PUBLISHED ON : ஜூலை 15, 2023

அடர்ந்த காட்டில் நரியும், ஓநாயும் நட்புடன் பழகி வந்தன. அன்று மதியம், உணவு தேடி சென்றன.
காடு முழுதும் அலைந்து திரிந்தன. இரை எதுவும் கிடைக்காததால், பக்கத்து கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தன.
நெடுந்துாரம் நடந்ததால், களைப்புடன், பசியும் எடுத்தது.
சோர்வுற்றிருந்ததால், சிறிது ஓய்வெடுத்தப் பின், கிராமத்தில் நுழைந்தன. அங்கு ஒரு கோழிப்பண்ணை தென்பட்டது. இரண்டும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தன.
நைசாக பண்ணையில் நுழைந்து, பசி அடங்கும் வரை கோழிகளை தின்றன. போதும் என்ற அளவிற்கு சாப்பிட்டது நரி. ஓநாயோ, கண்ணில் தென்பட்டதை எல்லாம் கொன்றது.
'இருட்டுவதற்குள் திரும்பி சென்று விட வேண்டும்...'
எச்சரிக்கை விடுத்தது நரி.
'சிறிதுநேரம் பொறு; இன்னும் சில கோழிகளை கொன்று விடுகிறேன்...'
அலட்சியமாக பதில் சொன்னது ஓநாய்.
சிறிது நேரத்திற்கு பின், 'கிளம்பலாமா...' என கேட்டது நரி.
'பசி இன்னும் அடங்கவில்லை; நீ வேண்டுமானால் புறப்படு; பசியாறிய பின் வருகிறேன்...'
நரிக்கு விடை கொடுத்தது ஓநாய்.
வயிறு நிறைய சாப்பிட்டு, நடக்க முடியாமல் திணறியது ஓநாய். பின், 'காலையில் பண்ணை பராமரிப்பாளர் வரும் முன், காட்டிற்கு சென்று விடலாம்' என எண்ணியபடி அங்கேயே உறங்கி விட்டது.
மறுநாள் -
பகல் பொழுது புலர்ந்தது கூட தெரியாமல், தன்நிலை மறந்து உறங்கிக் கொண்டிருந்தது ஓநாய். வழக்கம் போல் பண்ணைக்கு வந்த உரிமையாளர், கோழி இறகுகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ந்தார். சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்தார். அயர்ந்து துாங்கும் ஓநாயை கண்டதும், ஊர் மக்களை அழைத்து வந்தார்.
ஓநாயை சுற்றி வளைத்த ஊர் மக்கள் துடிதுடிக்க அடித்து காயப்படுத்தினர். கடும் வேதனையில் துடித்தது ஓநாய்.
குழந்தைகளே... அளவுக்கு மீறி ஆசைப்பட்டால், அமைதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்!
சோ.அ.பிரதீப்
