PUBLISHED ON : டிச 11, 2015

பெரியார் அவர்களின் எண்பத்து மூன்றாவது பிறந்த நாள் விழா மிகவும் கோலாகலமாக ஈரோட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாவில் பேசியவர்களெல்லாம் அவரை வாழ்த்திப் பேசி, இன்னும் பல காலம் வாழ வேண்டுமென விரும்பினர்.
இதிலே மகிழ்ந்தும், திளைத்தும் போயிருந்தார் பெரியார்.
இவ்வாறு வாழ்த்தி பேசிய ஒருவர் மேடையிலேயே ஒரு வேண்டுகோளும் விடுத்தார்.
'நமது ஊரிலே பெண்கள் மேற்படிப்புக்காக கல்லூரி ஒன்று கட்டப் போகிறோம். நமது பெரியார் அவர்கள் கஞ்சத்தனம் பாராமல் ஒரு பெருந்தொகையைத் தரவேண்டும்!' என்றார்.
இதற்கு பதில் அளித்த பெரியார், 'என்னை வாழ்த்திப் பேசியவர்களெல்லாம் நூறு வயது வாழ வேண்டும். நூற்றி ஒரு வயது வாழ வேண்டும் என்று பேசினர். பேச்சு பேச்சுதானே இதற்கென்ன செலவா ஆகப் போகிறது? ஏன் ஒரு லட்சம் வயது வரை வாழ வேண்டும், ஒரு கோடி வயது வாழ வேண்டும் என பேச வேண்டியதுதானே! இப்படி நீங்கள் பேச்சு விஷயத்திலேயே கஞ்சத்தனம் செய்கையில், நான் காசு விஷயத்தில் கஞ்சத்தனம் பண்ணக்கூடாதா?' என்றார்.
திகைத்துப் போனார் கோரிக்கை வைத்தவர்.
