PUBLISHED ON : அக் 30, 2021

அன்புள்ள பிளாரன்ஸ்...
என் வயது, 28; இல்லத்தரசியாக இருக்கிறேன். ஒரே மகன்; 5ம் வகுப்பு படிக்கிறான்; எப்போதும், 'அம்மா... அம்மா...' என சுற்றி சுற்றி வருவான். ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில், எங்கள் வீடு அமைந்திருக்கிறது. மாலை நேரங்களில், விளையாட தோழர்கள் இல்லாமல் தவித்தான் மகன்.
இந்த நிலையில் சில மாதங்களாக, மிக உற்சாகமாக இருக்கிறான். கேட்டால், விளையாடுவதற்கு இரு தோழர்கள் கிடைத்திருப்பதாக கூறுகிறான். அவர்கள் யார் என கேட்டால், பால கணேசும், பால அனுமாரும் என்கிறான்.
அவர்கள் எப்படி இருப்பர் என்றால், யானை முகமும், குரங்கு முகமும் கொண்டிருப்பதாக கூறுகிறான்.
பால கணேஷ் இவனுக்கு தின்ன கொழுக்கட்டையும், மாம்பழமும் கொடுத்ததாக சொல்கிறான்; பால அனுமார் வாழைப்பழம் கொடுப்பதாக கூறுகிறான்.
என் மகன் கூறுவது கற்பனையா...
நிஜத்தில் இரு கடவுள்களும் வந்து விளையாடுகின்றனரா...
எதுவும் புரியாமல் தவிக்கிறேன். என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்.
அன்புள்ள அம்மா...
பால கணேஷ் யார் என்று பார்ப்போம்...
பார்வதிக்கும், சிவனுக்கும் பிறந்த மூத்த மகன். பார்வதி குளிக்கும் போது, மஞ்சளை அரைத்து ஒரு உருவம் செய்தார். அதற்கு உயிர் கொடுத்து மகனாய் வரித்தார்; குளித்து முடிக்கும் வரை, வாசல் கதவை காவல் காக்க பணித்தார்.
குளிக்கும் இடத்தில் சிவன் பிரவேசிக்க முயல, தந்தை என்று தெரியாமல் தடுக்கிறார் கணேசன். கோபத்தில், கணேசன் தலையை வெட்டி சாய்க்கிறார் சிவன்; விஷயம் தெரிந்து ஓடி வந்த பார்வதி கதறி அழுகிறார்.
'இறந்தது மகன்...' என்கிறார்.
துண்டித்த தலையை மீண்டும் ஒட்ட முயற்சிக்க அது மறுக்கிறது.
நந்தியை அழைத்து, எதாவது ஒரு தலையை எடுத்து வர கூறுகிறார் சிவன்; ஒரு யானை தலையை எடுத்து வருகிறது; அதை கணேசன் உடலில் பொருத்த உயிர் பெறுகிறார்.
மனித உடல், யானை தலையுடன் இருக்கும் பால கணேசனை, பூத கணங்களின் தலைவனாக்கி, முதலில் வணங்கும் தெய்வமாக்கி, அறிவு மிக்கவராக்கி ஆசிர்வதிக்கின்றனர்.
இன்றைக்கும் அனைத்து பிரிவினரும் முதலில் வணங்கும் கடவுள் பிள்ளையார் தான்; ஜைன, புத்த மதத்தினரும் கூட வழிபடுகின்றனர்.
பால அனுமார் கதையை பார்ப்போம்...
சூரியனை, பழம் என நினைத்து பறிக்க பறக்கிறார் பால அனுமார்.
அவரை பாதுகாக்க வஜ்ராயுதத்தால் அடித்து வீழ்த்துகிறார் இந்திரன்.
தாய் அஞ்சனையின் மடியில் போய் விழுகிறார் பால அனுமார்.
இரண்டு குழந்தை தெய்வங்களையும் பற்றி படித்திருப்பான் மகன் அல்லது வகுப்பு ஆசிரியை, இந்த தெய்வங்களை பற்றிய கதைகளை கூறியிருப்பார்.
கார்ட்டூன் சானலில் அல்லது சமூக வலைதளங்களில் விலாவாரியாக பார்த்திருப்பான்.
பிள்ளையார் அனைத்து மதத்தினரையும், உலக மக்களையும் கவர்ந்த கடவுள்.
இது அதீத கற்பனையின் அற்புத வடிவம்; தினமும், இரு குழந்தை தெய்வங்களையும் வணங்கி, ஆராதித்து, அடியாருக்கு அடியான் ஆகியிருப்பான் மகன்.
பக்தி முத்தி விட்டால் என்ன ஆகும்...
வணங்கும் தெய்வமே முன் வந்து காட்சியளிக்கும்!
மகன் விஷயத்தில் விளையாடி கம்பெனி கொடுக்கின்றன.
தெய்வம் முன்னே வந்து காட்சியளிப்பது, ஒரு வகை பரவச நிலை; பெற்றோர் மீது பிரபஞ்சம் அளவு அன்பை உடையவர் பால கணேசன்; அறிவுக்கு அதிபதி.
விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர் பால அனுமார்.
இந்த மூன்று குணங்களும், மகனுக்கு தொற்றினால் நல்ல விஷயம் தானே...
மகனின் பள்ளி மற்றும் வீட்டு நடவடிக்கைகளை கவனமாக கண்காணிக்கவும்; மன ரீதியான பிரச்னை வந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு வாரமும் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் செல்லவும்; அடுத்தமுறை பாலகணேசன் வந்தால், எனக்கும் சேர்த்து கொழுக்கட்டை வாங்கச் சொல்லவும்.
- அன்புடன், பிளாரன்ஸ்!
