PUBLISHED ON : ஏப் 18, 2026

அன்புள்ள அம்மா,
என் கணவர் துாய்மை பணியாளர். எனக்கு, திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன; இரண்டு பெண் குழந்தைகள். நான் பி.எஸ்சி., கல்லுாரி படிப்பில், பாதியில் நின்றவள். அப்போது விட்ட படிப்பை, இப்போது என் கணவர் தொடரச் சொல்கிறார். படித்து, போட்டி தேர்வு எழுதி, அரசு பணிக்கு போகச் சொல்கிறார்.
'பெண்களுக்கு படிப்பு முக்கியம், சுய சம்பாத்தியம் அவசியம். எந்தப் பெண்ணும், தன் சொந்தக் காலில் நிற்க வேண்டுமே தவிர, கணவரை எதிர்பார்க்கக் கூடாது' என்கிறார்.
பெண்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார். இத்தனைக்கும் அவர் பிளஸ் 2 தான் படித்திருக்கிறார். ஆனாலும், என்னை உயர் படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். நான் தொடர்ந்து படிக்கலாமா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அம்மா...
- இப்படிக்கு,
ஸ்ரீதேவி
அன்பு ஸ்ரீதேவி,
என்ன கேள்வி கேட்கிறாய்... படிக்கலாமாவா, இதில் என்ன சந்தேகம்; படித்தே ஆக வேண்டும் பெண்ணே. இப்படிப்பட்ட கணவர் கிடைத்தது உன் பாக்யம்; பூர்வ ஜென்மப் புண்ணியம். எத்தனைப் பேருக்கு இது போன்ற பரந்த மனமும், பெருந்தன்மையும் கொண்ட கணவர் கிடைப்பார்.
நீ விட்ட படிப்பை, உடனடியாக தொடர வேண்டும். பட்டம் பெற்ற பின், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2 போன்ற அரசு போட்டி தேர்வுகளை எழுத வேண்டும். குரூப் 4 வரை, அரசு வேலைகள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் புத்தகங்கள் உள்ளன. சற்று கடினமானதாகத் தோன்றினாலும், விடாது முயன்றால் வெற்றி பெற இயலும்.
இத்தேர்வுகளில் வெற்றி பெற்ற பெண்கள் பலர், என் மாவட்டமான திருவண்ணாமலையில் தாசில்தார், துணை தாசில்தார், துணை கலெக்டர், துணை டி.எஸ்.பி., வணிக உதவி கமிஷனர் என, பல உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.
குருப் 1 தேர்வில் தேறினால், துணை கலெக்டராக நியமனம் பெற்று, எட்டு ஆண்டுகள் பணி புரிந்து, கலெக்டராக பதவி உயர்வு தகுதி பெறுகின்றனர். ஆகவே, உன்னால் முடியும் பெண்ணே.
உன் கணவரின் அன்பும், ஆசியும் இருக்கும் போது, கவனமாக படித்து உழைத்தால், கலெக்டர் ஸ்ரீதேவியாக உயர்வாய். இப்போதே என் வாழ்த்துகள்.
- அன்புடன், இந்துமதி.
