PUBLISHED ON : ஏப் 25, 2026

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம், செயின்ட் தெரஸா ஆரம்பப் பள்ளியில், 1987-ல், எல்.கே.ஜி., படித்தேன். குழந்தைப் பருவம் என்பதால், பாப்ரா மிஸ், கற்பகம் மிஸ் என்ற இருவர் தவிர, மற்ற ஆசிரியை பெயர்கள் நினைவில் இல்லை.
அந்த ஆசிரியைகளை உற்று கவனித்து, அவர்களைப் போலவே நடித்து, வீட்டில் விளையாடுவேன். ஆண்டு விழா மாறுவேட போட்டியில், ஆசிரியை போல கொண்டை போட்டு கலந்து கொண்டேன்.
ஆசிரியைகள் அனைவரும் என்னை கட்டிப் பிடித்து பாராட்டினர். 'கண்டிப்பாக பெரிய ஆசிரியையாக வருவாய்...' என, அவர்கள் வாழ்த்தினர்.
அவர்கள் வாழ்த்தியபடியே, எம்.எஸ்.சி., படித்து, புள்ளியியல் துறையில் எம்.பில்., - பிஎச்.டி., முடித்து, தற்போது குரோம்பேட்டை, வைஷ்ணவா கல்லுாரியில், உதவி பேராசிரியையாக பணி புரிந்து வருகிறேன்.
தற்போது என் வயது, 42. ஆரம்ப பள்ளியில் எனக்கு முன்னுதாரணமாக இருந்த ஆசிரியைகளின் வாழ்த்து, பாராட்டு தான், என்னை ஒரு பேராசிரியையாக உயர்த்தி உள்ளது. என் இரு குழந்தைகளுக்கும் இதைத் தான் கூறி வளர்க்கிறேன். தன்னலம் இல்லாமல், மாணவ - மாணவியரின் எதிர்கால வளத்திற்கு விதை போடும், ஆரம்பப்பள்ளி ஆசிரிய சமுதாயத்திற்கு, என் வணக்கங்கள் .
- எஸ்.தீபா, சென்னை. தொடர்புக்கு: 97909 15294
