PUBLISHED ON : ஏப் 04, 2026

அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்தது, அந்த மரம். அதன் கிளைகளில் தாவி விளையாடிக் கொண்டிருந்தது ஒரு குரங்கு. சற்று நேரத்தில் சோர்வடைந்து, ஒரு கிளையில் அமர்ந்து ஓய்வெடுத்தது. அப்போது ஒரு குளவி, மரத்தில் கூடு கட்டிக் கொண்டிருந்தது.
அதை உற்றுப்பார்த்தது குரங்கு. குளவியின் செயல் குரங்குக்கு புரியவில்லை.
'என்ன செய்கிறாய்...'
குளவியிடம் கேட்டது, குரங்கு.
'என் பிள்ளைகள் தங்குவதற்கு வீடு கட்டுகிறேன்...'
சிரித்தபடி சொன்னது குளவி.
'உன் பிள்ளைகளுக்கு வீடு எதற்கு...'
'வீட்டுக்குள் முதலில் முட்டைகள் இடுவேன். சில நாட்களில், முட்டை பொரிந்து புழுக்களாக, குஞ்சுகள் வெளிவரும். அவற்றுக்கு உணவு கொடுப்பேன். அவற்றை தின்று, உருமாற்றம் அடைந்து, என்னைப் போல குளவிகளாக வளர்ந்து, வெளிவரும். என் போன்றே, பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடக்க உதவும். அதன் விளைவாக காய், கனிகள் கிடைக்கின்றன...'
குரங்குக்கு விளக்கியது குளவி.
'பிள்ளைகளுக்காக வீடு கட்டுகிறாய்... பூக்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறாய். ஆனால், என்னால் தான், யாருக்கும் உபயோகம் இல்லை...'
வருத்தமுடன் சொன்னது குரங்கு.
'அப்படி யார் சொன்னது...' என்றது குளவி.
பதில் சொல்ல தெரியாமல், தலை கவிழ்ந்தது குரங்கு.
சிரித்தபடி, 'உங்களால் தான் காடுகளே உருவாகின்றன...' என்றது, குளவி.
இதைக் கேட்டு நிம்மதியடைந்த குரங்கு, 'அப்படியா... சற்று எனக்கு புரியும் வகையில் சொல்...' என்றது.
'உன் போன்ற விலங்குகளும், பறவைகளும் பழங்களை சாப்பிட்டு விதைகளை ஆங்காங்கே போடுகின்றன. அதிலிருந்து, செடிகள் உருவாகி, மரங்களாக வளர்கின்றன. மரங்கள் பெருகி, காடுகளாக உருவெடுக்கின்றன. உலகத்தில் இயற்கையாக உருவான அனைத்துமே பயனுள்ளவைதான்... அதனால் நீ வருத்தம் அடைய வேண்டாம்...'
கலகலப்புடன் சொன்னது குளவி.
இதைக் கேட்டு, வருத்தம் நீங்கி, மகிழ்ச்சி அடைந்தது குரங்கு.
குட்டீஸ்... இயற்கையின் கொடையால் உலகம் செழிக்கிறது; இயற்கையை பாதுகாப்போம் .
வி.பவானி
