தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (4)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (4)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (4)


PUBLISHED ON : ஆக 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: பள்ளி மாணவன் மகிழ், நாய்க்குட்டிகளை விரும்புவான். கனவுலகில் அவற்றுடன் சஞ்சராம் செய்வான். இதையறிந்து, காவல்துறையில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி தரும் பிரிவுக்கு அழைத்து சென்றார் அவன் தந்தை. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறவிருந்த நாய் செங்கிஸ்கானுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடக்கவிருந்தது. அதில் பங்கேற்றான் மகிழ்.இனி -



மெல்ல நடந்து வந்தது மோப்பநாய் செங்கிஸ்கான்.

அரங்கில் கூடியிருந்த, 60க்கும் மேற்பட்ட காவல் துறை அலுவலர்களும், மேடையில் இருந்த காவல் துறை கமிஷனரும் கைதட்டி வரவேற்றனர்.

கைதட்டல், லட்சம் புறாக்கள் இறக்கை அடிப்பது போல் படபடப்பாய் ஒலித்தது.

தனித்துவமாக கைத்தட்டிய மகிழை, ஒரு மைக்ரோ நொடி கருணை பொங்க பார்த்தது செங்கிஸ்கான்.

இரு ஜோடி கண்களும், ஆரத்தழுவி குசலம் விசாரித்தன.

செங்கிஸ்கானுடன் பேசியபடியே, மேடைக்கு அதை நடத்தி சென்றான் காண்டீபன்.

மேடைக்கு வந்த செங்கிஸ்கானை மரியாதையுடன் வணங்கினார் காவல் துறை கமிஷனர்.

''வணக்கம் தி கிரேட் செங்கிஸ்கான்...''

பதிலுக்கு நளினமாய் குரைத்து, வலது முன்னங்காலை உயர்த்தி பணிவைக் காட்டியது செங்கிஸ்கான்.

சிறு இருக்கை போட்டிருந்தனர்; அது மினியேச்சர் சிம்மாசனம் போல் இருந்தது.

''உன் இருக்கையில் உட்கார் செங்கிஸ்கான்...''

தலையை ஆமோதிப்பாய் அசைத்து இருக்கையில் அமர்ந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது.

''நம் செங்கிஸ்கான் மோப்ப நாய், டிச., 12, 2015ல் பணிக்கு சேர்ந்தது. இதன் திறன்மிக்க பணியால் கண்டுபிடித்தவை, 12 கொலை குற்றவாளிகள், 44 போதை பொருள் குற்றவாளிகள், 20 வெடிகுண்டு பதுக்கல்கள் மேலும், 2020ல் நடந்த ஒரு நகை கடை கொள்ளையில், 140 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டன...

''குற்றம் நடந்த, 24 மணி நேரத்தில், குற்றவாளிகளை கண்டுபிடித்தது செங்கிஸ்கான். அந்த செயலை புகழும் போது, அதற்கு பயிற்சி அளித்த காண்டீபனையும் பாராட்ட வேண்டும். பணியாற்றிய காலங்களில், ஒரு நாள் கூட மோப்பநாயை அவர் பிரிந்ததில்லை...

''செங்கிஸ்கான் ஓய்வு பெற்று செல்வது மிகவும் சோகத்தை அளிக்கிறது. ஆனால், அதை பிரிந்து, அந்த துயரை காண்டீபன் எப்படி தாங்குவார் என்பது தெரியவில்லை; இருந்தாலும், என் வாழ்த்துகளும், நன்றிகளும்...

''செங்கிஸ்கானை தத்தெடுக்க ஒரு தந்தையும், மகனும் இதோ காத்திருக்கின்றனர். ரத்தம், வெடி மருந்து, போதைப்பொருள் துர்நாற்றம் போன்றவை இன்றி, இனி நிம்மதியான வாழ்க்கை புது இடத்தில் கிடைக்கட்டும்...''

செங்கிஸ்கானுக்கும், காண்டீபனுக்கும் மாலை அணிவித்து, சால்வை போர்த்தினார் காவல்துறை கமிஷனர்.

தொடர்ந்து, கைத்தட்டலால் நிறைந்தது அரங்கம்.

ஏற்புரை நிகழ்த்த ஒலிபெருக்கி முன் வந்தான் காண்டீபன்.

''அனைவருக்கும் வணக்கம். எனக்கும், செங்கிஸ்கானுக்கும் உள்ள உறவு ஆத்மார்த்தமானது. சென்ற பிறவியில், நான் செங்கிஸ்கானாகவும், அது நானாகவும், பிறந்தோமோ என்னவோ... என் மனைவியை விட செங்கிஸ்கான் மீது தான் அதிக பிரியம் வைத்திருக்கிறேன். நடந்த சம்பவம் ஒன்றை கூற விரும்புகிறேன்...

''ஒரு வீட்டில், ஆறு கொலைகள் நடந்திருந்தன. கொலையாளி யார் என்பது மர்மமாய் இருந்தது. கொலையாளியைத் தேடி செங்கிஸ்கான் ஓட ஆரம்பித்தது. நானும், அசுர வேகத்தில் தொடர்ந்தேன். ஒரு பாழடைந்த மண்டபத்துக்குள் ஓடியது. முகத்தில் முகமூடி அணிந்த உருவம், எங்கள் மீது பாய்ந்தது. எனக்கும், அந்த முகமூடிக்கும் இடையே ஜீவ மரண போராட்டம்...

''அப்போது, எங்களுக்கு இடையே புகுந்தது செங்கிஸ்கான். இரண்டு கத்திக் குத்துகள் வாங்கி, முகமூடி உருவத்தை தாக்கி சிறை பிடித்து விட்டது; அதில் ஏற்பட்ட காயங்கள் ஆற, நான்கு மாதங்கள் ஆயின. இப்படி, நுாற்றுக்கணக்கான சம்பவங்கள் உள்ளன. உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் கதையில், இரு துப்பறியும் கதாபாத்திரங்கள் வரும்...

''அவை ஹீரோ ஷெர்லாக் ஹோம்ஸூம், அவரது நண்பர் டாக்டர் வாட்சனும் தான்... நிறைய தருணங்களில் நானும், செங்கிஸ்கானும், ஷெர்லாக் ஹோம்ஸ், வாட்சன் போல இணைந்து செயல்பட்டு இருக்கிறோம். குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் செங்கிஸ்கான்...

''இதை, நான் தத்து எடுத்து கொள்கிறேன் என, காவல் துறையை இறைஞ்சினேன். அதற்கு மறுத்து விட்டனர். ஜூலியஸ் சிசர் என்ற பெயருள்ள புது மோப்ப நாய்க்கு பயற்சி கொடுக்க என்னிடம் ஒப்படைத்துள்ளனர்...

''தத்தெடுக்க இருக்கும் ஐயா... மகிழ் உங்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள். என் செங்கிஸ்கானை மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ளுங்கள்...''

குரல் உடைந்து, முழங்கால் பணிய கண்ணீர் வடித்தான் காண்டீபன்.

அவன் கதறலை உணர்ந்து, மோப்ப நாயின் விழியோரம் கண்ணீர் அருவி பாய்ந்தது.

ஒரு மாதிரி ஊளையிட்டது செங்கிஸ்கான்.

''இனி, அது எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாக இருக்கும்...''

கட்டை விரல் உயர்த்தி அறிவித்தான் மகிழ்.

செங்கிஸ்கானின் வருகை, வீட்டை தலைகீழாய் புரட்டி போட போகிறது என்பதை அறிந்தானில்லை மகிழ்.



- தொடரும்...

ஆர்னிகா நாசர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us