PUBLISHED ON : செப் 27, 2013

அரசர் கிருஷ்ண சந்திரரின் அரசவையில் நன்கு கல்வி கற்ற அறிஞர்கள் பலர் இருந்தனர்.
அரசர் அறிஞர்களுக்கு மதிப்பு அளிக்காமல், கல்வி அறிவு இல்லாத வேலைக்காரன் கோபாலுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்தார்.
இதைக் கவனித்த அறிஞர்கள், ''நமக்கு இப்படிப்பட்ட மரியாதையை அரசர் தராமல், ஒரு வேலைக்காரனுக்கு கொடுக்கிறார்' என்று பொறாமை கொண்டனர்.
'எப்படியாவது கோபாலை அரசவைக்கு வராமல் தடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?' என்று எல்லாரும் ஒன்று கூடிப் பேசினர்.
அவர்களில் முதியவரான அறிஞர், ''நானும் கோபாலை ஒழிக்கப் பல முயற்சிகளை செய்து விட்டேன். எதுவும் வெற்றி பெறவில்லை. இப்போது ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். இதில், அவன் தப்பிக் கவே முடியாது. அவனை அரசவைக்கு வராமல் செய்து விடுகிறேன்,'' என்றார்.
''உங்களைத்தான் நாங்கள் நம்பி இருக் கிறோம். அவன் அரசவையில் இருக்கும் வரை, நாம் யாரும் பெருமை பெற முடியாது,'' என்றனர் மற்ற அறிஞர்கள்.
''நீங்களும் என்னுடன் வாருங்கள். அரசரைச் சந்திப்போம்,'' என்றார் அவர்.
எல்லாரும் அரசவைக்கு சென்று அரசரை சந்தித்தனர்.
''அரசே! உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது. மற்ற நாட்டு மக்கள் உங்கள் நல்லாட்சியைப் புகழ்ந்து பேசுகின்றனர். நீங்கள் அறிஞர்களையும், கலைஞர்களையும் மதித்துப் போற்றுகிறீர்களாம்,'' என்றார்.
இதைக் கேட்ட அரசர் மகிழ்ச்சி அடைந்தார்.
''அரசே! நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்களால் உங்கள் புகழ் எங்கும் பரவியுள்ளது. பல நாட்டு அறிஞர்களுக்கும் அழைப்பு விடுங்கள். இங்கு வந்தால் அவர்கள் சீரும், சிறப்புடனும் இருக்கலாம்!'' என்று சொல்லுங்கள்.
''நிறைய அறிஞர்கள் வருவார்கள். அப்படி ஒவ்வொருவர் வரும் போது கல்வி அறிவில்லாத ஒருவரை நீக்கி விடுங்கள். அவையினர் எண்ணிக்கை அப்படியே இருக்கும்,'' என்றார்.
அவரின் சூழ்ச்சியை அறியாத அரசர், ''நல்ல திட்டம்தான். அப்படியே செயல்படுத்துவோம்,'' என்றார்.
'தன்னை விரட்டவே, இந்தச் சூழ்ச்சி நடக்கிறது என்பது கோபாலுக்குப் புரிந்தது. இந்த முயற்சியைத் தடுக்க வேண்டும்' என்று நினைத்தான்.
குறுக்கிட்ட அவன், ''அரசே! நன்கு படித்த அறிஞர்கள் எல்லாரும் அறிவுக்கூர்மை உடையவர்கள் அல்ல... நம் நகரத்தில் உள்ள யாரேனும் ஒரு வணிகனை அழைத்துச் சோதித்து பாருங்கள். இவர்களை விட அறிவுக்கூர்மை உடையவனாக இருப்பான். அதனால் இவர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம்!'' என்றான்.
இதைக் கேட்ட அந்த அறிஞர் கோபம் கொண்டார்.
''இங்குள்ள அறிஞர்களால்தான் ஆட்சியே நடக்கிறது,'' என்று கத்தினார்.
''நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். கல்வி அறிவுடன் அறிவுக் கூர்மையும் இருந்தால்தான் அறிஞர்களால் பயன் உண்டு. மெத்தப் படித்ததால் மட்டும் எந்தப் பயனும் விளையாது.
வணிகர்களின் வாழ்க்கையே போராட்ட வாழ்க்கை. அதில், அவர்கள் நிலைத்து நிற்க அறிவுக் கூர்மை தேவை. ஆனால், அறிஞர்களுக்கு அறிவுக்கூர்மை இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை,'' என்றான்.
