PUBLISHED ON : ஜூன் 13, 2026

பு துச்சேரி, நெட்டப்பாக்கம், அரசு பள்ளியில், 2003ல், 8ம் வகுப்பு படித்தேன். ஆசிரியை வின்சி சோபியா கிரிஜா, வகுப்பு துவங்கியதும் ஒழுக்கம், அமைதி மற்றும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றி அறிவுரைத்த பிறகே, பாடங்கள் நடத்துவார். சிறுவயதிலே தந்தையை இழந்திருந்த நான், வறுமையில் வாடினேன். தங்கை, தம்பியுடன் வாழ்ந்து வந்தேன். சோப்பு தொழிற்சாலையில் கூலி வேலை செய்து படிக்க வைத்தார், என் அம்மா.
பொருளாதார நெருக்கடி தந்த மன உளைச்சலால், கல்வியில் பின்தங்கி இருந்தேன். தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலத்தில் ஒரு மதிப்பெண் குறைவாக பெற்றதால் தோல்வி அடைந்தேன். சான்றிதழ் வாங்க பள்ளி அலுவலகத்தில் தலை குனிந்தபடி, கண்ணீருடன் நின்றிருந்தேன். அதைக் கண்டதும் அருகில் வந்து விபரம் அறிந்து, 'கலங்காதே... மீண்டும் முயற்சி செய்...' என, ஆறுதல் கூறினார், ஆசிரியை வின்சி சோபியா கிரிஜா.
தோல்வி தந்த விரக்தியால் கடலில் குதித்தேன். மூழ்கிய நிலையில் என்னை மீட்ட, கேரள மாநில சுற்றுலா பயணி, 'தோல்வி என்பது முடிவு அல்ல... அது மிகப்பெரிய வெற்றியின் துவக்கம். உதவும் குணத்தை வளர்த்துக் கொள். இறைவன் துணை இருப்பார்...' என, நம்பிக்கையூட்டி ஆறுதல் கூறினார். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினேன். உதவுவதிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறேன்.
என் வயது, 35. பிரபல அரசு மருத்துவமனையில், தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணி செய்கிறேன். பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிகள் செய்து, இரண்டு டாக்டர் பட்டங்கள் பெற்றுள்ளேன். சேவை பணியிலும் ஈடுபட்டுள்ளேன்.
பள்ளித் தேர்வில் தோல்வி கண்டு துவண்டிருந்த போது தேற்றிய, ஆசிரியை வின்சி சோபியா கிரிஜா நினைவை போற்றுகிறேன். கடலில் மூழ்கிய போது, தேவதை போல் காப்பாற்றிய, அந்த பயணி முகத்தை, அன்றாட பிரார்த்தனையில் என் நினைவில் நிறுத்தி வணங்கி வாழ்கிறேன்.
- ஆர்.ரகுவரன், புதுச்சேரி. தொடர்புக்கு: 99444 42430
