PUBLISHED ON : டிச 14, 2019

விழுப்புரம் மாவட்டம், ஆனந்தா நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், 1994ல், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பு ஆசிரியராக இருந்த முரளி, மிகவும் அன்பானவர்; சிறப்பாக பாடம் நடத்துவார்.
ஒரு நாள், சிறப்பு தேர்வு நடத்தினார். படிக்காததால், எதையும் எழுத முடியாமல் தவித்தான் என் நண்பன். அவனுக்கு, என் விடைத்தாளைக் காட்டினேன். அதைக் காப்பி அடித்து, என்னை விட, மதிப்பெண் அதிகம் பெற்று விட்டான்.
அதை தாங்க முடியவில்லை. பொறாமையில் ஆசிரியரை சந்தித்து, 'ஐயா... என் நண்பன், என் விடைத்தாளை பார்த்து எழுதினான். காப்பியடித்தவனுக்கு, கூடுதல் மதிப்பெண் கிடைத்துள்ளது. அவனுக்கு, ஐந்து மதிப்பெண்களை குறையுங்கள்...' என்றேன்.
அதைக் கேட்டதும், எனக்கு, ஐந்து மதிப்பெண்களை குறைத்து விட்டார் ஆசிரியர். மிகவும் அதிர்ச்சியடைந்த என்னிடம், 'தவறு செய்தவனை விட, தவறு செய்ய துாண்டியவனுக்குத் தான் அதிக தண்டனை...' என, விளக்கினார்.
எனக்கு, 42 வயதாகிறது; அந்த ஆசிரியர், அன்று கூறிய அறிவுரையை மனதில் கொண்டு, தவறு தவிர்த்து வாழ்கிறேன்.
- என்.பி.முருகன், விழுப்புரம்.
