sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சர் - ஐசக் நியூட்டன்!

சர் - ஐசக் நியூட்டன்!

சர் - ஐசக் நியூட்டன்!


PUBLISHED ON : செப் 28, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2012


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கிலாந்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் 1642ம் ஆண்டில், டிசம்பர் மாதம் 25ம் தேதி பிறந்தார் நியூட்டன். சிறுவயதிலேயே இவரது ஆராய்ச்சி ஆர்வத்தைக் கண்ட அவரது தாயார், தன் அண்ணனின் யோசனைப்படி, அவரை கேம்ப்ரிட்ஜ் நகரில் உள்ள ட்ரினிடி கல்லூரியில் சேர்த்தார். இக்கல்லூரியில் தான் பைனாமியல் தியரி எனும் ஈருறுப்புத் தோற்றம் கண்டுபிடிக்கப் பட்டது.

இவர் கல்லூரியில் படிக்கும்போதே நுண் கணிதத்தைக் கண்டு பிடித்தார். இந்த வகை நுண் கணிதத்தின் மூலம் கணிதத் துறையில் பல்வேறு புரட்சி செய்தமையால், கணித உலகமே நியூட்டனைப் பாராட்டியது. இவர் இந்தக் கணிதப் புரட்சியைச் செய்தபோது வயது இருபத்திரெண்டு. அவர் கணிதத்தில் மட்டுமின்றி, இயற்பியலிலும் ஆர்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார்.

இவர் தனது ஆராய்ச்சிகளை வானவியல் பக்கம் 1664ம் ஆண்டில் திருப்பினார். அதாவது வானில் உள்ள கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். சந்திரனைச் சுற்றிலும் உள்ள மெல்லிய கீற்றுகள் எவ்வாறு உண்டானது என்பது பற்றித் தீவிரமாக சிந்திக்கலானார்.

இந்த ஒளிக்கற்றைக்கும், வான வில்லில் ஒளிரும் ஒளிச் கற்றைகளுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை சோதனைகள் மூலம் ஆராய்ந்தார். இவரது கண்டு பிடிப்புகளைக் கண்டு பலரும் வியந்து பாராட்டினர். இவரது ஆராயும் அறிவைக் கண்ட அதிகாரிகள் இவருக்கு உபகார சம்பளம் அளிக்க முன்வந்தனர்.

1665ம் ஆண்டு உயிரைப் பலி வாங்கும் கொள்ளை நோய் பரவவே, இவர் கேம்ப்ரிட்ஜிலிருந்து வெளியேறி தன் சொந்தக் கிராமத்தைப் போய்ச் சேர்ந்தார். அங்கும் கிரக ஆராய்ச்சியிலேயே இவரது மனம் சென்றது. இவர் கிரகங்களைப் பற்றி ஆராய்ந்த கெப்ளரின் வாதங்களின் படியே அவரது கருத்துக்களை முன் வைத்து அதில் வெற்றியும் கண்டார். ஆனால், நியூட்டனுக்கு முன்பே கிரகங்களின் நிலை பற்றி பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட்டனர். அவர்களின் ஆராய்ச்சிகளைப் பின் பற்றிய நியூட்டனும் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

கெப்ளரின் விதியானது 1609ம் ஆண்டிலும், மூன்றாவது விதியானது 1619ம் ஆண்டிலும் வெளியானது. அவரது விதியானது, இன்றளவும் பாராட்டுக்களைப் பெறுகிறது. கெப்ளரின் விதிப்படி கிரகங்களின் தூரத்தைதான் நுட்ப மாகக் காண முடிந்தது. ஆனால், அது எத்தனை தூரம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. கிரகங்களின் சலனங்களைக் கண்டுப்பிடித்த கெப்ளர் அதற்குரிய காரணங்களைக் கண்டறியவில்லை. அவர் கூறிய சில காரணங்களை அன்றைய காலத்தினர் ஏற்றுக் கொண்டாலும், நியூட்டனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கலிலியோ கண்ணுக்குப் புலப்படாத பல விண் மீன்கள், விண்பொருள்களை வான் தொலை நோக்கி மூலமாக மக்களுக்கு விளக்கிக் கூறினார். ஆனால், நியூட்டனோ, கலிலியோவின் பொருளியக்க நியதிகளோடு டெக்கார்டின் முடிவுகள் முரண்படுவதாக உணர்ந்தார். எனவே, இவர் கலிலியோவைப் பின்பற்றி சலன விதிகள் பற்றிய ஆராய்ச்சி களில் ஈடுபட்டார். ஆனால், இவரது விதிகள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருந்தன.

