
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, எஸ்.பி.கே.மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 12ம் வகுப்பு படித்த போது தமிழாசிரியராக இருந்தார் பழனியப்பன். நான் எழுதிய கதை ஒன்றை அவரிடம் காட்டினேன். படித்து விட்டு, வகுப்பில் சக மாணவர்கள் முன் பாராட்டினார். அது ஊக்கம் அளிப்பதாக இருந்தது.
ஆண்டு இறுதியில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. நிகழ்வு முடிய இரவு வெகு நேரமாகி விட்டது. சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். மிதிவண்டியில் வந்த தமிழாசிரியர் மிகவும் கனிவுடன், 'உன்னிடம் எழுத்து திறமை இருக்கிறது. கதை எழுதுவதை நிறுத்தி விடாதே. நிச்சயம் பெரிய எழுத்தாளராக வருவாய்...' என்று கூறினார். அது மனதில் உற்சாகம் விதைத்தது.
தற்போது, என் வயது, 62; தனியார் பள்ளியில், தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில், என் மாணவர்களை உற்சாகப்படுத்தி, ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வர உதவியிருக்கிறேன்.
மணமேல்குடி கவி வெண்ணிலவன் என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதுகிறேன். அவை பத்திரிகையில் வெளியானதும், வானொலியில் ஒலிபரப்பானதும் என்னை பிரபலப்படுத்துகின்றன. இது போல் வெற்றிகளுக்கு துாண்டிய ஆசிரியரை பணிந்து வணங்குகிறேன்.
- பா.வெற்றிவேல், புதுக்கோட்டை.
தொடர்புக்கு: 97152 75094