தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வழி காட்டும் தீப ஒளி!

வழி காட்டும் தீப ஒளி!

வழி காட்டும் தீப ஒளி!


PUBLISHED ON : அக் 30, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளே... இது தீபாவளி பண்டிகை நேரம். இனிப்பு, புதிய உடைகள் வாங்கும் ஆர்வத்தில் இருப்பீங்க! இந்த நேரத்தில், தீபாவளி பற்றிய விபரங்களையும் தெரிந்து கொள்வோம்...

அது சின்னக்கதை; சுவாரசியமானது.

தேவர்களை கொடுமை செய்தான் அரக்கன் நரகாசுரன். அவனைப் பற்றி விஷ்ணுவிடம் முறையிட, அவர் மனைவி சத்யபாமா உதவியுடன், அரக்கனை வதம் செய்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இது பற்றி தெரிந்திருக்கும்.

அந்த கதையின் பின்னணியை தெரிந்து கொள்ளலாம்; வாங்க...

தீபாவளியின் நிஜ பெயர் நரக சதுர்த்தசி. வடமாநிலங்களில் இதை பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர். நரகாசுரனை கொன்றதால் மட்டுமல்ல, நரகத்தை தவிர்த்து சொர்க்கம் செல்ல விரதம் அனுஷ்டிக்கும் நாள் என்பதாலும், நரக சதுர்த்தசி என பெயர் வந்தது.

அது என்ன சதுர்த்தசி...

காலண்டரை பாருங்கள். பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் நாள் பெயர் பிரதமை; அதற்கு மறுநாள் துவிதியை. இப்படியே வரிசையாகப் போய், 14ம் நாள் சதுர்த்தசி என குறிப்பிடப்பட்டிருக்கும். பிரதமை என்றால், 'நம்பர் - 1' என்று பொருள்.

நாட்டின் தலைவரை, பிரதமர் என்பதும் இந்த பொருளில் தான். துவிதியை என்றால் இரண்டு. இது போல் சதுர்த்தசியை சதுர்+தசம் என பிரிப்பர். சதுர் என்றால் நான்கு; தசம் என்றால் பத்து; இரண்டையும் கூட்டினால், 14 வரும்.

பிரம்மாவை, 'சதுர்முகன்' என்பர். இதற்கு 'நான்கு முகங்களை உடையவர்' என பொருள். ராவணனை, 'தசமுகன்' என்பர். இதற்கு, 'பத்து தலைகளை உடையவர்' என பொருள்.

சதுர்த்தசி திதியன்று, அதாவது அமாவாசைக்கு முந்திய நாள், கொல்லப்பட்டான் நரகாசுரன். அவனது மரண நாளை, நரக சதுர்த்தசி என்பர். பஞ்சாங்கங்களிலும், சில காலண்டர்களிலும் தீபாவளிக்கு முந்திய நாளை, நரக சதுர்த்தசி என்றே குறித்திருப்பர்.

இது விரத நாள். இதுபற்றிய கதையைக் கேளுங்கள்...

தீர்க்கதமஸ் என்ற முனிவர் மனைவி, குழந்தைகளோடு காட்டில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர்களை மிருகங்கள், விஷ பூச்சிகள் தொந்தரவு செய்தன. அரக்கர்களும் துன்பம் செய்தனர். இதையெல்லாம் மீறி, கடவுளை கண்டே தீரும் வைராக்கியத்துடன் தவத்தை தொடர்ந்தனர்.

ஒருமுறை முனிவர் சனாதனர் அங்கு வந்தார். அவரிடம், 'துன்பம் தீரத்தான் கடவுளை வேண்டி தவமிருக்கிறோம். ஆனால், அதற்கும் இந்தக் காட்டில் கிடந்து துன்பப்பட வேண்டியிருக்கிறது. இது குழப்பம் தருகிறது. துன்பத்திற்கு தீர்வும் துன்பம் தானா... என் சந்தேகத்தை தீருங்கள்...' என்றார் தீர்த்தமஸ்.

அதற்கு, 'கடவுளின் அருள் பெற தவம் முதலான வழிபாடுகள் தேவையில்லை. எண்ணெய் தேய்த்து, கங்கை, யமுனை உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடி, புத்தாடை அணிந்து, தீபமேற்றி, இனிப்பு சாப்பிட்டு வழிபட்டாலே அருள் கிடைக்கும்...

'நரகசதுர்த்தசியன்று காலை சூரிய உதயத்துக்கு முன், கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். உங்கள் ஆஸ்ரமத்தில் இருந்தபடியே, 'கங்கையே வா' என அழைத்தாலும், உங்கள் பாத்திரத்தில் இருக்கும் நீரில் கூட, ஆவாஹனம் ஆகி விடுவாள் கங்கை. ஏனெனில், எல்லாருக்கும் புனித தீர்த்தங்களுக்கு செல்ல வசதியிருக்காது...

'நீங்கள் தேய்க்கும் எண்ணெயில் லட்சுமி, அரப்பு பொடியில் சரஸ்வதி, குளிக்கும் நீரில் கங்கை, பூசும் சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் பார்வதி, பூவில் முன்னோரான சுமங்கலிகள், புத்தாடையில் விஷ்ணு, இனிப்பில் அமிர்த கலசம், மருந்தில் தன்வந்திரி, தீபத்தில் சிவன் ஆகியோர் எழுந்தருளுவர்...

'ஆக எல்லா தெய்வங்களையும் வரவழைக்க, சுலபமான ஒரு வழி இருக்க, ஏன் காட்டில் அல்லல்படுகிறீர்கள்...' என்றார் சனாதனர்.

விரதம் கடவுளின் அருளை மட்டுமல்ல, முன்னோரின் ஆசியையும் பெற்றுத்தரும். அன்று எமதர்மராஜாவை எண்ணி தீபம் ஏற்றினால், இருளில் தவிக்கும் முன்னோர் சொர்க்கத்துக்கு செல்வர்.

தீபாவளி சாதாரண பண்டிகையல்ல. இதன் ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்பு உள்ளது. இந்த சிறப்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us