PUBLISHED ON : பிப் 26, 2016

ஒரு மலைப்பகுதியில் உள்ள காட்டில் வேடன் ஒருவன் வசித்து வந்தான்.
ஒருநாள்-
அவன் வழக்கம் போலவே, கையில் ஆயுதங்களுடன் வேட்டையாடச் சென்றான். நீண்ட நேரமாகக் காட்டில் அலைந்து திரிந்தும், அவனுக்கு எந்த விலங்கையும் வேட்டையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
சோர்வோடு ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அப்போது அந்த மரத்தை அண்ணாந்து பார்த்தான். மரக்கிளையில் தேனடை ஒன்று இருப்பது தெரிந்தது. உடனே துள்ளியெழுந்தான் அந்த வேடன்.
தன்னிடம் இருந்த பொருட்களைக் கொண்டு தீப்பந்தம் ஒன்றினை தயார் செய்தான். பின்னர், தீப்பந்தத்தைக் காட்டி தேனடையில்
இருக்கின்ற தேனீக்களை எல்லாம் விரட்டினான். பின்னர் தேனடையை எடுத்தவாறு மரத்தை விட்டு கீழே இறங்கினான்.
பின்னர் மரத்தடியில் அமர்ந்தபடி அந்தத் தேனடையைப் பிழித்து குடிக்கவேண்டும் என்று முயற்சித்தான். அந்த நேரத்தில், அவன் தோளை யாரோ தொட்டனர்.
திடுக்கிட்டு, திரும்பிப் பார்த்தான் வேடன். அவன் அருகில் விறகு வெட்டி ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் பசியோடும், களைப்போடும் காணப்பட்டான்.
''வேடனே, நான் இந்தக் காட்டில் விறகு வெட்ட வந்தேன். நான் சாப்பாடு எதுவும் எடுத்து வரவில்லை. பசி மயக்கமாக இருக்கிறது. இந்த தேனடையில் சிறிது கொடுத்தால் என் பசியை போக்கிக் கொள்வேன்,'' என்றான் விறகு வெட்டி.
''விறகு வெட்டியே, இந்த தேனடையால் நம் ஒருவரின் பசியைத்தான் தீர்த்துக்கொள்ள முடியும். என்னை விட நீயே அதிகப் பசியுடன் இருக்கின்றாய். அதனால், நான் இந்தத் தேனடையை உனக்கே தந்து விடுகிறேன். நீ இதனைச் சாப்பிடு,'' என்று தன் கையில் இருந்த தேனடையை விறகு வெட்டியிடம் கொடுத்தான் வேடன்.
பசி மயக்கத்தில் இருந்த விறகு வெட்டியோ அந்தத் தேனடையை வாங்கி சாப்பிடத் தொடங்கினான்.
சாப்பிட்டு முடித்து தன் பசிஅடங்கிய பின்னர், விறகு வெட்டி வேடனைப் பார்த்தான்.
''ஐயா, வேடரே, என் பசியைப் போக்கிவிட்டு நீர் பசியோடு இருக்கின்றீரே. உமது உயர்ந்த குணத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். இப்போதே காடுகளில் அலைந்து திரிந்து காய், கனிகளைக் கொண்டு வருகிறேன்,'' என்றான்.
விறகு வெட்டியே, ''வேண்டாம். நீ இப்போதுதான் உணவு உண்டாய். சற்று நேரம் இளைப்பாறிக்கொள். என்னுடைய குடிசை அருகில்தான் இருக்கிறது. குடிசையில் எனக்கேற்ற உணவு இருக்கிறது. நான் அங்கு சென்று சாப்பிட்டுக் கொள்கிறேன்,'' என்று கூறியபடி சென்றான் வேடன்.
வேடனையே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் விறகு வெட்டி.
ஒரு நாள் காட்டில் நல்ல மழை பெய்தது. இடியுடன் கூடிய கன மழை தொடர்ச்சியாகப் பெய்யத் தொடங்கியது.