''நீ என் கருத்தை மறுக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படிப் பேசுகிறாய். அறிஞர்களைவிட வணிகன் அறிவுக் கூர்மை உடையவன். என்பதை உன்னால் நிரூபிக்க முடியாது!'' என்றார் அறிஞர்.
குறுக்கிட்ட அரசர், ''கோபால்! அறிஞர்களை விட வணிகர்கள் அறிவுக்கூர்மை உடையவர்கள் என்கிறாய்... இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.
''அரசே! என்னால் நிரூபிக்க முடியும். அதற்கு ஒரு மாத தவணை வேண்டும்!''
''அப்படியே தருகிறேன்!'' என்றார் அரசர்.
இரண்டு வாரங்கள் பொறுமையாக இருந்தான் கோபால்.
அரசருடன் தனித்து இருக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது.
''அரசே! நீங்கள் வைத்த சோதனையை நான் மறந்து விடவில்லை. உங்கள் உதவி இல்லாமல் என்னால் ஏதும் செய்ய முடியாது,'' என்றான்.
''நான் என்ன உதவி செய்ய வேண்டும்? சொல் செய்கிறேன்,'' என்றார் அரசர்.
''அரசே! நாளை அரசவை கூடும். அங்கே நீங்கள், 'எனக்காக இரண்டு பேர் தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். அந்த முடியை இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப் போகிறேன். முடி காணிக்கை தருபவர் முதியவர்களாக இருந்தால் நல்லது' என்று அறிவியுங்கள்.
''என்னைப் போட்டிக்கு அழைத்த முதிய அறிஞரை மொட்டை அடிக்கத் சொல்லுங்கள். பிறகு யாரேனும் வணிகனை அழைத்து மொட்டை அடிக்கச் சொல்லுங்கள். அது மட்டும் அல்ல... அவர்கள் தலைமுடியை இழக்க எவ்வளவு கேட்கின்றனர் என்றும் கேளுங்கள். அந்தத் தொகையைக் கொடுப்பதாகச் சொல்லுங்கள்,'' என்றான்.
அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
அடுத்த நாள் அரசவை கூடியது. அரியணையில் வந்து அமர்ந்தார் அரசர்.
அவையினரைப் பார்த்து, ''இறைவனுக்குச் சிறப்புக் காணிக்கை தர நினைக்கிறேன். எனக்காக இரண்டு பேர் தங்கள் தலையை மொட்டை அடித்துக் வேண்டும். அவர்களுடைய தலைமுடி காணிக்கையாகச் செலுத்தப்படும். அவர் களில் ஒருவர் அறிஞராகவும், இன்னொருவர் வணிகராகவும் இருக்க வேண்டும். உங்களில் யார் தாமே முன் வந்து மொட்டையடித்துக் கொள்ளப் போகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அவையிலிருந்த யாரும் வாயைத் திறக்கவில்லை. எல்லாரும் அமைதியாக இருந்தனர்.
மொட்டை அடித்துக் கொள்ள யாருக்கும் விருப்பம் இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.
''யார் முடியைக் காணிக்கை தருகிறீரோ அவருக்கு அன்பளிப்பு தருகிறேன்,'' என்றார் அவர்.
அப்போதும் யாரும் முன் வரவில்லை.
போட்டியை அறிவித்த முதிய அறிஞரைப் பார்த்தார் அவர்.
''நீங்கள்தான் இங்கே உள்ளவர்களிலேயே பெரியவர். நீங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டால் என்ன? அதற்காக என்ன வேண்டும்? கேளுங்கள் தருகிறேன்,'' என்றார்.
''அரசே! நூறு பொற்காசுகள் தருவதாக இருந்தால்,'' என்று இழுத்தார்.
சிரித்த அரசர், ''கவலை வேண்டாம். நூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார்.
அவரும் பெற்றுக் கொண்டார்.
அரண்மனை முடி திருத்துபவன் அங்கு வந்தான். அந்த அறிஞரின் தலையை மழுங்க மொட்டை அடித்தான். அப்போது அரண்மனை வாயில் வழியாக வணிகன் ஒருவன் சென்றான். அவனை அரசவைக்கு அழைத்து வருமாறு வீரர்களிடம் சொன்னார் அரசர்.
அந்த வணிகன் அங்கு வந்தான்.
அவனைப் பார்த்த அரசர், ''நீ உன் தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். கடவுளுக்குக் காணிக்கையாகத் தரவே, உன் தலை முடியைக் கேட்கிறேன். அந்த அறிஞருக்குத் தந்தது போல் நூறு பொற்காசுகள் தருகிறேன். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.
- தொடரும்.
