தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அரிய நாதர்!

அரிய நாதர்!

அரிய நாதர்!


PUBLISHED ON : ஜன 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ளது மெய்ப்பேடு என்ற சிற்றூரில் நானூறு ஆண்டுகளுக்கு முன், வேளாளகுலத்தைச் சேர்ந்த காளத்தியப்பார் சிவகாமி தம்பதியர் அங்கு வாழ்ந்து வந்தனர். அவர்களது ஒரே புதல்வன் அரியநாதன்.

அரியநாதன் மூன்று மாதக் குழந்தையாக இருந்த போது ஒருநாள் அக்குழந்தையை தரையில் கிடத்திவிட்டு, தோட்டத்தில் கீரை பறிக்கச் சென்றார்.

சிவகாமி அம்மையார் கீரை பறித்துக் கொண்டு வந்தவர் அங்கு கண்ட காட்சியை பார்த்து, 'ஆ' என அலறினார். தோட்டத்தில் நீர் இறைத்துக் கொண்டிருந்த காளத்தியப்பர் என்னவோ, ஏதோ என்று பதறியபடி ஓடிவந்தார்.

குழந்தையின் தலைக்கு மேல் ராஜநாகம் படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. காளத்தியப்பர் வந்தவுடன் ராஜநாகம் படத்தைச் சுருக்கிக் கொண்டு, 'சரசர' வென ஓடிவிட்டது. இதைக் கேட்ட ஊரார் 'உங்கள் பிள்ளை அரச போகத்தோடு வாழ்வான் என்பதன் அடையாளம் இது' என்று கூறி குழந்தையை வாழ்த்தினர்.

அரியநாதருக்குப் பதினாறு வயதாயிற்று. கல்வி கேள்விகளில் மட்டுமல்லாது மற்போர், சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகளிலும் சிறப்புடன் விளங்கினார்.

ஒருநாள்-

திடலில் நண்பர்களோடு சிலம்பு விளையாடிக் கொண்டிருக்கும்போது, இவர் கம்பு சுழற்றும் லாவகத்தைக் கண்ட ஒரு முதியவர், ''தம்பி! இங்கே வா!'' என்றழைத்தார்.

''உன் வலதுகையைக் காட்டு,'' என்றார்.

''குழந்தாய்! இது சாதாரணக் கையல்ல புத்திரரேகையும், தனரேகையும், கீர்த்திரேகையும் அமர்க்களமாய் இருக்கிறது. நீ பேரும், புகழும் பெறுவாய். உடனே விஜயநகரம் செல்... மன்னர் கிருஷ்ண தேவராயர் கலைகளையும், திறமைகளையும் மதிப்பவர். இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால் குடத்திலிட்ட விளக்காகி விடுவாய். குன்றின் மேலுள்ள தீபமாய் பிரகாசிக்க வேண்டும் உன் அறிவு,'' என்றார்.

வயதானவர் வாழ்த்துகிறார் என்று அதை லேசாக நினைத்தார் அரியநாதர்.

''அப்பா என் வார்த்தை முகஸ்துதி அல்ல. நீ செல்வந்தனாய் வாழும்போது, இந்த ஏழைக் கிழவனை எங்கே நினைக்கப் போகிறாய்?'' என்று கேலியாகச் சொன்னார் பெரியவர்.

அரியநாதன், ''என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்? நீங்கள் சொன்னபடி நடக்குமானால், என் சொத்தில் கால் பாகத்தை உங்களுக்குத் தந்து விடுகிறேன், என்று ஒரு பனை ஓலை தேடி எடுத்து, சொன்னபடி எழுதி கிழவரிடம் கொடுத்து வணங்கி விடைபெற்றார்.

''குழந்தாய்! ஒரு காரியத்தை மனதில் நினைத்தால், அதை நிறைவேற்றுவதில் தீவிரமாய் முயலவேண்டும். அவர்களுக்குக் கடவுளும் உதவி செய்வர்,'' என்று கூறினார் பெரியவர்.

அந்த வார்த்தையை அப்படியே பெற்றோரிடம் கூறினான் அரியநாதன்.

அரியநாதரை தெலுங்கு கற்றுக்கொள்ளும்படி தந்தை காளத்தியப்பர் கூறினார். விரைவில் தெலுங்கு கற்றுக்கொண்டார் அரியநாதர்.

காளத்தியப்பர் அதற்குள் விஜயநகரத் தளபதி நாகம நாயக்கரைச் சந்திக்க சிபாரிசுக் கடிதம் வாங்கித் தந்தார். அதன்படி விஜயநகரம் சென்று நாகம நாயக்கரிடம் கணக்கராகச் சேர்ந்தார் அரியநாதர்.

