PUBLISHED ON : டிச 07, 2019

திண்டிவனம், சிங்கனுார், அரசு ஆதி திராவிடர் நல ஆரம்ப பள்ளியில், 1995ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
எங்கள் வகுப்பில் படித்தவன் ரமேஷ். கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. மிகவும் சிரமப்பட்டுத் தான் நடந்து வருவான். அவனை யாரும் மதிப்பதில்லை. நட்புடன் பேசுவதுமில்லை. புறக்கணித்து வந்தோம்.
இதை கவனித்த வகுப்பாசிரியை ஈஸ்வரி, 'பள்ளிப் பருவத்தில் கற்க வேண்டியது பாடங்களை மட்டும் அல்ல; ஒழுக்கத்தையும், பண்பையும் சேர்த்து தான். உடன் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவருடன் பண்பாக பழக வேண்டும்...' என்று கூறினார்.
அத்துடன் அந்த மாணவரை துாக்கி, 'தங்கத்திலே குறை இருந்தாலும், தரத்தில் குறைவதுண்டோ... உன் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், அன்பு குறைவதுண்டோ...' என்ற பாடலைப் பாடி கலகலப்பூட்டினார். அந்த செயல், அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்தது.
தற்போது, என் வயது, 34; மாற்றுதிறனாளிகளை பார்க்கும் போதெல்லாம் நெகிழ்ந்து உதவுகிறேன். இதற்கு வழிகாட்டிய ஆசிரியையை மனதில் கொண்டுள்ளேன்.
- ஆர்.ராஜ்மோகன், விழுப்புரம்.