ஒரு பொருளின் இயக்கத்தை மாற்ற, சக்தி என்பது மிக முக்கியம். வேறு எந்த சக்தியும் இல்லாத நிலையில் இயக்கத்தோடு கூடிய ஒரு பொருள் அதே வேகத்தோடு, அதே திசையில் நேராகச் சென்று கொண்டிருக்கும் என்பதே நியூட்டனின் முதல் விதியாகும்.

ஒரு பொருள் தன் நிலையிலிருந்து மாறும்போது, அந்தச் சக்தியினுடைய அளவுக்கு ஏற்ப அதே திசையில் அந்தப் பொருளும் வேகத்திலோ, திசையிலோ மாறும் என்பது இரண்டாவது விதியாகும்.

ஒன்றுக்கொன்று மாறாக இயங்குவதாகப் புலப்படும் இருவகைக் சக்திகளும் சம அளவாய் நின்று பொருளின் போக்கை நிர்ணயிக்கும். ஒரு சக்தி தனித்து அமையாதாகையால் எப்போதும், அது இரு திறப்பட்டே அமையும் என்பதை மூன்றாவது விதி விளக்குகிறது. ஒரு வகைச் சக்தியால் ஒரு பொருளை நாம் தள்ளும்போது அந்தச் சக்திக்கு எதிராக இன்னொரு சக்தி அதில் அமைந்து நமது சக்திக்குத் தடையை உண்டாக்குகிறது.

பூமியின் புவி ஈர்ப்புத் தன்மையைப் பற்றி முதன் முதலில் கண்டறிந்தவர் நியூட்டன் என்றே பலர் எண்ணினாலும், அதற்கு முன்பாகவே, பலர் பூமியின் தன்மை இழுப்பதாலேயே பொருள்கள் கீழே விழுகின்றன என்பதைக் கண்டறிந்தனர்.

இருப்பினும், கிரகங்களின் இயக்கத்துக்கு இந்த புவி ஈர்ப்பு விசையே காரணம் என்றும், கிரகங்கள் சூரியனிடமிருந்து எவ்வளவு தூரமுள்ளனவோ அவ்வளவுக்கு மாறாக வேகம் சலன கதியில் வித்தியாசப் படுகிறது என்றும் முதன் முதலாகக் கண்டறிந்தவர் ஐசக் நியூட்டனே. நியூட்டன் பற்றிய குறிப்புகளை அவரது நண்பர் வால்டோ எழுதி வைக்கவில்லையென்றால், நியூட்டனின் ஆப்பிள் பழச் சம்பவம் நமக்குத் தெரியாமலே போயிருக்கும்.

ஒருநாள் நியூட்டன் தன் தோட்டத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுந்தது. அதைப் பார்த்த நியூட்டனின் சிந்தனை ஆப்பிள் மரத்தின் மீது சென்றது. அப்போது அவர் ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள் நேராக பூமியில் வந்து விழக் காரணம் என்ன? அந்தக் கனி மரத்தின் மீது ஏன் செல்லவில்லை என்று சிந்தித்தார். ஆக, பூமி சாதாரண பொருட்களை மட்டுமின்றி கிரகங்களையும் தன் வசம் இழுக்கிறது என்பதை உணர்ந்தார். அன்று அவர் சிந்தையைத் தூண்டச் செய்யக் காரணமாயிருந்த சம்பவமே அவர் கண்டுபிடித்த இயக்கம் மற்றும் புவி ஈர்ப்பு விதிக்குக் கட்டுப்பட்ட கிரகச் சுழற்சி நியதிக்கும் காரணமாக அமைந்தது.

சூரியனைச் சுற்றிய பாதையில் கோளின் இயக்கத்துக்குக் காரணமான விசை மரத்திலிருந்து ஆப்பிள் கனியை விழச் செய்யும் என்ற முடிவிற்கு வந்தார். இவர் தம் 24வது வயதில் 1666ம் ஆண்டில் ஈர்ப்பியலைப் பற்றிய விதியை வெளியிட்டு மிகப்பெரும் புகழ் பெற்றார்.

