PUBLISHED ON : ஜூலை 01, 2011

பாண்டவர்களுக்கும், துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியராக துரோணச்சாரியார் இருந்தார். பாண்டவர்களே அறிவில் சிறந்து விளங்க, கவுரவர்கள் மூடர்களாக விளங்கினர். தன் மக்கள் மூடர்களாக இருப்பதை அறிந்து திருதராட்டினன் அரசன் வருந்தினான்.
துரோணாச்சாரியாரிடம் வந்த அவர், ''ஆசிரியரோ! நீங்கள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளவில்லை. பாண்டவர்களுக்கு நன்றாகக் கல்வி கற்றுத் தருகிறீர்கள். என் மக்களுக்குச் சரியாகச் சொல்லி தருவது இல்லை. அதனால்தான் பாண்டவர்கள் அறிவாளிகளாகவும், என் மக்கள் மூடர்களாகவும் விளங்குகின்றனர். உங்களிடம் வஞ்சக எண்ணம் இல்லாவிட்டாலும், உங்களிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் அறிவில் ஒரே அளவு உடையவர்களாக அல்லவா இருக்க வேண்டும்?'' என்று கோபத்துடன் கேட்டான்.
''அரசே! என்னிடம் வஞ்சகம், சூழ்ச்சி எதுவும் கிடையாது. மாணவர்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துத்தான் பாடம் சொல்லித் தருகிறேன். அவரவர் இயல்புக்கு ஏற்ப கற்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?'' என்றார்.
அவரின் கருத்தை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் அருகில் இருந்த சீடன் ஒருவனை அழைத்த துரோணர், ''நீ உடனே ஓடிச் சென்று பாண்டவர்களிடமும், கவுரவர்களிடமும் நம் ஆசிரியரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது என்று சொல். அவர்கள் என்ன செய்கின்றனர் என்று பார்த்து வந்து சொல்,'' என்றார்.
கவுரவர்களிடம் சென்ற அவன், ''நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது.'' என்றான்.
இதைக் கேட்ட துரியோதனன் கோபத்துடன், ''நாம் ஆசிரியரைத் தூக்கிச் சென்ற ஓணான் இனத்தைச் சும்மா விடக் கூடாது. கண்ணில் படும் ஓணான்களை எல்லாம் கொல்வோம். 'வாருங்கள்,' என்று தன் தம்பியர்களிடம் சொன்னான்.
''அண்ணா! அப்படியே செய்வோம்,'' என்று தம்பியர்களும் புறப்பட்டனர்.
எல்லாரும் சேர்ந்து ஓணான் வேட்டையில் இறங்கினர். பல ஓணான்கள் கொல்லப்பட்டன.
அங்கிருந்து புறப்பட்ட சீடன் பாண்டவர்களிடம் வந்தான். ''நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது,'' என்றான்.
இதைக் கேட்ட தருமன் சிரித்தான். ''நம் ஆசிரியர் எத்தகைய வல்லமை வாய்ந்தவர்? அவரை ஓணான் தூக்கிச் செல்ல முடியுமா? எதற்காக இந்த விளையாட்டு?'' என்று கேட்டான்.
தம்பிகளும் தருமனுடன் சேர்ந்து சிரித்தனர்.
துரோணாச்சாரியாரிடம் திரும்பி வந்த சீடன், நடந்ததை அப்படியே சொன்னான்.
அருகில் இருந்த திருதராட்டினனைப் பார்த்து, ''அரசே! நீங்களும் நடந்ததைக் கேட்டீர்கள் அல்லவா? உங்கள் மக்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் இல்லை. இருந்தால் என்னை ஓணான் தூக்கிச் சென்றது என்ற செய்தியை நம்புவார்களா? ஓணான் வேட்டையில் இறங்குவார்களா? பாண்டவர்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் உள்ளது. எதையும் உடனே புரிந்து கொள்கின்றனர். சிறந்த அறிவு பெற்றுள்ளனர்.'' என்றார் துரோணாச்சாரியார்.
ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்தான் திருதராட்டினன். மூடர்களா இருக்கும் தன் மக்களை நினைத்து, வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார்.
***
