PUBLISHED ON : செப் 26, 2020

அன்று கைதிக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றும் நாள்.
வழக்கமாக கேட்பது போல, 'உன் கடைசி ஆசை என்ன...' என்றார் சிறை அதிகாரி.
'பேபி அம்மா கையால ரொட்டி சாப்பிடணும்...'
'என்னய்யா சொல்ற... போயும் போயும் பேபி அம்மா கையாலையா...'
சலிப்புடன் ஏற்பாடு செய்தார் சிறை அதிகாரி.
நிறைவேற்ற வந்தவர், 'மகனே... சிறையில் மலம் அள்ளும் வேலையை தினமும் செய்கிறேன். அருவெறுப்பாய் பலரும் என்னைப் பார்க்கின்றனர். இந்த நிலையில், என் கையால் ரொட்டி சாப்பிட ஆசைப்படுகிறாயே...' என்றபடி கலங்கிய கண்களுடன் கைதிக்கு ஊட்டி விட்டார் பேபி அம்மா.
மகிழ்வாய் சாப்பிட்டு முடித்து, துாக்கு மேடைக்கு நடந்த கைதி, வேறு யாருமல்ல; இந்திய சுதந்திர போராட்டதின் மாபெரும் வீரர் பகத்சிங். அவரது, 113ம் பிறந்ததினம் -செப்., -27ல் கொண்டாடப்படுகிறது. அவர் தியாகத்தைப் போற்றுவோம்.
- பூபதி பெரியசாமி
