PUBLISHED ON : ஜூலை 22, 2011
அந்த எறும்புப் புற்று சிறிதாக இருந்து நாளடைவில் பெரிதாக வளர்ந்துவிட்டது. அதனால் கருநாகம் ஒன்று சவுகரியமாக அதன் உள்ளே புகுந்து வசிக்கத் தொடங்கியது. அந்த எறும்புகளை அது லேசாக எண்ணி அலட்சியப்படுத்தியது. அதன் நண்பர்கள் அதை எச்சரித்தன.
''டேய் நண்பா... அந்த குட்டி எறும்புகளை லேசாக எண்ணாதே... அவை மிகவும் பொல்லாதவை. இடத்தை காலி பண்ணு!'' என்று சொன்னார்கள். ஆனால், பாம்போ அவற்றின் பேச்சை கேட்காமல் அலட்சியம் செய்தது.
ஒருநாள் அந்தப் பாம்பு வழக்கமாக வரும் ஓட்டை வழியாக வராமல், வேறு ஒரு சிறிய ஓட்டை வழியாக வெளியே வந்தது. அதனால் அதன் உடலில் ஆங்காங்கு சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது. ரத்த வாடை வீசியதும், எறும்புகளுக்கு குஷி பிறந்து விட்டது. அவற்றுக்கு மிகவும் பிடித்தமானதாயிற்றே அது. உடனே எறும்புகள் சாரை சாரையாக வந்து அந்தப் பாம்பைக் கடிக்கத் தொடங்கின.
பாம்பு படபடவென நெளிந்தது வலி பொறுக்காமல். அதனால் பல எறும்புகள் நசுங்கிச் செத்தன; சில எறும்புகள் அடிபட்டுத் துடித்தன. இருந்தும் அப்பாம்பை அந்த எறும்புகள் விட்டபாடில்லை. அதன் ருசிக்காக எறும்புக் கூட்டம் இன்னும் சேர்ந்துவிட்டது. அதன் பிறகும் கேட்க வேண்டுமா? அந்தப் பொடி எறும்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்தப் பாம்பைக் கொன்றேவிட்டன. அதன் பிறகு அவை அப்பாம்பைச் சுவைத்துச் சாப்பிட்டு களித்தன.
