PUBLISHED ON : நவ 06, 2021

ஜெர்மன் அரசர், இரண்டாம் ஜோசப், மாறுவேடம் அணிந்து, நாட்டைச் சுற்றிப் பார்ப்பது வழக்கம். ஒருமுறை சாதாரண உடையணிந்து நாட்டில் வலம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, 'ஐயா... ஏதாவது காசு இருந்தால் கொடுங்கள்; என் தாய்க்கு மருந்து வாங்கி கொடுக்க வேண்டும்...' என்றான் ஏழைச்சிறுவன்.
கபடமற்ற அந்த முகத்தைக் கண்டதும், 'ஏனப்பா... உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல தெரியவில்லையே...' என பரிவுடன் விசாரித்தார் அரசர்.
'ஆமாம் ஐயா... இதுவரை யாரிடமும் பிச்சை கேட்டதில்லை; வியாதியால் அவதிப்படுகிறார் தாய். மருந்து வாங்க பணம் இல்லை; அதனால், பிச்சை எடுத்தாவது சிகிச்சை அளிக்க தீர்மானித்தேன்...'
'உன் தாயை எந்த வைத்தியர் கவனிக்கிறார்...'
'பணம் இல்லாவிட்டால் எந்த வைத்தியர் கவனிப்பார்; ஒருவரும் கிடையாது; பிச்சை வாங்கி பணம் சேர்த்தபின், வைத்தியரை தேட வேண்டும்...'
'சரி... இனி யாரிடமும் பிச்சை வாங்க வேண்டாம்; உடனே, ஒரு வைத்தியரை பார்...'
பெரும் பணத்தை கொடுத்து, அவன் வீட்டு முகவரியையும் தெரிந்து புறப்பட்டார் அரசர்.
நன்றி செலுத்தியபடி, வைத்தியரை தேடி ஓடினான் சிறுவன்.
சிறுவன் தந்த விலாசத்துக்கு போனார் அரசர். அங்கு, படுக்கையில் கிடந்தாள் ஒரு பெண்.
அவளிடம், 'நான் ஒரு வைத்தியர்; உன் உடம்புக்கு என்ன...' என்றார் அரசர்.
'உடம்புக்கு ஒன்றுமில்லை! வறுமை தான் வியாதி; கணவர் இறந்து, சில ஆண்டுகள் ஆகின்றன; கையில் இருந்த பணம் செலவழிந்து விட்டது; அதனால் தான், படுத்து விட்டேன்...' என்றாள்.
'கவலைப்படாதீர்கள்... இந்த மருந்தைச் சாப்பிடுங்கள்...'
காகிதத்தில் ஏதோ எழுதி, பக்கத்தில் வைத்து சென்றார் அரசர்.
சிறிது நேரத்தில் வைத்தியருடன் வந்த சிறுவன், 'அம்மா... கவலைப்பட வேண்டாம்; யாரோ ஒரு நல்லவர் நிறையப் பணம் கொடுத்தார். இதோ வைத்தியரை அழைத்து வந்திருக்கிறேன்...' என்றான்.
'இப்போது தான் ஒரு வைத்தியர் வந்து போனார்; ஏதோ மருந்து எழுதி வைத்திருக்கிறார்; அது என்னவென்று பார்...' என்றாள் தாய்.
அந்த கடிதத்தை பிரித்தான் சிறுவன். அதில், அரசரின் கையெழுத்து கண்டு ஆச்சரியப்பட்டான்.
'வந்தது வைத்தியர் அல்ல; அரசர் ஜோசப். நமக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கும்படி, கஜானா அதிகாரிக்கு உத்தரவு போட்டிருக்கிறார்...' என்றான்.
மக்கள் மீது, அன்பு காட்டும் அரசரை வாழ்த்தினாள் அம்மா.
குழந்தைகளே... துன்பப்படுவோருக்கு இயன்ற உதவி செய்து வாழ்வோம்.
