PUBLISHED ON : ஏப் 11, 2026

மதுரை, டி.வி.எஸ்., லட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளியில், 1981ல், 8ம் வகுப்பு படித்தேன். கணித ஆசிரியை மைதிலி, இனிமையானவர்; அதே சமயம் கண்டிப்பானவர். அவர் நடத்தும், 'ஜியாமென்ட்ரி, கிராப்' பாடத்தில், எனக்கு அலாதி விருப்பம். கூர்மையான பென்சிலால் நான் வரையும், 'ஜியாமென்ட்ரி, கிராப்' படங்களை சரிபார்த்து, பாராட்டி திரும்ப தருவார்.
ஒருநாள், என்னிடம் இருந்து, இந்த இரண்டு நோட்டுகளையும் வாங்கிக் கொண்டார்.
மதிய இடைவேளையின் போது, பக்கத்து வகுப்பில் படிக்கும் தோழியர், என்னுடைய 'ஜியாமென்ட்ரி, கிராப்' நோட்டுகளை தங்கள் வகுப்பில் உள்ள அனைவரிடமும் ஆசிரியை காண்பித்ததாக கூறினர்.
'எந்த வேலையை செய்தாலும், ஸ்ரீவித்யாவை போல், நேர்த்தியாக, கனக்கச்சிதமாக செய்ய வேண்டும்; அடித்தல், திருத்தல் இல்லாமல் அவள் வரைந்திருப்பதையும், 'ஆர்க்' வெட்டி இருப்பதையும் கவனித்து பின்பற்றுங்கள்' என, ஆசிரியை கூறியதாக, தோழியரும் பாராட்டினர்.
தோழியரிடம் என் திறனை ஆசிரியை பாராட்டியது, எதை செய்தாலும் நன்றாக செய்ய வேண்டும் என்ற உந்துதலையும், தன்னம்பிக்கையையும் அதிகரித்தது.
தற்போது என் வயது, 58. ஜப்பானிய மொழி கற்பிக்கும் பள்ளியை நிர்வகித்து, ஆசிரியையாக பணியாற்றுகிறேன். சிறப்பாக செயல்படும் மாணவர்களை, மனமார பாராட்ட தவறுவதில்லை. சற்று சோர்வு ஏற்படும் போது, ஆசிரியை மைதிலியை மானசீகமாக நினைவில் கொண்டு, பள்ளிக்காலத்தில் நடந்த சந்தோஷ தருணங்களை நினைவு கூர்ந்து, புது உத்வேகத்துடன் பணியை தொடர்கிறேன்.
- ஏ.ஸ்ரீவித்யா, மதுரை. தொடர்புக்கு: 99002 87638