விறகு வெட்ட வந்த விறகுவெட்டியோ மழையில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள அங்குமிங்குமாக ஓடினான். அப்போது குகை ஒன்று இருப்பதைக் கண்டான். உடனே, அந்தக் குகைக்குள் சென்று ஒதுங்கிக் கொண்டான்.
அந்தக் குகையில் பிசாசு ஒன்று வாழ்ந்து வந்தது. அது விறகு வெட்டியைப் பார்த்தது.
''விறகு வெட்டியே வா... வா...'' என்றது பிசாசு.
பிசாசு தன்னை வரவேற்பதைக் கண்ட விறகு வெட்டி திடுக்கிட்டான். குகையை விட்டு ஓட முயற்சித்தான். அதனைக் கண்ட பிசாசோ அவனைத் தடுத்து நிறுத்தியது.
''விறகு வெட்டியே! இங்கிருந்து ஓட முயற்சிக்காதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். சற்று பொறுமையுடன் நின்று நான் சொல்வதைக் கேள்,'' என்றது பிசாசு.
பிசாசு இவ்வாறு கூறியது விறகு வெட்டிக்கு வியப்பை அளித்தது. பிசாசைப் பயமில்லாமல் பார்த்தான் விறகு வெட்டி.
உடனே பிசாசு, ''விறகு வெட்டியே, நீ இந்தக் காட்டில் விறகு வெட்ட வரும் போது எத்தனை நாட்களோ உன்னை நான்
பார்த்திருக்கிறேன். அப்போதே உன்னை நான் அடித்துக் கொன்றிருக்கலாம். ஆனால், நான் உன்னை ஒன்றும் செய்யவில்லையே...
அப்போதும் நான் உன்னை ஒன்றும் செய்ததில்லை. இப்போதும் நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். அதனால் நீ என் குகையில் தைரியமாக இருக்கலாம்,'' என்றது.
''உன்னுடைய பேச்சைக் கேட்ட பின்னர், எனக்குப் பயம் போய் விட்டது. ஆனால், நீ ஏதோ சொல்லப் போவதாக கூறினாயே, அது என்னவென்று கேட்கின்ற ஆவலில் நான் இருக்கிறேன்,'' என்றான் விறகுவெட்டி.
''விறகு வெட்டியே. இந்தக் காட்டில் ஒரு வேடன் வசித்து வருகிறான். அவனது உடல் மிகவும் திடகாத்திரமாக இருக்கும். அவன் தான் வேட்டையாடிய விலங்குகளைச் சாப்பிட்டு வாழ்ந்து வருவதால் அவன் ரத்தமானது மிகவும் சுவையாக இருக்கும். அவனைக் கொன்று அவன் ரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கின்றது. அதற்காகத்தான் நான் உன்னுடயை உதவியை நாடுகிறேன்,'' என்றது பிசாசு.
பிசாசு எதனால் அப்படிச் சொல்கிறது என்பதை விறகு வெட்டியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் குழப்பத்தோடு பிசாசை நோக்கினான்.
''பிசாசே, எதனால் நீ என் உதவியை நாட வேண்டும் என்கிறாய்? நீ சொல்வது எனக்குப் புரியவில்லையே,'' என்றான்.
''விறகு வெட்டியே! இதோ இப்போது நான் உனக்குப் புரியும்படியாகச் சொல்கிறேன். வேடன் கழுத்தில் ஒரு தாயத்துக் கயிற்றினைக் கட்டியிருக்கின்றான். அந்தக் கயிறு அவன் கழுத்தில் இருக்கும் வரையிலும் நான் அவனை நெருங்க முடியாது.
''எனவே, நீ வேடனிடம் நட்புக்கொண்டு அவனோடு தங்கி அவன் கழுத்தில் இருக்கும் தாயத்துக் கயிற்றை அவிழ்த்துவிட வேண்டும். அதன் பின்னர், வேடன் காட்டில் தனியாகச் செல்லும் நேரத்தில், அவனைக் கொன்று அவனது ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடுவேன்,'' என்றது பிசாசு.
