தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புதிர் ! புதிர் ! புதிர் !

புதிர் ! புதிர் ! புதிர் !

புதிர் ! புதிர் ! புதிர் !


PUBLISHED ON : ஜன 07, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், ''என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்!'' என்றான்.

அவனும் ஒத்துக் கொண்டான். பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன்.

''ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்!'' என்றான்.

மூத்தவன், ''அதெப்படி முடியும்? ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது!'' என்றான்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர். வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, ''இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு!'' என்று கூறி புதிரைச் சொன்னார்.

''முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள்!'' என்றார்.

இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.

மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, ''என் புதிருக்கு விடை சொல்!'' என்றார். ''மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது.

''இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.

''மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றனவே!'' என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, ''பசு எனக்குத்தானே!'' என்று கேட்டான்.

''முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்!'' என்றார் பிரபு.

இளையவன் அழைக்கப்பட்டான்.

''நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.

''மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்!''

''இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே!''

பசுவைக் கொடுத்தபின் பிரபு கேட்டார். ''இந்தப் புதிர்களுக்கு உனக்கு விடை கூறியது யார்?'' என்றார்.

''என் மகள் மரூஸ்யா!''

''அவள் என்ன அவ்வளவு விவேகியா?''

''ஏதோ கொஞ்சம்!''

''என் அளவிற்கு அவளுக்கு அறிவு இருக்கிறதா என்பதை பரீட்சை செய்து பார்த்து விடுகிறேன்!''

பிரபு பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, ''இதோ இந்த பத்து அவித்த முட்டைகளையும் உன் மகளிடம் கொடுத்து, ஒரு கோழியினால் அடைகாக்க வைத்து, பத்துக் குஞ்சுகளை ஓர் இரவிற்குள் பொரிக்க வைத்து அதே குஞ்சுகளை அதே இரவில் கோழியாக்கி, முட்டை போடவைத்து, பத்து முட்டைகளில் மூன்றை எடுத்து அடையாக்கி நாளைக் காலை உணவிற்கு எனக்குக் கொண்டுவா!'' என்றார்.

தன் மகள் மரூஸ்யாவிடம் சென்று அதை அப்படியே ஒப்புவித்தார் அவளது தந்தை. தன் மகள் இந்தப் புதிருக்கு விடை எப்படிச் சொல்லப்போகிறாள் என்று கவலைப்பட்டார். ஆனால், அவளோ எதிர் புதிர் போட்டாள். தன் தந்தையிடம் வேக வைத்த துவரைகள் அடங்கிய ஒரு பானையைக் கொடுத்து, ''இதில் உள்ள துவரையை நிலத்தில் விதைத்து, முற்றியவுடன் அறுத்து எனது கோழிக் குஞ்சுகளுக்கு உணவாக தயாராக வைக்கும்படி கூறுங்கள்!'' என்றாள்.

அவளுடைய தந்தையும் அவ்வாறே பிரபுவிடம் சென்று சொன்னார். துவரையைப் பார்த்த பிரபு அவற்றை நாய்க்குப் போட்டுவிட்டு, சணல் தண்டு ஒன்றைக் கொடுத்து, ''இதை ஊறவைத்து காயவைத்து நூறு ஜெகமுள்ள துணி தயாரிக்கச் சொல்!'' என்றார். ஆனால், அவளோ அதற்குப் பதிலாக மிக மெல்லிய குச்சி ஒன்றைக் கொடுத்து, ''இதிலிருந்து நூலை நூற்பதற்கு ஒரு ராட்டினமும், கதிரும் செய்து தரும்படிக் கூறுங்கள்!'' என்றாள்.

அவளது அறிவின் ஆழத்தைக் கண்ட பிரபு, ''உன் மகளை நாளை என்னை வந்து பார்க்கச் சொல். ஆனால், அவள் நடக்கவோ, சவாரி செய்யவோ கூடாது. வெறுங்காலுடனோ, செருப்புடனோ வரக்கூடாது. பரிசுடனோ, பரிசின்றியோ வரக்கூடாது. இது கடுமையான உத்தரவு!'' என்றார்.

மறுநாள் பனிச்சறுக்கு வண்டியில் வெள்ளாட்டைப் பூட்டி, ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து, முயல் ஒன்றையும், சிட்டுக்குருவி ஒன்றையும் தெரியாமல் எடுத்துச் சென்றாள் மரூஸ்யா. அவள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வருவதைக் கண்ட பிரபு, அவள் மீது நாய்களை ஏவினார். பதிலுக்கு இவள் முயலை வெளியே விட, நாய்கள் முயலைத் துரத்தின.

''இதோ உங்களுக்கு ஒரு சிறிய பரிசு!'' என்று சிட்டுக்குருவியைக் கொடுத்தாள். அது அவரது கையில் சிக்காமல் பறந்துவிட்டது. தான் சொல்லியபடியே வந்துவிட்ட அவளை நினைத்துப் பெருமைப் பட்டார் பிரபு. அப்போது இருவர் வழக்கு ஒன்றைக் கொண்டு வந்தனர்.

''நாங்கள் இருவரும் அடுத்தடுத்து இரு குதிரைகளை ஓர் இரவில் கட்டி இருந்தோம். இரண்டு குதிரைகளும் அன்றிரவே குட்டிகளை ஈன்றன. அவனுடைய குதிரையின் குட்டி இறந்துவிட்டது. என்னுடைய குட்டியைப் பார்த்து அவனுடைய குதிரைக் குட்டி என்கிறான்!'' என்றான் ஒருவன். அடுத்தவனைக் கேட்டதற்கு அவனும் அவ்வாறே பதில் சொன்னான்.

பிரபு இரு குதிரைகளையும் தனித்தனியே கட்டச் சொல்லி, குட்டியை விடச்சொன்னார். குட்டி இரு குதிரைகளிடமும் செல்லாமல் தனியே ஓடிவிட்டது. அந்தத் தீர்ப்பை அவர் மரூஸ்யாவிடம் கேட்டார். மரூஸ்யா குட்டியைக் கட்டச் சொல்லி குதிரைகளை அவிழ்த்துவிடும்படி கூறினாள். அவ்வாறே செய்தனர். தாய்க்குதிரை தன் குட்டியைத் தேடிக்கொண்டு ஓடிவந்தது.

பிரபுவின் தலைக்கனம் குறைந்தது. தன்னைவிட மரூஸ்யா புத்திசாலி என்று ஒப்புக்கொண்டார். அவளுக்கு வெகுமதியளித்துப் பாராட்டினார்.

நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us