PUBLISHED ON : ஜன 22, 2016

ஒரு விஞ்ஞானி அவர்.தன்னைப் போல புத்திசாலித் தனமான, கடுமையாக உழைக்கக் கூடிய வேறு எவரும், இந்த உலகில் கிடையாது என்பது அவரது எண்ணம். இதனால் எப்போதும் பெருமையோடு காணப்படுவார்.
தனது ஆய்வுக்கூடத்தை எப்போதும் தாழிட்டு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடுவார். அந்த நேரத்தில் யாராவது தொந்தரவு செய்தால் அவருக்கு கடுமையான கோபம் வந்துவிடும். அதனால் அவரது ஆய்வு பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறி ரகளை செய்வார். இதனால், இந்த பெருமைக்கார விஞ்ஞானியிடம் பேசுவதற்கே எல்லாரும் பயந்து விலகி இருந்தனர்.
ஆனால், அவர் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளான இரண்டு பூனைகளுக்கு இது தெரியவில்லை. அவை சர்வ சுதந்திரமாக ஆய்வகத்தில் உலாவித் திரியும். தீவிர ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது கூட சுற்றித் திரியும்.
இதனால் எரிச்சலடைந்த பெருமைக்கார விஞ்ஞானி, தனது வேலைக்காரனை அழைத்தார். ஆய்வக சுவரில் பெரிதாக ஒரு துளையும், சிறிதாக மற்றொரு துளையும் அமைக்கச் சொன்னார். அவரது வளர்ப்புப் பூனைகளில் ஒன்று பெரியது; மற்றொன்று சிறியது.
''பெரிய துளை வழியே பெரிய பூனை வெளியே சென்றுவிடும். சிறிய துளை வழியே சிறிய பூனை வெளியே சென்றுவிடும்,'' என்று வேலைக்காரனிடம் விவரித்தார் விஞ்ஞானி.
''எதற்கு ஐயா இரண்டு துளைகள்? ஒரேயொரு பெரிய துளை மட்டும் போதுமே. அதன் வழியே இரண்டு பூனைகளும் வெளியேறிவிடுமே?'' என்றான் வேலைக்காரன்.
இப்படியொரு பதிலை அந்த விஞ்ஞானி, வேலைக்காரனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. 'இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியாமல் இருக்கும் நான் எப்படி ஒரு மகத்தான விஞ்ஞானியாக இருக்க முடியும்?' என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. அத்தோடு, அவர் மனதில் நிரம்பி வழிந்திருந்த விஞ்ஞானி யின் பெருமை முற்றிலுமாக அழிந்து போயிற்று.
இப்படி ஆணவம் கொண்டு, பின்னர் அதனை அழித்த விஞ்ஞானி யார் தெரியுமா?
E=mc 2 என்ற சமன்பாட்டைக் கண்டு பிடித்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான்.
