PUBLISHED ON : நவ 20, 2021

அன்புள்ள ஆன்டிக்கு...
என் வயது, 15; பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி! எனக்கும், என் அம்மாவுக்கும் பாட்டு பாடுவது மிகவும் பிடித்தமான விஷயம். அம்மா முறைப்படி பாட்டு கற்றுக்கொள்ளவில்லை; அதனால், ஒரு பாட்டு டீச்சரை வைத்து, எனக்கு கற்று கொடுக்கிறார்.
தினமும் ஒரு மணிநேரம் சாதகம் செய்கிறேன்; குரல் வளத்தை பாதுகாக்க சுடச்சுட கால் கிலோ அல்வா சாப்பிடுகிறேன். சில நேரங்களில் அரை கிலோ அல்வா; அது தொண்டையில் சுகமாக இறங்குகிறது; அல்வா இல்லாவிட்டால் பாட முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டேன்; நான் செய்வது சரிதானா ஆன்டி... எனக்கு நல்ல அறிவுரை சொல்லுங்கள்.
அன்பு மகளுக்கு...
பாட கற்றபடியே திகட்ட திகட்ட அல்வா தின்னும் ஆசையை தீர்த்துக் கொண்டிருக்கிறாய். தினமும் இனிப்பு சாப்பிடுவது நேரடியாக நீரழிவு நோயை கொண்டு வந்து விடாது. ஆனால், மிதமிஞ்சிய சர்க்கரை உடல் எடையை அதிகரிக்க வைத்து குண்டாக்கும்.
பொதுவாக, பாடகர்களும், சமையல் கலை நிபுணர்களும், ஓவியர்களும் குண்டாக இருப்பர்; நீயும் குண்டாக அஸ்திவாரம் அமைக்கிறாய். ஆசிரியர்கள், பாடகர்கள், மேடை பேச்சாளர்கள், அரசியல்வாதிகள் நடிகர்களுக்கு குரல் பிரச்னை ஏற்படும்.
தொண்டை வீக்கத்தை, 'லாரிஞ்சைட்ஸ்' என்பர்; தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிவோரில், 20 சதவீத பேருக்கு குரல் சம்பந்தமான பிரச்னைகள் வருகின்றன. சிலருக்கு, குரல் பிரச்னை இல்லாத போதும், இருப்பது போல தோன்றும்; அதற்கு, 'பேன்டம் பெய்ன்' என்று பெயர்.
சீரான, ஆரோக்கியமான மூச்சு பயிற்சி, குரல் வளத்துக்கு அடிப்படை; அது குரல் அடைப்பையும், தொண்டை வலியையும் போக்கும்.
மூச்சு பயிற்சியை, வாழ்நாள் பயிற்சியாக செய்ய வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும் போது, அடி வயிறு வெளிதள்ளியும், மூச்சை வெளிவிடும் போது, அடி வயிறு உள்ளிழுத்தும் இருக்க வேண்டும்.
அடி வயிற்றிலிருந்து குரல் எழுப்பி பாட வேண்டும்; தொண்டையிலிருந்து ஒலி எழுப்பி பாடக் கூடாது.
பாடகர்களுக்கு உணவு கட்டுப்பாடு அவசியம்.
மகளே... அல்வா தின்ன ஆசை இருந்தால் மாதம் ஒருமுறை, 100 கிராம் சாப்பிடு. மற்றபடி குரலை பாதுகாக்க கீழ்க்கண்ட வைத்தியங்களை செய்யலாம்...
* வெதுவெதுப்பான தண்ணீரில், உப்பு, மஞ்சள் துாள் கலந்து கொப்பளிக்கவும்
* சித்தரத்தையில், ஒரு துண்டை வாயில் அடக்கவும்
* பனங்கற்கண்டுடன், 1 கிராம்பு சேர்த்து மெல்லவும்
* சூடான பாலில், மஞ்சள் துாள், மிளகு துாள், வெல்லம் சேர்த்து இரவில் குடிக்கவும்
*ஒரு டம்ளர் நீரில், துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து பருகவும்
* இருமலில் இருந்து விடுபட, சுக்கு துாள், சீரகம், சர்க்கரை கலந்து சாப்பிடவும்
* துளசி சாறு சேர்த்த தண்ணீரை, தினமும் அருந்தவும்
* காய்கறி சூப்பில், சிறிதளவு மிளகு துாள் சேர்த்து குடிக்கவும்
* 'சிமிலியம்' என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக் கொள்ளலாம்
* தொண்டை வலித்தால், வலிநிவாரணி மருந்தான, 'இபுருபேன்' எடுத்துக் கொள்ளலாம்
* சர்க்கரை கலக்காத, 'பபிள்கம்' மெல்லலாம்
* வாரத்துக்கு, ஆறு மணி நேரம் மவுன விரதம் இருக்கலாம்
* கிசு கிசுப்பாய் பேச முயற்சிக்க வேண்டாம்
* ஆண் குரலில் பாடினால் ஏற்படும் குரல் பிரச்னையை தீர்க்க மூச்சு பயிற்சி பயன்படும்
* தினமும், ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
குயில் போல குரலுள்ள நல்ல பாடகி ஆக முயற்சிக்கவும்; அல்வா பாடகி என பெயர் எடுக்க வேண்டாம்!
- என்றும் அன்புடன், பிளாரன்ஸ்.