பிசாசு இவ்வாறு கூறியதைக் கேட்டதும் விறகுவெட்டி திடுக்கிட்டான்.
'ஐயோ, இதென்ன கொடுமையாக இருக்கிறதே! எனக்கு உதவி செய்து என் பசியைப் போக்கிய வேடனை இந்தப் பிசாசு கொல்ல நினைக்கிறதே. எப்படியாவது இந்தப் பிசாசிடம் இருந்து நாம் வேடனைப் பாதுகாக்க வேண்டும், என்று மனதுள் நினைத்துக் கொண்டான் விறகு வெட்டி.
உடனே, அவன் பிசாசை நோக்கினான்.
''பிசாசே, நீ சொல்கிறபடி வேடனோடு நட்புகொண்டு அவன் கழுத்தில் கட்டியிருக்கும் தாயத்தினை அவிழ்த்துவிடுகிறேன். அதன் பின்னர் உன்னுடைய விருப்பம் போல் நீ அவனைக் கொன்று விடலாம்,'' என்றான் விறகு வெட்டி.
''சபாஷ், விறகு வெட்டியே! நீ என்னுடைய திட்டத்திற்கு ஒத்துழைத்து விட்டாய். அதனால் ஒருபோதும், நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்,'' என்றது பிசாசு.
''பிசாசே, நாளையே நான் இந்த வேலையை முடித்துக் கொள்கிறேன். இப்போது நீ குகையின் உள்ளே சென்று நிம்மதியாக தூங்கு. நானும் தூங்குகிறேன். மழை நின்ற பின்னர் உன்னை எழுப்பி விடைபெற்றுக் கொள்கிறேன்,'' என்றான் விறகுவெட்டி.
''சரி விறகு வெட்டியே, நீ என்னுடைய விருப்பப்படி நடப்பதாக சம்மதித்து விட்டாய். இனி நானும் உன்னுடைய விருப்பப்படியே நடந்து கொள்கிறேன்,'' என்றது பிசாசு.
பிசாசு குகையின் உட்புறத்தில் தூங்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விறகு வெட்டியும் தூங்குவதும் போன்று நடித்தான்.
பிசாசு நன்றாகத் தூங்கிய பின்னர். குகையை விட்டு எழுந்து கொண்டான் விறகுவெட்டி. அப்போது மழையும் நின்றிருந்தது. மெல்லக் குகையை விட்டு வெளியே வந்த விறகு வெட்டி, பெரிய பாறாங்கல்லினால் குகையின் வாசலை மூடினான்.
பிசாசு குகையை விட்டு வெளியே வராதபடி இறுக்கமாக மூடிய விறகுவெட்டி, அங்கிருந்து ஓடினான். காட்டில் வேடனின் குடிசை எந்த இடத்தில் இருக்கிறது என்பது தெரியாமல், தேடி அலைந்தான்.
'நாம் எப்படியாவது வேடனிடம் பிசாசு கூறியதைத் தெரியப் படுத்திட வேண்டும். குகை வாசலை அவ்வளவு சீக்கிரமாகத் திறந்திட முடியாது. இருந்தாலும்... அந்த பிசாசானது பாறாங்கல்லை நகர்த்தி விட்டு வேடனைத் தேடி வந்தாலும் வந்து விடலாம். அதற்குள் நான் வேடனுடன் காட்டை விட்டே வெளியேறிவிட வேண்டும்,' என்று முடிவு செய்தான் விறகு வெட்டி.
அந்த நேரத்தில் வேடன் வேறோரு பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்தான். வேடனைப் பார்த்த விறகு வெட்டியோ ஓடோடிச் சென்றான்.
''வேடனே நில். உன்னைப் பார்க்கத்தான் நான் ஓடோடி வருகிறேன்,'' என்றான் விறகுவெட்டி.
