PUBLISHED ON : செப் 25, 2021

மதுரை, கல்லுாரி உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 10ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியர் எஸ்.ராஜகோபால ஐயர். அவர் பாடம் நடத்தும் விதமே வித்தியாசமானது; பேச்சில் இனிமை, மொழிநடையில் எளிமை, தெளிவான உச்சரிப்பு என, எதையும் எளிதாக புரிய வைப்பார்.
ஒவ்வொரு வெள்ளியன்றும் மாலை வகுப்பில், ஒரு புத்தகத்தை வாசிக்க வைப்பார். எழுத்துகளை சரியாக உச்சரித்து முறையாக வாசித்தால், பரிசுகள் வழங்குவார்; சரியாக வராவிட்டால் கனிவுடன் திருத்துவார்.
ஒருநாள் புத்தக வாசிப்பில் என்னை உற்று நோக்கி முதுகில் தட்டி கொடுத்தார். மாணவர்களை கரவொலி எழுப்ப வைத்து, 'உன் வாசிப்பில் தெளிவும், ஏற்ற இறக்கம், வல்லின மெல்லின சொற்களுக்கு அழுத்தமும் தருவது வியக்க வைக்கிறது; பிற்காலத்தில் நல்ல பேச்சாளராக, எழுத்தாளராக புகழ் பெறுவாய்...' என்று ஆசிர்வதித்தார். அது மனதில் எழுச்சியை ஏற்படுத்தியது.
இன்று பல அறிஞர்கள் சூழ்ந்த மேடைகளில் பேசுகிறேன்; பல இதழ்களில், என் கதை, கவிதை, கட்டுரைகள் வெளி வருகின்றன. தமிழுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி தமிழக அரசின், தமிழ் வளர்ச்சி துறை, 'தமிழ்ச்செம்மல்' என்ற விருது வழங்கி கவுரவித்தது.
தற்போது என் வயது, 76; என் புகழுக்கு ஆணி வேராக திகழும் அந்த ஆசிரியர் பெற்பாதங்களில், இந்த விருதை சமர்ப்பித்துள்ளேன்!
- சு.லக்குமணசுவாமி, மதுரை.
தொடர்புக்கு: 97897 88989
