PUBLISHED ON : மார் 14, 2026

வேலுார் மாவட்டம், குடியாத்தம், நேஷனல் நடுநிலைப் பள்ளியில் 1966ல், ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன். விஜயதசமி அன்று, என் பிஞ்சு கைவிரல்களை வாஞ்சையோடு பிடித்து அரிசியில், 'அ' எழுத வைத்து, அறிவுக் கண்ணை திறந்தவர், ஆசிரியர் நடராஜன்.
திட்டி படிக்க வைப்பதை விட, தட்டிக் கொடுத்து படிக்க வைத்தால் மாணவன் உன்னத நிலையை அடைவான் என்பதை, அனுபவபூர்வமாக உணர வைத்தவர். 6 - 8ம் வகுப்பு வரை, அவர் தான் என் வகுப்பு ஆசிரியராகவும் இருந்தார். அவரிடமே, 'டியூஷன்' படித்தேன். டியூஷனுக்கு குறைந்த கட்டணமே வாங்கினார். ஏழை மாணவர்களுக்கு, அதுவும் வாங்கமாட்டார்.
ஒவ்வொரு மாத இறுதியிலும் தேர்வு வைத்து, முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பென்சில், பேனா, ஜியாமென்ட்ரி பாக்ஸ், நன்னெறி கதை புத்தகங்கள் என, ஏதாவது பரிசுகள் வழங்கி, உற்சாகப் படுத்துவார்.
'உங்களுக்கு கிடைக்கும் பணத்தை, பரிசுகள் வழங்க செலவழிப்பது ஏன்...' என, ஒருமுறை கேட்டேன். அதற்கு, 'மாணவர்களுக்கு நான் கொடுக்கும் இந்தப் பரிசு, அவர்களை மேலும் படிக்க ஊக்குவிக்கும். பரிசு கொடுக்கும் பழக்கம், அவர்களுக்கும் ஆழ்மனதில் பதிந்து நற்செயல்களை செய்யத் துாண்டும்...' என்றார்.
அவரது தன்னலம் பாராத உயரிய சித்தாந்தங்களை, என் வாழ்விலும் கடைப்பிடித்து வருகிறேன்.
தற்போது என் வயது, 65. புதுடில்லியில், மத்திய அரசு பணியில் மிகவும் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அவரிடம் படித்த பலர், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய பதவிகளில் உள்ளனர்.
ஒரு நல்லாசிரியர், சிறந்த சமூகத்தை உருவாக்குகிறார் என்பதற்கு, அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வகுப்பாசிரியர் நடராஜன் கற்றுத்தந்த நற்சிந்தனை தான், இப்போதும் எனக்கு வாழ்க்கையை ரசிக்க வைக்கும் பாடமாக விளங்குகிறது.
- ஆர். ஹரிகோபி, புதுடில்லி.தொடர்புக்கு: 98712 72732
