PUBLISHED ON : ஜூலை 04, 2020

சேலம், பாரதி வித்யாலயாவில், 1956ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
கணித ஆசிரியர் பிரகாசம், வகுப்பாசிரியராகவும் இருந்தார்.
அன்று ஆய்வுக்கு, கல்வி ஆய்வாளர் வருவதாக இருந்தது. அவரின் கேள்விகளை எதிர்கொள்ளும் வகையில், படிப்பில் முதன்மையாக இருந்த என்னை, வகுப்பின் முதல் வரிசையில் அமர கூறியிருந்தார் வகுப்பாசிரியர்.
என் தம்பியரும் அதே பள்ளியில் படித்து வந்தனர். சீருடை பற்றாக்குறையால், ஒன்றையே மூவரும் மாற்றி மாற்றி அணிவோம். அன்று, சீருடையை தம்பி அணிந்து சென்று விட்டதால், பனியனுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தேன்.
பளபளக்கும் வேட்டி கட்டி, வெள்ளை சட்டை மீது கோட் அணிந்து எடுப்பாக வந்த வகுப்பாசிரியர், என் கோலம் கண்டு திடுக்கிட்டார். சமயோசிதமாக, அவரது சட்டையை கழற்றி எனக்கு அணிவித்து, நிலைமையை சமாளித்தார்.
காலங்கள் கடந்து விட்டன. இன்று செல்வந்தனாக உயர்த்த போதும், அன்று ஆசிரியர் தன்னை தாழ்த்தி, என்னை உயர்த்திய மாண்பை மனம் மறக்கவில்லை. 'காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்ற குறளின் பொருளையும், பெருமையையும் உணர்ந்து கொண்டேன்.
- எஸ்.பாலு, ஐதராபாத்.
தொடர்புக்கு: 09849 018605
