PUBLISHED ON : ஜன 07, 2011

காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. தன் வலிமையை நினைத்து அது தற்பெருமை கொண்டிருந்தது. வழக்கம் போல வேட்டையாடிவிட்டுக் குகைக்குத் திரும்பியது. அங்கேயே படுத்து ஓய்வு எடுத்தது. அப்போது கொசு ஒன்று அதன் அருகே பறந்தது. அந்தக் கொசுவையும், தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்தது அது.
''இறைவா! எதற்கும் அஞ்சி நடுங்கும் சின்னஞ்சிறு கொசுவாக என்னை நீ படைக்கவில்லை. எல்லாரையும் நடுங்க வைக்கும் சிங்கமாகப் படைத்து உள்ளாய். உனக்கு நன்றி!'' என்ற உரத்த குரலில் சொன்னது. அப்படி அது பேசியது கொசுவின் காதில் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட கொசு, ''சிங்கமே! கொசுக்களாகிய நாங்கள் உன்னைவிட வலிமையானவர்கள். இதை அறிந்து அடக்கமாகப் பேசு!'' என்றது. இதைக் கேட்ட சிங்கம், ''அற்பக் கொசுவே! யாரிடம் என்ன பேச்சுப் பேசுகிறாய்? நான் ஒரு அறைவிட்டால் உன் கூட்டமே அழிந்து போய்விடும். இங்கிருந்து ஓடினால் உயிர் பிழைப்பாய். இல்லையேல் உன்னை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!'' என்று கண்கள் சிவக்கச் கர்ச்சித்தது. அதற்குக் கொசு, ''சிங்கமே! நம் இருவரில் யார் வலிமையானவர்? சண்டை போட்டு முடிவு செய்வோம்!'' என்று வீரம் பேசியது. ''நீ என்னுடன் சண்டைக்கு வருகிறாயா? வா. உன்னை ஒரு நொடிக்குள் நசுக்கிக் கொன்றுவிடுவேன்!'' என்று கர்ச்சித்தது அது. கொசு வேகமாகப் பறந்து வந்து சிங்கத்தின் முகத்தில் கடித்தது. உடனே அது தன் முன்னங்காலால் முகத்தில் வேகமாக அறைந்தது. கவனமாக இருந்த கொசு அதன் அறையில் இருந்து தப்பித்தது. பிறகு பறந்து பறந்து அதன் உடலெங்கும் கடித்தது. இப்படிக் கொசு கடித்த போதெல்லாம் தன்னை அறைந்து கொண்டது சிங்கம். அந்தக் கொசு சிக்கவே இல்லை. திறமையாகத் தப்பித்துக் கொண்டே இருந்தது. இதனால் சிங்கத்தின் உடலெங்கும் காயம் ஏற்பட்டுச் சோர்வு அடைந்தது. கொசுவோ மீண்டும் மீண்டும் பறந்து அதைக் கடித்தபடி இருந்தது. வேறு வழியில்லாத சிங்கம், ''கொசுவே! என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்!'' என்றது. ''இனி யாரையும் எளியவர் என்று கேலி செய்யாதே!'' என்ற கொசு அங்கிருந்து பறந்து சென்றது. ***
