PUBLISHED ON : ஜூலை 04, 2020

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 9ம் வகுப்பில் படித்த போது, தமிழ் ஆசிரியராக முருகேசன் பிள்ளை இருந்தார். பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், நடிப்பு போன்ற போட்டிகளில் பங்கேற்க துாண்டுவார்.
அவர் பாடம் நடத்தும் வகுப்புகளில் எல்லாம், என்னை அழைத்து பேச வைப்பார். புதிய மாணவர்கள் முன் பேச சங்கோஜ படுவேன். கோபம் கொப்பளித்தாலும் அவர் சொற்படி நடந்து வந்தேன்.
என் பேச்சு, நடிப்பு, பாடல்கள் எல்லா வகுப்பறைகளிலும் அரங்கேறியது. பின், பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில், பங்கேற்று பரிசுகளை குவித்தேன். அவர் அளித்த பயிற்சியின் உன்னதம் புரிந்தது.
பேச்சு பயிற்சிக்காக, தமிழ் பாட புத்தகத்தையே மனப்பாடம் செய்திருந்தேன். இது, 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, சேலம் மாவட்ட அளவில் முதலிடம் பெற உதவியது. மேடைகளில் பேசவும், கவிதை எழுதிப் பாராட்டுப் பெறவும் அந்த பயிற்சி இன்றும் உதவுகிறது.
தற்போது, என் வயது, 55; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளராக பணிபுரிகிறேன். என் உள்ளத்தில் தமிழை தழைக்கச் செய்த ஆசிரியரை தெய்வமாக வணங்கி வருகிறேன்.
- திருமலைசாமி, விருதுநகர்.
தொடர்புக்கு: 76039 67406
