PUBLISHED ON : பிப் 22, 2025

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஹெச்.என்.யு.பி.ஆர்.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2003ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, கணித ஆசிரியையாக இருந்தார் ரமா. பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு, சொந்த பணத்தில் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பார். நானும் பலமுறை பெற்றுள்ளேன். என் தங்கையும் அவரிடமே படித்தாள்.
பள்ளி படிப்பை முடித்த பின், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன். குடும்பம் வறுமையில் வாடியது. இதை, என் தங்கை வழியாக தெரிந்து, 'உன் அக்காவை வீட்டிற்கு வரச்சொல். கல்வி உதவித்தொகை தருகிறேன்...' என்று தகவல் அனுப்பியிருந்தார். இதை கேட்டதும், உணர்வு எழுச்சியால் நெகிழ்ந்து விட்டேன். அவரது உதவும் எண்ணத்தை அறிந்து மகிழ்ந்தேன். ஆனால், அதை ஏற்க மனம் துணியவில்லை.
என் வயது, 36; தமிழக கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். வறுமையால் கல்வி தடைப்படக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் உதவிக்கரம் நீட்ட முன்வந்த ஆசிரியையிடம் கற்றதை பெருமிதமாக கருதுகிறேன். மதிப்பு மிக்க ஆசானாக மனதில் அமர்ந்திருப்பவரை போற்றி வாழ்கிறேன்.
- ந.ஆனந்தகுமாரி, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 96005 61669
