PUBLISHED ON : மே 09, 2026

மதுரை, மீனாட்சி பெண்கள் அரசு கல்லுாரியில், 1971ல், பி.யு.சி., எனப்படும் இப்போதைய பிளஸ் 2 படித்தேன்.
அப்போது, மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்தேன். என் மருத்துவ படிப்பு கனவு பலிக்குமா, சமூக மற்றும் பொருளாதாரக் கடலில் எதிர்நீச்சல் போட முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.
அச்சமயம், எங்கள் தமிழ் பேராசிரியையாக பணியில் சேர்ந்திருந்தார், விஜயலட்சுமி. நாட்டுப்புற பாடல்களில் புகழ் பெறுவதற்கு முன், அவர் ஆசிரியர் பணியில் அர்ப்பணிப்புடன் இருந்தார். வகுப்பில் அவர் பேருவமைகளோடு பாடம் நடத்தினார்.
அவர் போதித்த மனோன்மணீயம், இப்போதும் எனக்கு மறக்கவில்லை. அதன் ஒவ்வொரு வரிக்கும், அவர் அளித்த விரிவான விளக்கத்தையும் மறக்க முடியாது.
அவரது வகுப்பில், மாணவியர் கட்டுண்டு இருந்தனர். அவர் பாடம் எடுத்த விதம், என் மருத்துவர் கனவை மாற்றியது; அவரைப் போல சிறந்த ஆசிரியராக வேண்டும் என்ற, ஆணித்தரமான ஆசையை ஏற்படுத்தியது.
தற்போது என் வயது, 73. அவரைப் பார்த்து நான் தேர்ந்தெடுத்த ஆசிரியர் பணியில் எனக்கு கிடைத்த ஆத்ம திருப்தி, வேறு எதிலும் நிச்சயம் கிடைத்திருக்காது. அதற்கு வித்துான்றியவர் பிரபல நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி. அவர் ஆசிரியராக பணியாற்றிய போது, அவரின் பல்லாயிரக்கணக்கான மாணவ - மாணவியரில் நானும் ஒருத்தி என்பதில், மிகவும் பெருமைப்படுகிறேன்.
- மு.இந்துமதி, சென்னை. தொடர்புக்கு: 99414 69939
