PUBLISHED ON : டிச 07, 2019

குடியரசு தலைவராக பதவி வகித்து மறைந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், படித்த பழமையான ஆசிரியர் பயிற்சி மையத்தால் புகழ்பெற்றது சென்னை, சைதாப்பேட்டை.
இங்குள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்த போது, மாணவர் தலைவனாக இருந்தேன். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் குமரன் என்னுடன் படித்தான். அவனைக் கண்டாலே எனக்கு பிடிக்காது; கிண்டலும், கேலியும் செய்வேன்.
ஆசிரியர் வராத நேரத்தில், வகுப்பை பார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில், அவனை கேள்வி கேட்டு அவமானப்படுத்தி, அற்ப சந்தோஷம் அடைவேன்.
அவன் வாயில்லா பூச்சி. இது பற்றி, குடும்பத்தாரிடமோ, ஆசிரியர்களிடமோ புகார் கூறுவதில்லை.
கற்றல் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்தோம். அந்த சமயம், என் செருப்பு வார் அறுந்து விட்டது. கடும் வெயிலால் சாலை சுட்டது. பாதங்களை ஊன்ற முடியவில்லை. ஆசிரியரிடம் கூறிய போது, 'வெறும், காலில் நடந்து வா... எதுவும் ஆகாது...' என்று, கண்டிப்புடன் கூறி விட்டார்.
நிலைமையை அறிந்த குமரன், பக்கத்து பெட்டிக்கடையில், ஊசி, நுால் வாங்கி, என் செருப்பை தைத்து தந்தான். அவனது உதவும் மனப்பான்மை முன், கூனி குறுகி நின்றேன். செயலால் உயர்ந்து, எனக்கு பிடித்த நண்பனாகி விட்டான். கடுமையாக உழைத்து, தற்போது ஐந்து செருப்புக் கடைகளின் முதலாளியாக உள்ளான்.
அடிக்கடி, என் பிள்ளைகளிடம், அவனது உயர்ந்த குணத்தை பெருமையாக குறிப்பிடுகிறேன்.
- எஸ்.செந்தில்குமார், சென்னை.
