PUBLISHED ON : ஏப் 25, 2026

அன்று வெள்ளிக்கிழமை சீக்கிரமே முடித்து விட்டாள், எட்டாம் வகுப்பு படிக்கும் காவியா. அப்பா சீதாராமன், துணிக்கடை வைத்துள்ளார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், வியாபாரம் முடிந்து கடையை மூடுவதற்கு முன், சாமிக்கு பூஜை செய்து, கடை பணியாளர்களுக்கு பொரி, சுண்டல் பிரசாதத்தை கொடுப்பது, சீதாராமனின் வழக்கம்.
அன்று அம்மாவுடன், அப்பாவின் கடைக்கு சென்றாள், காவியா. வழக்கம் போல், வியாபாரம் முடிந்து, சாமிக்கு பூஜை செய்தார் சீதாராமன். பணியாளர்களுக்கும், தன் மனைவி, மகளுக்கும் பொரி, சுண்டல் விநியோகித்தார்.
கடையை மூடுவதற்கு முன், ஒரு முழு பூசணிக்காயை திருஷ்டி சுற்றி, சாலை நடுவே போட்டு உடைக்க தயாரானார்.
அப்பாவை தடுத்தாள், காவியா.
“கடை திருஷ்டி போறதுக்காக பூசணிக்காய் உடைப்பது வழக்கம் தானம்மா... ஏன், தடுக்கிறாய்...” என்றார், சீதாராமன்.
“அப்பா நீங்க பண்ணறது மிகப்பெரிய தப்பு. திருஷ்டிக்காக நீங்க ரோட்டில் போட்டு உடைக்கிற பூசணிக்காய் நாலா பக்கமும் சிதறி விழும். அதை கவனிக்காம, ரோட்டில் வர்ற இருசக்கர வாகன ஓட்டிகள், அதில் வழுக்கி விழுந்து, உயிருக்கே கூட ஆபத்தா முடியும்...
“அதனால் திருஷ்டிக்காக உடைக்கிறதை, கடை வாசலிலேயே உடைத்து விடுங்கள், அப்பா. ரோட்டில் உடைக்க வேண்டாம்...' என்றாள், காவியா.
இதுவரை தான் செய்த தவறை சீதாராமன் உணர்ந்தார். மகள் காவியா கூறியபடி பூசணிக்காயை கடை வாசலிலேயே உடைத்தார். அறிவார்ந்த மகளுக்கு, வீட்டிற்கு போய் திருஷ்டி சுற்றிப்போட வேண்டும் என நினைத்துக் கொண்டாள், அம்மா.
குட்டீஸ்... நம் சுயநலத்திற்காக, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் காரியங்களை செய்யக்கூடாது.
- எம்.பி.தினேஷ்
