PUBLISHED ON : டிச 02, 2011

விராலிபுரம் என்ற ஊரில் வைசாலி என்ற செல்வச் சீமாட்டி இருந்தாள். அழகான ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினாள். அவளுக்குப் பிடித்து இருந்தால் என்ன விலை கொடுத்தும் வாங்கிவிடுவாள். அந்த ஓவியங்களை எல்லாம் வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைத்தாள்.
விருந்தினர் யார் வந்தாலும் அவற்றை அவர்களிடம் பெருமையுடன் காட்டுவாள். அவளுடைய மாளிகைக்குச் சென்னையில் இருந்து நித்யா என்ற சீமாட்டி வந்திருந்தாள். பளபளக்கும் பட்டுப் புடவை அணிந்து இருந்தாள். விலை உயர்ந்த வைர மாலை அவள் கழுத்தில் பளபளத்தது. இருவருமே தங்களது செல்வத்தில் பெருமை படைத்தவர்கள்.
வழக்கம் போலவே வைசாலி அவளிடமும் ஒவ்வொரு ஓவியமாகக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தாள்.
''கைக் குழந்தையுடன் இருக்கும் இந்தத் தாயின் ஓவியம் எவ்வளவு அழகாக உள்ளது பார்த்தீர்களா? இதைப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். பக்கத்தில் உள்ளதே தோகை விரிக்கும் அழகிய மயிலின் ஓவியம். அதை ஏழாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்!'' என்று பெருமையுடன் சொன்னாள்.
நித்யாவுக்கு இவளது பெருமை ஆத்திரத்தை கொடுத்தது. ''வெறும் துணியில் பல வண்ணங்கள் தோய்க்கப்பபட்ட இவற்றிற்கா இவ்வளவு விலை கொடுத்தாய்?'' என்று கேட்டாள்.
''உங்கள் கழுத்தில் பளபளக்கிறதே வைர மாலை, அதன் விலை என்ன?'' என்று கேட்டள் வைசாலி.
''சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதன் விலை ஒரு லட்சம் ரூபாய்!'' என்று பெருமையுடன் சொன்னாள் நித்யா.
''வைரம் என்பது என்ன? வெறும் கல்தானே. இதற்கு இவ்வளவு விலை தந்து இருக்கிறீர்களே. நான் மனிதர்களால் செய்யப்பட்ட உயர்ந்த கலைப் படைப்புகளுக்கே முதன்மை தருவேன்!'' என்றாள் வைசாலி.
அப்போது அவர்கள் மாளிகை நோக்கி வந்த துறவி ஒருவர், ''பணப் பெருமைகளால் எந்த ஏழையின் வயிறும் நிரம்பப் போவதில்லை. ஏழைகளுக்கு தர்மம் செய்வதையும் உங்களது உயர்ந்த கொள்கையாக கொண்டால் மிகவும் நல்லது!'' என்றாரே பார்க்கலாம் இருவரது முகமும் பேயறைந்ததுபோல் ஆனது.
***