அவர் ஒளியியல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகையில், ஒளியின் இயல்பையும், சேர்க்கையையும் அறிந்து அதன்பின் ஆறு அங்குல நீளமும், ஒரு அங்குல சுற்றளவும் கொண்ட தூரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்றையும் செய்தார். அவர் கண்டுபிடித்த அக்கண்ணாடி லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் இன்றும் உள்ளது. அதன்பின் தயாரித்த டெலஸ்கோப்புகள் யாவும், நியூட்டனின் டெலஸ்கோப்பை அடிப்படை யாகக் கொண்டே செய்யப்பட்டன.

நியூட்டனின் திறன்கண்ட கேம்ப்ரிட்ஜ் அவரை கல்லூரி அங்கத்தினராக்கிக் கொண்டது. இவருக்காக இவரது நண்பர் டாக்டர் பாரோ என்பவர் தன் பதவியை விட்டுக் கொடுத்தார். அப்போது கணித சம்பந்தமான ஒரு விவாதம் எழவே, நியூட்டன் தான் ஏற்கனவே எழுதி வைத்த குறிப்புகளைக் கண்ட டாக்டர் பாரோ பெரிதும் வியப்படைந்தார்.

அதில், கலிலியோ பாதியிலேயே விட்ட அரும் பெரும் விஷயங்களைத் தெளிவாக விளக்கியிருந்தார்.

கிரகங்களின் தொலைவிற்கேற்ப, தொலைவின் மடங்குகள் மாறுபட்டு, அந்தச் சக்தியானது அவற்றை எப்படி இழுக்கிறது என்ற ஆராய்ச்சியிலேயே நியூட்டன் இரவும், பகலும் தன் பொழுதைக் கழித்தார். இந்த ஆராய்ச்சியை அவர் லிங்கன் ஷைரில் நடத்திக் கொண்டிருந்தார். அந்த இடம் அசவுகரியமாக இருந்தபடியால் அவரால் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

பூமியின் உருவத்தைப் பற்றியும், அதன் சுற்றளவை பற்றியும் தெரிந்து கொண்ட அவர், கிரகங்களைப் பற்றியும் கணக்கிட்டுக் கொண்டார். இரண்டு வருட காலமாக வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருந்தார்.

'சிந்திப்பதில் பொறுமையும், செயலில் விடா முயற்சியுமே என் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். இதைத் தவிர எனக்கு வேறு எந்தச் சிந்தனையுமே கிடையாது' என்று அவர் குறிப்பிடுகிறார்.

கணித சம்பந்தமான மற்றும் டெலஸ்கோப், பூமியின் புவிஈர்ப்பு விசை, கோள்களைப் பற்றி, பூமியின் உருவம், கன அளவு போன்ற விதிகள், சூத்திரங்கள் என்று எல்லாவற்றையும் உலகிற்கு உணர்த்திய நியூட்டன், அறிவியல் உலகில் மிகப் பெரும்சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.

டிரினிடி கல்லூரியில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்கு வயது 51. அவர் தனது குறிப்புகள் அத்தனையையும் புத்தகமாக வெளியிடலாம் என்ற நோக்கில் அதையெல்லாம் மேஜை மீது வைத்திருந்தார். அப்போது அந்தக் குறிப்புகளை எலியொன்று கடித்து நாசமாக்குவதைப் பார்த்து நியூட்டனின் நாய், எலியுடன் போராடியது. அப்போது அதனருகில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி அக்குறிப்பின் மீது விழுந்து அத்தனையும் எரிந்து சாம்பலாகிவிட்டது. கோவிலுக்குச் சென்று திரும்பிய நியூட்டன் நாயின் மீது எவ்வித கோபமும் கொள்ளாமல், 'உன்னால் எவ்வித செயல் நடந்துவிட்டது என்று பார்த்தாயா?' என்று கேட்டார். வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்த குறிப்புகள் முற்றிலும் அழிந்துவிட்டதைக் கண்ட நியூட்டனின் மனம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

கேம்ப்ரிட்ஜில் 1705ம் ஆண்டு நடந்த சிறப்பு விழாவில் நியூட்டனுக்கு, அரசி அன்னி, 'சர்' எனும் பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.

ராயல் சங்கத்தின் கூட்டத்தில் தலைமை வகிக்க லண்டன் சென்ற நியூட்டன், வீட்டிற்குத் திரும்பி வருகையிலேயே உடல் நலமின்றி திரும்பி வந்தார். அவர் தமது 85ம் வயதில் 1727ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us