PUBLISHED ON : மார் 28, 2026

பாளையங்கோட்டை, துாய சவேரியர் பள்ளியில், 1979ல், 10ம் வகுப்பு படித்தேன். சிறந்த நகைச்சுவை, மேடை பேச்சில் வல்லவரான ராசாமணி, எங்கள் வகுப்பு ஆசிரியராக இருந்தார்.
வகுப்பில் பாடத்திற்கு இடையே அவர் சொல்லும் சிலேடைகளும், நகைச்சுவை துணுக்குகளும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
தேர்வுக்கு முன், பள்ளி இறுதி நாளில், ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டினோம். அவருக்கே உரிய பாணியில், 'போஸ்ட்மேனும், போலீஸ்காரரும் தேடாமல் வாழுங்கள்...' என்று வாழ்த்தி, அறிவுரையை விளக்கினார்...
'நீங்கள் எங்கு வசித்தாலும், அந்தப் பகுதிக்கு புதிதாக வரும் தபால்காரர், உங்கள் பெயர், முகவரியை விசாரித்தால், அந்தப் பகுதியில் உள்ள எவரும் எளிதில் அடையாளம் சொல்லும் வகையில், பிறருடன் கலந்து பழகி, புகழுடன் இருங்கள்...
'அதேபோல, வாழ்நாள் முழுதும் எந்த குற்றச் செயலுக்காகவும் போலீஸ் உங்களை தேடாதவாறு நேர்மையான வாழ்க்கை வாழுங்கள்...' என்றார்.
தற்போது, என் வயது, 62. வேளாண்மை துறையில் இணை இயக்குனராக பணியாற்றி, நற்பெயருடன் ஓய்வு பெற்றேன். கடந்த, 2009ல், வகுப்பு ஆசிரியர் ராசாமணி மறைந்து விட்டாலும், அவரது அறிவார்ந்த, பொருள் பொதிந்த வார்த்தை விளையாட்டுகளால், இன்னும் என் போன்றோர் மற்றும் இலக்கிய ரசிகர்கள் இதயங்களில் வாழ்கிறார்.
- தி.சு.பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி. தொடர்புக்கு: 94861 56442