மன்னரை சந்திக்க தளபதி நாகமநாயக்கர் போகும் போதெல்லாம் அரியநாதரையும் அழைத்துச் செல்வார். ஒரு சிலசமயம் அரியநாதர் வரவில்லை என்றால் மன்னர் கிருஷ்ணதேவராயரே 'ஏன் அரியநாதரை அழைத்து வரவில்லை' என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். மன்னன் கேட்கும் சிக்கலான பிரச்னைகளுக்கு புத்திசாலித்தனமாகவும், பணிவாகவும் பதில் சொல்வார் அரியநாதர்.

அவரை அரண்மனைக் கணக்கராக நியமித்தார் அரசர்.

பாண்டியநாடு விஜயநகர ஆளுகைக்குக் கீழ்வந்தது. பாண்டிய நாட்டுக் குழப்பங்களைத் தீர்த்த, விசுவநாதன் என்பவரை முறைப்படி மன்னராகவும், அரியநாதரை மந்திரியாகவும் நியமித்தார் கிருஷ்ண தேவராயர். அன்று முதல் 'தளவாய் அரியநாதர்' என்று எல்லாராலும் அழைக்கப்பட்டார்.

ஒருநாள் சபையில் மந்திராலோசனை நடந்து கொண்டிருக்கும் போது, காவலன் வந்து, ''மன்னிக்க வேண்டும். மெய்ப்பேட்டிலிருந்து ஒரு அந்தணர், 'தளவாய் அவர்களைப் பார்த்து விட்டுத் தான் போவேன்' என்று நெடுநேரமாய் பிடிவாதம் பிடிக்கிறார்,'' என்று கூறினான்.

மெய்ப்பேடு என்றதும் அவரை உடனே சந்திக்க விரைந்தார் தளவாய் அரியநாதர். அந்தணர் தளவாயை வணங்கி, ''நவராத்திரி கொலு வைக்க வீடு சுத்தம் செய்யும்போது, பரணியில் இருந்த அப்பாவின் பெட்டியில் இந்த ஓலை இருந்தது. இது தாங்கள் எழுதிக் கொடுத்ததா?'' என்று கேட்டு ஒரு ஓலையை நீட்டினார்.

ஓலையைப் பார்த்தவுடன் அரியநாதருக்கு எல்லாச் சம்பவங்களும் ஞாபகம் வந்துவிட்டது.

''ஆமாம்! இந்த ஓலை விற்பன்னருக்கு நான் எழுதிக் கொடுத்ததுதான்! அவரால்தான் நான் தெலுங்கு கற்றுக் கொண்டு விஜயநகரம் வந்தேன். இன்று புகழோடு, பொருளோடு நன்றாக வாழ்கிறேன். இதில் உள்ளபடி என் சொத்தில் கால்பாகம் உங்களுக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறேன்,'' என்றார் அரியநாதர்.

வந்தவர் மெய்சிலிர்த்துப் போனார்.

''நாளை, நாளை என்று அலைய வைத்து ஏமாற்றும் இந்த உலகத்தில், விளையாட்டாய் என்றோ எழுதிக் கொடுத்த ஒலைத் துணுக்குக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்த பெருந்தன்மையைப் பாராட்ட, என் நாவுக்கு வலுவில்லை. தளவாய் அவர்களே... உங்கள் சொத்தை நிர்வகிக்கும் திறன் எனக்கில்லை. குடியிருக்க ஒரு சிறுவீடும், பயிரிட ஒரு துண்டு நிலமும், கன்று போட்ட ஒரு இளம் பசுவும் கொடுத்தால் போதும்,'' என்று அன்புடன் கூறினார்.

''பேராசையற்ற உங்களைப் போன்றவர்களால்தான் வானம் பொய்க்காமல் இருக்கிறது! ஒரு வீடு போதும். ஆனால், ஒரு மாடு போதாது,'' என்று குறும்புடன் கூறிய அரியநாதர் பட்டும், பொன்னும் நிறையப் பசுமாடுகளும் கொடுத்து அனுப்பினார்.

அரியநாதரைக் காண வந்தவர் யார் என்று பார்க்க வந்த அரசரும், விசுவநாதரும் அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டு வியந்தனர். அரியநாதரின் வாய்மையால் அரசர் அவர் மீது கொண்ட மதிப்பு மேலும் கூடியது.

''நிஜமாகவே காணக் கிடைக்காத 'அரிய' நாதர் தான் நீங்கள்!'' என்று மன்னர் வாய் நிறையப் பாராட்டினார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us