''விறகு வெட்டியே எதற்காக இப்படிப் பதட்டத்தோடு ஓடி வருகிறாய்? உனக்கு என்ன நடந்தது?'' என்று வியப்போடு கேட்டான் வேடன்.
''வேடனே! எனக்கொன்றுமில்லை. உனக்குத்தான் ஆபத்து ஏற்படப் போகிறது. அந்த ஆபத்தில் இருந்து உன்னை காப்பாற்றவே ஓடோடி வருகிறேன்,'' என்றான் விறகுவெட்டி.
''விறகுவெட்டியே, நீ என்ன சொல்கிறாய்? நீ சொல்வது ஒன்றும் புரியவில்லையே,'' என்று குழப்பத்தோடு கேட்டான் வேடன்.
''வேடனே, மழைக்காக நான் ஒரு குகையில் ஒதுங்கி நின்றேன். அந்தக் குகையில் ஒரு பிசாசை சந்தித்தேன். அந்த பிசாசோ உனது ரத்தத்தைக் குடிக்க உதவி செய்யும்படி என்னை கேட்டுக் கொண்டது. உன்னுடைய கழுத்தில் இருக்கும் தாயத்துக் கயிற்றை நான் அவிழ்த்து எடுக்க வேண்டும் என்றும், அப்படி அவிழ்த்து விட்டால் அதன் பின் உன்னைக்கொன்று உன் ரத்தத்தைக் குடித்து விடுவதாகவும் என்னிடம் தெரியப்படுத்தியது.
''நானோ அதனை அந்தக் குகையிலேயே அடைத்து வைத்துவிட்டு வந்து விட்டேன். நீ இந்த காட்டில் இருக்கும் வரையிலும் அந்தப் பிசாசால் உனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். அதனால் நான் சொல்வதைக் கேள். நீ இனிமேல் இந்தக் காட்டில் வேட்டையாடி உயிர் வாழ வேண்டாம். என்னோடு கிராமத்திற்கு வந்துவிடு. நானே உனக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்து தருகிறேன்,'' என்றான் விறகு வெட்டி.
விறகு வெட்டியின் அன்பைக் கண்டு வேடன் மனம் நெகிழ்ந்து விட்டான்.
''விறகுவெட்டியே! நான் உனக்கு தேனடை கொடுத்த நன்றிக்கா, என் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கின்றாய். உன்னுடைய பாசத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். ஆனால்... நான் உன்னோடு கிராமத்திற்கு வந்து உனக்குக் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அந்தப் பிசாசால் எனக்கு ஆபத்து வந்தால் வரட்டும். நான் காட்டில்தான் இருக்கப் போகிறேன்,'' என்று பிடிவாதமாகக் கூறினான் வேடன்.
''வேடனே, நீ உன்னுடைய பிடிவாதத்தைக் காட்டுகிறாய். இனி நானும் என்னுடைய பிடிவாதத்தைக் காட்டுவேன். இந்தக் காட்டில் நானும் உன்னோடு தங்கப் போகிறேன். ஒருவேளை நீ அந்த பிசாசுக்கு பலியாக நேர்ந்தால், நானும் உன்னோடு பலியாவேன்,'' என்றான் விறகுவெட்டி.
விறகு வெட்டியின் அன்பைக் கண்டு மேலும் மனம் நெகிழ்ந்தான் வேடன்.
''விறகு வெட்டியே, உன்னுடைய அன்பிற்கு விலை ஏது? உன்னுடைய அன்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக உயிர்விடத் துணிந்த உத்தம நண்பன் நீ. உன் விருப்பப்படியே இப்போதே நான் கிராமத்திற்கு வருகிறேன்,'' என்றான் வேடன்.
விறகு வெட்டியும் அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தான். பின்னர், இருவரும் கிராமத்திற்கு சென்று நலமாக வாழ்ந்தனர்.
