PUBLISHED ON : ஏப் 11, 2026

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை, ராஜா தேசிங்கு மேல்நிலைப் பள்ளியில், 1984ல், 10ம் வகுப்பு படித்தேன். கணித ஆசிரியர் சக்ரவர்த்தியிடம், 'டியூஷன்' படித்து வந்தேன்.
பள்ளியில் காலை அல்லது மாலையில், வருகை பதிவேடு எடுக்கப்படும். பள்ளி வருகை பதிவேடு எடுத்த பின், வகுப்பை, 'கட்' அடித்து விட்டு, வீட்டுக்கு சென்று விடுவேன்.
ஒருநாள் இதை கண்டுபிடித்த கணித ஆசிரியர் சக்ரவர்த்தி, வகுப்புக்கு வெளியே நிற்க வைத்து தண்டித்தார். 'என்னிடம் டியூஷன் படிப்பதால், யாருக்கும் சலுகை தர மாட்டேன். நாளை பெற்றோரை அழைத்து வா...' என்றார்.
அரை மணி நேரம் அழுதபடி நின்ற என்னை அழைத்து, நல்ல அறிவுரைகள் கூறினார். பின்னாளில், அதே பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் அவர் பதவி உயர்வு பெற்றார் .
அவரது அறிவுரைகளை வாழ்க்கையில் பின்பற்றியதால், தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி, மற்றவர்களுக்கு நீதி பெற்று தருவதற்கு உதவுகிறேன்.
தற்போது என் வயது, 57. என், கடமை தவறாத நல்வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட, கணித ஆசிரியர் சக்ரவர்த்தி, என் மனதில் குடியிருக்கிறார்.
- பி.ரமேஷ், சென்னை.தொடர்புக்கு: 89256 48521
