PUBLISHED ON : ஜூன் 10, 2023

கன்னியாகுமரி மாவட்டம், சீயோன்புரம், எல்.எம்.எஸ்.உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்தபோது தமிழாசிரியராக இருந்தார் சார்லஸ் தங்கதுரை. இலக்கியங்களை மேற்கோள் காட்டி வசீகரமாக பாடம் நடத்துவார். ஒழுக்கத்தை பின்பற்றுவதில் கண்டிப்பு காட்டுவார்.
வகுப்புக்கு தவறாமல் புத்தகங்களை எடுத்து வர வேண்டும். கேள்விகளுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டும். வீட்டுப் பாடங்களை எழுதி வந்திருக்க வேண்டும். இவற்றை ஒவ்வொரு வகுப்பிலும் கண்காணித்து கண்டிப்புடன் பின்பற்ற வைப்பார்.
அன்று, 'புத்தகங்கள் எடுத்து வராதோர், வராண்டாவுக்கு போங்க...' என உத்தரவிட்டார். ஏழு பேர் வெளியேறினோம். முதன்முறையாக என்னையும் அந்த கூட்டத்தில் கண்டதால், 'நீ நல்ல பையன் அல்லவா... ஒழுங்கா புத்தகம் எடுத்து வரும் நீயுமா...' என கேட்டபடி, அந்த தண்டனையை திரும்பப் பெற்றார். மன்னிப்பு வழங்கியது நெகிழ்ச்சி தந்தது.
அன்று முதல், கல்லுாரி படிப்பை முடிக்கும் வரை புத்தகம் எடுத்து செல்வதை தவறாமல் பின்பற்றினேன்.
தற்போது எனக்கு, 69 வயதாகிறது; அந்த ஆசிரியர் கற்றுத்தந்த நேர்மை, ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை தவறாமல் கடைப்பிடிப்பதால், மேலகிருஷ்ணன்புதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராக போட்டியின்றி மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகிக்கிறேன்.
- ஆர்.கே.லிங்கேசன், கன்னியாகுமரி.
தொடர்புக்கு: 93858 63634
