாப்பிடுவோம். அதன் பின்னர் எப்படியும் தண்ணீர் சாப்பிட்டாக வேண்டும். இப்போது வேறு தண்ணீர் சாப்பிட்டு அதை வீணாக்க வேண்டுமா?'' என்றான் வீட்டுக்காரக் கருமி.

''அடப்பாவி! தண்ணீரைக் கொடுக்கக்கூட இப்படி கருமித்தனம் பண்ணுகிறாயே,'' என்று அவனை கேலி செய்தனர்.

மூவரும் தெருவில் இறங்கி சிறிது தூரம் சென்ற போது தெருக்கோடியில் நாணயம் ஒன்று கிடந்தது. அதை அந்த மூன்று கருமிகளில் ஒருவன் பாய்ந்து சென்று எடுத்தான். அதைக் கையில் எடுத்துப் பார்த்த போதுதான் அது செல்லாத நாணயம் என்று தெரிய வந்தது.

அதை என்ன செய்வது என்று மூவரும் யோசித்தனர்.

''கோவில் உண்டியலில் போட்டு விடலாம்,'' என்றான் ஒருவன்.

''சேச்சே! செல்லாத ரூபாயை கடவுளுக்குப் போடுவது கடவுளையே ஏமாற்றுவதாகிவிடும்,'' என்றான் இன்னொரு கருமி.

''ஏன் இப்படிச் செய்தால் என்ன? கோவில் வாசலில் பார்வையற்ற ஒருவன் லாட்டரிச் சீட்டு விற்பான். அவனிடம் இந்த ஒரு ரூபாயைக் கொடுத்து ஒரு லாட்டரிச் சீட்டை வாங்கி விடுவோம்,'' என்றான் மூன்றாவது கருமி.

''நல்ல யோசனை தான். அந்தச் சீட்டுக்குப் பரிசு விழுந்தால் என்ன செய்வது?'' என்றான் இரண்டாவது கருமி.

''பரிசு விழுந்தால் அதை நாம் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம். நமக்குப் பரிசு கிடைக்க அருள் செய்த கடவுளுக்கும் அதில் ஒரு பகுதியை காணிக்கையாகச் செலுத்தி விடலாம்,'' என்றான் மூன்றாவது கருமி.

அதற்குள் கோவில் வாசல் நெருங்கி விட்டது. பார்வையில்லாத லாட்டரி சீட்டு விற்பவரிடம் செல்லாத ரூபாய் நாணயத்தைக் கொடுத்து ஒரு லாட்டரிச் சீட்டை வாங்கிய படி கோவிலுக்குள் சென்றனர்.

சுண்டல் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். லாட்டரிச் சீட்டை முதல் கருமி வைத்துக் கொண்டான். அவனை நம்பாத மற்ற இருவரும், அந்த சீட்டின் எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டனர்.

அவர்களே எதிர்பாராத வகையில் அந்தச் சீட்டுக்கு முதல் பரிசு விழுந்தது. லட்ச ரூபாய் பரிசு. அதில் பிடித்தமெல்லாம் போக 63 ஆயிரம் கிடைத்தது.

தலைக்கு 21 ஆயிரம் வீதம் பிரித்து எடுத்துக் கொண்டனர். கடவுளுக்கு அவரவர் விருப்பப்படி காணிக்கை செலுத்தவதென்றும் முடிவு செய்து கொண்டனர்.

மறுநாள் மாலையில் மூன்று கருமிகளும் ஒரு பூங்காவில் சந்தித்தனர்.

முதல் கருமி, ''என்ன கடவுளுக்குக் காணிக்கை செலுத்தி விட்டீர்களா?'' என்று கேட்டான்.

''முதலில் நீ எவ்வளவு காணிக்கை செலுத்தினாய் என்று சொல். அதன் பின்னர் நாங்கள் செலுத்தியதைச் சொல்கிறோம்,'' என்றனர் மற்ற இருவரும்.

''நான் தரையில் ஒரு சிறு வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் ரூபாய் நோட்டுகளை வீசி ஏறிவது என்றும், வட்டத்திற்குள் எவ்வளவு நோட்டுகள் நிற்கின்றனவோ அவை அனைத்தும் கடவுளுக்கு என்றும், தீர்மானித்துக் கொண்டேன். என்னிடமிருந்த இருபத்தோராயிரம் ரூபாயையும் வட்டத்திற்குள் வீசினேன்.

''வட்டத்திற்குள் ஒரே ஒரு நூறு ரூபாய் தாள் தான் நின்றது. சரி கடவுள் நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கவில்லை என்று எண்ணி அந்த நூறு ரூபாயை மட்டும் கோவில் உண்டியலில் போட்டு விட்டேன்,'' என்றான் முதலாவது கருமி.

''நானும் உன்னைப் போலவே வட்டம் போட்டுத்தான் காணிக்கையைச் செலுத்த முடிவு செய்தேன். ஆனால், வட்டத்தைப் பெரிதாகப் போட்டு வட்டத்திற்கு வெளியே விழுவதெல்லாம் கடவுளுக்கு என்று தீர்மானித்து என் பங்குப் பணம் முழுவதையும் அந்த வட்டத்திற்குள் போட்டேன். வட்டத்திற்கு வெளியே வெறும் ஐம்பது ரூபாய் மட்டும்தான் விழுந்தது. அதை நானும் உண்டியலில் போட்டு விட்டேன்,'' என்றான் இரண்டாவது கருமி.

இப்படிக் கூறி விட்டு, அவர்கள் இருவரும் மூன்றாவது கருமியைத் திரும்பிப் பார்த்தனர்.

நான் உங்களைப் போல் அல்பமாக நடந்து கொள்ளவில்லை. எல்லை வகுத்து கடவுள் பங்கைக் கண்டு பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னிடமிருந்து அந்த எல்லாம் வல்ல இறைவன் ஒரே ஒரு ரூபாய் கூடப் பெற்றுக் கொள்ளவில்லை,'' என்றான் மூன்றாவது கருமி.

''என்னது? ஒரு ரூபாய் கூட வாங்கிக் கொள்ளவில்லையா? அது எப்படி?'' என்று வியப்போடு கேட்டனர்.

''நான் என்ன செய்தேன் என்றால், 'கடவுளே நான் என்னிடமுள்ள பணம் முழுவதையும் மூட்டை கட்டி வானத்தில் எறிகிறேன். அதில் உனக்கு எவ்வளவு தேவையோ அதை நீ எடுத்துக் கொள். மீதியை பூமியில் போட்டுவிடு. அதை நான் எடுத்துக் கொள்கிறேன்' என்று கூறி விட்டு, வானத்தில் எறிந்தேன். கடவுள் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளவில்லை. மொத்த ரூபாயும் கீழேயே வந்துவிட்டது. அதை நான் எடுத்துக் கொண்டேன்,'' என்றான் மூன்றாவது கருமி.

''அடடே! இந்த யோசனை நமக்குத் தெரியாமல் போய் விட்டதே...'' என்று மற்ற இரண்டு கருமிகளும் வருத்தப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us